திங்கள், 30 ஜனவரி, 2017

பாலைவனத்தில் கற்கள் நகரும் காரணம் என்ன?




அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் ஓரிடத்தில் பாறைகள் தாமாக இடம் பெயர்ந்து செல்கின்றன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக இது பெரும் புதிராக இருந்து வந்துள்ளது. அவை இடம் பெயரும் காரணத்துக்கு இப்போது விடை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பாறைகள் இவ்விதம் இடம் பெயரும் இடத்தின் பெயர் ரேஸ்டிராக் பிளாயா என்பதாகும். இது மரணப் பள்ளத்தாக்கு எனப்படும் பாலைவனத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பெயர் தான் ரேஸ்டிராக்கே தவிர இங்கு ரேஸ் எதுவும் நடப்பதில்லை.  அதை ஒரு பாலைவனம் என்றும் சொல்லலாம். ஆனால் மணல் கிடையாது. என்றோ வற்றிப்போன ஏரியின் படுகை என்றும் வருணிக்கலாம்.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை செடி கொடி கிடையாது. புல் பூண்டு கிடையாது. விலங்குகளும் இல்லை. மனித நடமாட்டமும் கிடையாது.

ஆனால் இங்குமங்குமாக சிறிய பாறைகள் கிடக்கின்றன. வெடிப்பு விட்ட  தரையில் அந்தப் பாறைகள் சட்டென்று கண்ணில் புலப்படும். பல பாறைகளின் எடை சுமார் 13 கிலோ. 300 கிலோ எடை கொண்ட பாறைகளும் உண்டு. ஓரிடத்தில் கிடக்கின்ற பாறை பின்னர் பார்த்தால் இடம் மாறியிருக்கும். அந்தப் பாறை நகர்ந்து சென்ற தடம் தெரியும்.

இவை கால் முளைத்த பாறைகள்.ஒன்றல்ல பல  பாறைகள் நகர்ந்து சென்ற தடம் தெளிவாகத் தெரிகிறது. தடத்தை வைத்துச் சொல்வதானால் சில பாறைகள் 1500 அடி அளவுக்கு நகர்ந்துள்ளன. அந்தப் பாறைகளை யார் நகர்த்தியிருப் பார்கள்? காற்றில் உருண்டு சென்றிருந்தால் இப்போது தெரிகின்ற தடம் ஏற்பட வாய்ப்பில்லை. யாராவது கயிற்றைக் கட்டி இழுத்துச் சென்றால் மட்டுமே பாறை நகர்ந்து சென்ற தடம் ஏற்பட முடியும்.

அப்படி யாரேனும் இழுத்துச் சென்றிருந்தால் அவரது காலடித் தடமும் மண்ணில் பதிவாகியிருக்கும். ஆகவே பாறைகள் தானாகத் தான் நகர்ந்து சென்றிருக்க வேண்டும். அல்லது ஏதோ ஒன்று அவற்றை நகரச் செய்திருக்க வேண்டும்.

1900 ஆம் ஆண்டிலிருந்தே இந்த காரணம் குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டு வந்துள்ளன. எதிலும் காரணத்தைக் காண விரும்புகிறவர்களோ இது வேற்றுலக வாசியின் வேலையாக இருக்கலாம் என்று கூறினர். ஆனால் இந்தப் பாறைகள் நகருவதை கடந்த காலத்தில் யாருமே நேரில் கண்டதில்லை. கேமராவிலும் இது பதிவாகியது இல்லை. இந்த நிலையில் தான் நிபுணர் ஜேம்ஸ் நாரிஸ்  அங்கு தானியங்கி காமிராவைப் பொருத்தி விட்டு வந்தார். அது விட்டு விட்டு அவ்வப்போது படம் எடுக்கின்ற கேமிராவாகும்.

அந்த காமிரா சரியாக செயல்படுகிறதா என்று சோதிக்க அண்மையில் அவர் ரேஸ்டிராக் பிளாயாவுக்குச் சென்றார். அவருடன் ரிச்சர்ட்  நாரிஸும் சென்றார்.

அங்கு அவர்கள் ஒன்றல்ல சுமார் 60 பாறைகள் தாமாக நகர்வதைக் கண்ணால் கண்டனர். அவை நகர்ந்த போது லேசான சத்தமும் கேட்டது. பாறைகளை நகர்த்தியது வேறு எதுவுமல்ல. நீரில் மிதக்கின்ற பனிக்கட்டி வில்லைகள்தான். தண்ணீர் எங்கிருந்து வந்தது?

பாறைகள் எப்படி நகருகின்றன என்பதை பின்னர் ஜேம்ஸ் நாரிஸ் விவரித்தார். பாறைகள் நகருவதில் பெரிய காரணம் எதுவுமில்லை.

அந்த இடத்தில் மழை என்பது அபூர்வம். ஒரு ஆண்டில் இரண்டு அங்குலம் மழை பெய்தால் உண்டு. குளிர் காலத்தில் இப்படி மழை பெய்தால் களிமண் பூமி என்பதால் இரண்டு மூன்று செண்டிமீட்டர் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்கும்.

அது கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே தேங்கும் தண்ணீரின் மேற்புறம் உறைந்து போகும். உறைந்த பனிக்கட்டி சில்லு சில்லுகளாக நீரில் மிதக்கும்.  தேங்கும் தண்ணீர் குறைவு என்பதால் பாறைகளின் மேற்புறம் தண்ணீருக்கு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும்.

அந்தப் பகுதியில் குளிர்காலத்தில் தென்மேற்கிலிருந்து வட கிழக்கு நோக்கி மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும். இதன் விளைவாக மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் பாறைகள் மீது மோதும். இவை மெல்லியவை தான். ஆனால் கெட்டியானவை.

தேங்கும் தண்ணீர் காரணமாக நீருக்கடியில் உள்ள களிமண் தரை சறுக்கிச் செல்வதற்கு உகந்த அளவில் இருக்கும்.  கடும் காற்று பனிக்கட்டி சில்லுகளைத் தாக்கும் போது அவை பாறை மீது மோத பாறைகள் சறுக்கியபடி நகருகின்றன. காற்று விட்டுவிட்டு அடிக்கும் போது ஒவ்வொரு தடவையும் பனிக்கட்டி சில்லுகள் மோதும் போது பாறை சில மில்லி மீட்டர் நகரலாம்.

பின்னர் வெயில் காரணமாக தண்ணீர் ஆவியாகி விடும். பாறைகள் நகர்ந்த இடம் காய்ந்து தெளிவான தடமாகத் தெரியும். குளிர்காலமாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். மிதக்கும் பனிக்கட்டி சில்லுகள் இருக்கவேண்டும்.கடும் காற்று வீச வேண்டும். இப்படியாக பல நிலைமைகளும் ஒன்று சேரும் போது தான் பாறைகள் நகருகின்றன.

இந்தப் பகுதியானது  சிறிது கூட மேடுபள்ளம் இன்றி நூல் பிடித்தது போல சமதரையாக இருப்பதும் பாறைகள் நகருவதற்குக் காரணமாக உள்ளது. பாறைகள் நகரும் சூழ்நிலைகள் உண்டானாலும் அந்தத் தடவை மிகச் சிறிது தூரமே நகரலாம். வேறு சில சமயங்களில் அதிக தூரம் நகரலாம்.

அல்லது  தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பாறைகள் அதே இடத்தில் காணப்படலாம். ஆகவே பாறைகள் இடம் பெயருவது என்றோ எப்போதோ நடைபெறுவதாக இருக்கிறது.. ஆகவேதான் இது யார் கண்ணிலும் படாமல் இதுவரை அய்யமாகவே இருந்து வந்துள்ளது.

-விடுதலை,25.9.14

70 ஜடைகளுடன் 3,300 ஆண்டுகளுக்கு முந்தைய பெண் உடல் கண்டெடுப்பு




எகிப்தில், 70 ஜடைகளுடன் கூடிய சிகையலங் காரத்துடன் 3,300 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் உடலை, தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

அந்நாட்டின் புராதன நகரமான அமரானாவில் நடைபெற்று வரும் அகழ்வாராய்வில், அந்தப் பெண்ணின் உடல் கிடைத்துள்ளது.

அந்தப் பெண்ணின் உடல், "மம்மி'யாகப் பாதுகாக்கப் படவில்லை எனவும், ஒரு சாதாரண தரைவிரிப்பில் சுற்றப்பட்டிருந்த நிலையில் அது கண்டெடுக்கப்பட்ட தாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஜொலந்தா பாஸ் கூறுகையில், ""அந்தப் பெண்ணின் தலைமுடி மிகவும் சிக்கலான முறையில், சுமார் 70 ஜடைகளாகப் பின்னப் பட்டுள்ளது. பெண்ணின் வயது மற்றும் பிற விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்'' என்று தெரிவித்தார்.

இப்பகுதியிலிருந்து, சிகையலங்காரம் அழியாத நிலையில் மேலும் சில உடல்களும் கண்டெடுக்கப் பட்டுள்ளன.

ஆங்கில தொல்லியல் ஆய்வு இதழான ஜர்னல் ஆஃப் எகிப்தியன் ஆர்க்கியாலஜி' யில் இந்த விவரம் வெளியாகி யுள்ளது.
-விடுதலை,25.9.14

பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய மரபணு கண்டுபிடிப்பு


மதவாதங்களுக்கு மரண அடி!
பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய மரபணு கண்டுபிடிப்பு

குழந்தை உருவாகும் போது அக் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எக்ஸ், ஒய் என்கிற குரோமோ சோம்கள் மட்டுமே நிர்ணயிப்பதில்லை. துணை மரபியல் கூறாக உள்ள மிகச் சிறிய மரபணுக்களே முக்கி யப் பங்கை வகிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் (சிஷீறீபீ ஷிஜீக்ஷீவீஸீரீ பிணீக்ஷீதீஷீக்ஷீ லிணீதீஷீக்ஷீணீஷீக்ஷீஹ்-சிஷிபிலி) அறிவியலாளர்கள் சிறிய மரபணுக்களின் துணைக் குழுக்கள் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளின் குறியீடுகளாக உள்ளதைக் கண்டறிந்தார்கள். அவற்றை மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் (னீவீஸிழிகி) என்று அழைக்கின்றனர். அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தபோது, அவை ஆண், பெண் திசுக்களை வேறுபடுத்துவதில் முக்கியப்பங்கினை ஆற்றுவதையும் கண்டு வியந் தார்கள்.

மைக்ரோ ஆர்.என்.ஏக்கள் சிறிய தொகுதிகளாக ஆர்.என்.ஏ.வில் உள்ளன. அவை செயலாற்றும்போது, மரபணுக்களில் ஒன்று அல்லது பல புரோட்டீன் குறியீடுகளை உருவாக்குகின்றன. அவற்றின்மூலம் எந்த ஒரு மரபணுவையும் குறிப்பிட்டு செயலிழக்கச் செய்ய முடியும். பல கூறுகளுடன் கூட்டு மரபணுக் களை திட்டமிட்டவகையில் வளர்ச்சியடையவும் செய்ய முடியும்.

-விடுதலை,22.8.14

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

வால் நட்சத்திரத்தின் வரலாறு!



பண்டையக் காலத்திலேயே வால் நட்சத்திரங்களின் (Comet) வரவு உலகத்தில் பயத்தை ஏற்படுத்தியது. சில வால் நட்சத்திரங்கள் தோன்றியபோது உலகில் முக்கியமான சில துயர நிகழ்வுகள் நடைபெற்றன என்பதே அந்த பயத்துக்குக் காரணம். ஆனால் உலகத்தையே புரட்டிப் போட்ட இரண்டு உலக மகா யுத்தங்களின்போது வால் நட்சத்திரங்கள் எதுவும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வால் நட்சத்திரங்களும், கோள்களைப் போலவே சூரிய மண்டலத்தைச் சேர்ந்தவைதான். ஆனால் கோள்களின் பாதை போல் இல்லாமல், இவற்றின் பாதை மிகவும் வேறுபட்டது. பெரும்பாலும் சூரியனுக்கு மிகவும் அருகில் இவை செல்கின்றன;
பிறகு சூரியனுக்கு வெகு தூரத்தில் போய் விடுகின்றன. ஒழுங்கற்ற நீள்வட்டப் பாதையில் இவை சுற்றுகின்றன. சூரியனை ஒரு முறை சுற்றிவரச் சில வால் நட்சத்திரங்களுக்குப் பல நூற்றாண்டுகள் பிடிக்கின்றன.
ஏறக்குறைய பாதி வால் நட்சத்திரங்கள் மேற்கிலிருந்து கிழக்குப் புறமாகவும் மற்றவை கிழக்கிலிருந்து மேற்குப் புறமாகவும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றின் பயங்கர பாகமாக நினைக்கப்படும் நீண்ட வால், உண்மையில் சேதம் ஒன்றும் விளைவிக்க இயலாதது. வால் நட்சத்திரங்களுக்கு மூன்று பாகங்களுண்டு.
இவற்றின் தலை அல்லது உட்கரு பெருவாரியான சிறுசிறு பொருள்களால் உருவானது. தலையைச் சுற்றிலும் புகை போன்ற ஒரு மண்டலம் சூழ்ந்துள்ளது. இதுவே வால் நட்சத்திரங்களை, தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்க உதவுகிறது. சூரிய வெப்பத்தால் தலையின் பொருள்கள் சில வாயுக்களை வெளியிடுகின்றன. அவையே தலையைச் சுற்றிப் புகைபோல் சூழ்ந்திருக்கின்றன.
இந்தப் புகை மண்டலத்தில் கார்பன் மோனாக்ஸைடு போன்ற வாயுக்களும், சூரியனுக்கு மிக அருகில் இவை செல்லும்போது சோடியம், இரும்பு, நிக்கல் முதலிய உலோகங்களின் ஆவிகளும் இருப்பதாக நிறமாலைக் காட்டியின் உதவியால் கண்டிருக்கிறார்கள்.
சூரியனின் ஒளி இந்த வாயுக்களின் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதால், வாயுக்களும் அவற்றுடன் சேர்ந்த துகள்களும் தூசிகளும் சூரியனுக்கு எதிர்ப் புறமாகத் தள்ளப் பெற்று நீண்ட வாலாகத் தோற்ற மளிக்கின்றன.
சூரியனை வால் நட்சத்திரம் நெருங்கும்போது ஒளியின் அழுத்தம் அதிகரிப்பதால் வால் நீளமாகிறது. இந்த வால் இருக்கும் திசை எப்போதும் சூரியனுக்கு எதிர்ப்புறமாகவே இருக்கிறது. சில சமயம் பல கோடிக்கணக்கான மைல் நீளத்துக்கு வானத்தில் இந்த வால் காட்சியளிக்கலாம்.
வால் நட்சத்திரத்தின் எடை முழுவதும் அதன் தலையிலேயே உள்ளது. அது ஏறக்குறைய ஒரு சிறு கோளின் எடைக்குச் சமமாக இருக்கலாம்.
ஜெர்மானிய கணித வல்லுநர் கவுஸ் கண்டுபிடித்த ஒரு முறையைக் கொண்டு இந்த வால் நட்சத்திரங்களின் முழுப் பாதையையும் கணித்துவிடலாம். வால் நட்சத்திரங்கள் எப்படி உருவாயின என்பது இன்னும் தெரியவில்லை. ஒருவேளை பெரிய கிரகங்களான வியாழன் அல்லது  சனி ஆகிய வற்றிலிருந்தோ சூரியனிடமிருந்தோ இவை வெளியே தள்ளப் பெற்றிருக்கலாம்.
2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் அய்ரோப்பிய விண்வெளிக் கழகத்தின் ரோஸெட்டா என்னும் விண் பெட்டகம் 67 பி -கரியுமோ கரசிமங்கோ என்னும் வால் நட்சத்திரத்தை ஆராய ஏவப்பட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ரோஸெட்டா விண் பெட்டகம் சூரியனைச் சுற்றியுள்ள வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ரோஸெட்டா விண்கலத்திலிருந்து பிரிந்த பிலே லேண்டர் எனும் ஆய்வுக்கலம் 67 பி - கரியுமோ கரசிமங்கோ வால் நட்சத்திரத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதன் மூலம் ஒரு வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் முதல் விண் ஆய்வுக்கலம் எனப் புகழ் பெற்றது பிலே லேண்டர்.
ரோஸெட்டாவிலிருந்த மற்றொரு ஆய்வுக்கலமான ரோஸெட்டா ஸ்பேஸ் புரோப் ஆய்வுக்கலம், வால் நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருக்கிறது.பிலே லேண்டர் அந்த வால் நட்சத்திரத்தின் தலைப் பகுதியில் சென்று இறங்கியது.
பூமியிலிருந்து 51 கோடி கி.மீ. தொலைவில் மணிக்கு 55,000 கி.மீ. வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வால் நட்சத்திரத்தில் ஒரு கி.மீ. சுற்றளவு கொண்ட அகில்கியா என்னும் இடத்தில்தான் மிகப் பாது காப்பாக பிலே லேண்டர் தரை இறங்கியது.
வால் நட்சத்திரப் பரப்பை ஆராய்வது, அதில் அடங்கியுள்ள தனிமங்கள் மற்றும் தாதுக்களைப் பற்றிய ஒரு வேதியியல் அட்டவணை தயாரிப்பது  போன்றவற்றை நோக்கமாகக் கொண்ட பிலே லேண்டரின் ஆய்வுப் பணி 2015ஆம் ஆண் டிலும் தொடர்கிறது.
பிலே லேண்டர் அந்த வால் நட்சத்திரத் திலிருந்து சிமிக்ஷிகி என்ற நிழற்படக் கருவி மூலம் அனுப்பிய அபூர்வ நிழற்படம் வால் நட்சத்திரத்தின் இரண்டு தோற்றங்களை சித்தரிக்கின்றது. வால் நட்சத்திரம் தோன்றினால் நாட்டின் அரசருக்கு கெடுதல் என நம்பிய காலம் மாறி, இப்போது வால் நட்சத்திரத் திலேயே மனிதன் அனுப்பிய ஆய்வுக்கலம் இறங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பது அறிவியல் மாற்றமே!

செவ்வாய்க் கோளுக்கு மனிதர்கள் பயணம்: 2 ஆண்டு தாமதம்
செவ்வாய் கோளுக்கு முதலாவதாக 4 பேரை வருகிற 2024ஆம் ஆண்டில் அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கோளுக்கு ஆள் அனுப்புவதில் 2 ஆண்டுகள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 2026ஆம் ஆண்டு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள். அவர்கள் 2027ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளைச் சென்றடைவர்.
-விடுதலை,26.3.15

வியாழன், 26 ஜனவரி, 2017

வந்துவிட்டது ஒயர்லெஸ் சார்ஜர்


வந்துவிட்டது!மின் கம்பியில்லாமல் கருவி களுக்கு மின்னேற்றம் செய்ய முடியுமா? ‘ஒயர்லெஸ் சார்ஜிங்’ எனப்படும் இத் தொழில்நுட்பம், இதுவரை நிகழ மறுக்கும் அற்புதமாகவே இருந்தது.

ஆனால், அண்மையில், ‘எனர்கஸ் வாட்அப்’ என்ற நிறுவனம், கம்பி இல்லாமலேயே மொபைல் போன்ற சாதனங்களுக்கு மின் னேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை வெற்றி கரமாக அறிமுகப்படுத்தி யிருக்கிறது.

மின்காந்த அலைகளை அனுப்பும் வாட்அப் சாதனத்திற்கு, சில அடிகள் தள்ளி மொபைலை வைத்தால், அது சார்ஜ் ஆகிவிடுகிறது. தற்போதைக்கு வாட்அப் சாதனத்திற்கு மிக அருகே வைத்தால் தான் சார்ஜ் ஆகிறது.

ஆனால், 2017 இறுதிக்குள், 2-4 அடி, 1,0-15 அடி ஆகிய தொலைவுகளில் தேவையான சாதனங்களை வைத்தால் சார்ஜ் செய்யும், ‘மின் பரப்பி’ கருவிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக எனர்கஸ் வாட்அப் அறிவித்துள்ளது.

மொபைலிலேயே கண் பரிசோதனை!



கண் கண்ணாடிகளை இணையத்திலேயே வாங்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், தூரப் பார்வையா, கிட்டப் பார்வையா என்பதை அறிய, மருத்துவர்களை நாடவேண்டியிருக்கிறது. இப்போது அதற்கு மாற்றாகவும் ஒரு கருவி வந்திருக்கிறது.

அமெரிக்காவில், கலிபோர்னியாவிலுள்ள, ‘அய்க்யூ’   என்ற நிறுவனம், அதே பெயரில் உருவாக்கியிருக்கும் சாதனத்தை ஒரு ஸ்மார்ட்போனில் பொருத்திக்கொள்ள வேண்டும். அதனுடன், இலவசமாகக் கிடைக்கும், ‘மை அய்க்யூ’ என்ற மொபைல் செயலி யையும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அய்க்யூ சாதனம் வழியே மொபைலில் தெரியும் சில காட்சி களை பார்த்து, தெளிவாகத் தெரியும் வரை, செயலியில் தெரியும் பொத் தான்களை அழுத்தி சரி செய்ய வேண்டும். இரு கண்களையும் தனித் தனியே சோதித்த பின், அந்த சோதனை முடிவுகளை அய்க்யூ நிறுவனத்தின் மேகக் கணினிக்கு அனுப்பவேண்டும். அவ்வளவு தான்.

அந்த நிறுவனம் உங்கள் கண்களுக்கு, ‘பவர்’ என்ன என்பதை தெரிவிக்கும். அந்த அளவுகளை பயன்படுத்தி, கண்ணாடிக் கடை அல்லது கண்ணாடி விற்கும் இணைய தளத்திற்கு அனுப்பி ஆர்டர் செய்யலாம்.

-வடுதலை,26.1.17

இதயத் துடிப்பே கடவுச் சொல்!  புதிய தொழில்நுட்பம்




இணையவழி மருத்துவத்தின்போது தனிநபரின் உடல்நலம் பற்றிய மின்னணுத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக, அவரது இதயத் துடிப் பையே கடவுச் சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பிங்கம்டன் பல்கலைக்கழகப் பேராசியர் ஷன்பெங் ஜின் கூறியதாவது:

தற்போது தகவல்களைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும், செலவு பிடிப்பவையாகவும் உள்ளன.

அதனால், இந்தத் தொழில்நுட்பங்களை இணையவழி மருத்துவம், செல்லிடப் பேசி மூலமான மருத்துவம் போன்ற வசதிகளைப் பயன்படுத்தும்போது, ரகசியத் தகவல்களைப் பாதுகாக்க அத்தகைய பாரம்பரியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பத்துக்கு மாற்றாக, எளிமையான, மலிவான, மருத்துவத் துறைக்கென்று பிரத்யேகமான தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

அதன்படி, நோயாளியின் “இசிஜி’ பரிசோனை வரைபடத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தி அவரது உடல்நிலை குறித்த விவரங்களைப் பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருகிறோம்.

பொதுவாக, நோயாளிகளின் உடல்நிலையை அறிந்துகொள்ள “இசிஜி’ பரிசோதனைதான் மிக அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, அந்தப் பரிசோதனை வரைபடத்தை கடவுச் சொல்லாகப் பயன்படுத்தத் தீர்மானித்தோம்.

இதன்மூலம், நோயாளிகளின் உடல்நலம் குறித்த மின்னணு தகவல்களை சுலபமாகவும், மலிவாகவும் பாதுகாக்க வழி ஏற்படும் என்றார் பேராசிரியர் ஷன்பெங் ஜின்.
-விடுதலை,27.1.17

வியாழன், 12 ஜனவரி, 2017

உயிரினங்களின் இறுதிப் பொது மூதாதையின் வரைபடம்



ஜெர்மனியைச் சேர்ந்த உயிரி -வேதியியலாளர் பில் மார்ட்டின் உயிரினங்களின் இறு திப் பொது மூதாதையின் கிளை-வரை படத்தை வெளியிட்டிருக் கிறார்.

ஒரு செல் உயிரினங்களின் டி.என்.ஏ.க்களையெல்லாம் ஆராய்ந்து அவற்றின் அடிப் படையில் இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்.

புவியில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் ஒரு பொது மூதாதை உண்டு என்ற கருத்து அறிவியல் உலகில் நிலவுகிறது. எந்தக் கட்டத்தில் அந்தப் பொது மூதாதையிலிருந்து உயிர்கள் வெவ்வேறு வடிவில் கிளைத்தன என்பது குறித்த தேடல்தான் இது.

இந்தப் பொது மூதாதை நாம் கண்ணால் காணக் கூடிய அளவில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பாக்டீரியா அளவில்தான் இருந்திருக்கும் என்பது இந்தக் கிளை வரைபடத்தில் தெரியவருகிறது.

உயிர்களின் தொட்டிலான கடல்களில் அப்போது நிலவிய மிக அசாதாரணமான சூழலில் அவை எப்படி வாழ்ந்திருக்கும் என்பது குறித்தும் பில் மார்ட்டின் விளக்கி யிருக்கிறார்.

-விடுதலை,12.1.17

புதன், 11 ஜனவரி, 2017

மனித எலும்புகள் பற்றி அறிவோம்




* மனிதனின் மண்டை ஓட்டில் 22 எலும்புகள் உள்ளன.

* மண்டை ஓட்டின் முக்கிய பகுதியான கிரேனியம் அல்லது கபாலம் என்ற எலும்புப் பேழைக்குள் தான் மூளை பாதுகாக்கப்படுகிறது.

* முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 14

* மண்டை ஓட்டில் உள்ள எலும்பு களில் அசையும் தன்மையுள்ள ஒரே ஒரு எலும்புப்பகுதி மாண்டிபிள் என்ற தாடை எலும்பு மட்டும்தான்.

* எலும்புகளுக்கு சக்தியையும் உறுதியையும் கொடுப்பது கால்சியம் பாஸ்பேட்

* கால்சியம் பாஸ்பேட் மற்றும் கால்சியம் கார்பனேட்டுகளின் கலவை தான் எலும்புகள்.

*  எலும்புகளில் 85 விழுக்காடு கால்சியம் பாஸ்பேட் அடங்கி உள்ளது.

* பற்களில் அடங்கியுள்ள வேதிப் பொருள்  கால்சியம் பாஸ்பேட்

* மனித உடலில் மிகவும் வலிமை வாய்ந்த பகுதி பற்களில் உள்ள எனாமல் பகுதி.

*  மனித உடலில் உள்ள அனைத்து எலும்புகளின் எடை சுமார் 9 கிலோ கிராம்.

* மனித உடல்களிலுள்ள எலும்பு களின் எண்ணிக்கை  206

* பிறக்கும் குழந்தைகளுக்கு 300 எலும்புகள் காணப்படும். வளர வளர பல எலும்புகள் இணைந்து 270 - ஆக மாறும்.

* மனித உடலில் மிகப்பெரிய எலும்பு  தொண்டை எலும்பு

* தைபோன் எனப்படும் தொடை எலும்புதான் மிக நீளமானதும் பெரியதும் ஆகும். இதனை விஞ் ஞானிகள் பீமர் என்று அழைக் கின்றனர்.

* எலும்புகள் பற்றிய படிப்பின் பெயர்  ஆஸ்டியாலஜி

* ஆர்த்ரைட்டிஸ் என்பது எலும்பு மூட்டுகளை பாதிக்கும் நோயின் பெயராகும்.

* கால்களில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை 30

* கால் பாதங்களிலுள்ள எலும்பு களின் பெயர் டிபியா, ஃபிபுலா.

* கைகளின் உள்ள முக்கியமான எலும்புகள் ரேடியஸ், அல்னா.

* மூளை மற்றும் மண்டை ஓட்டைப்பற்றி படிக்கும் படிப்பின் பெயர்  பிரினாலஜி

-விடுதலை,17.7.14

பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது





பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடி ஆய்வில் தகவல் இதயத்துடிப்பின் வேகம் உடம்பின் அளவைப் பொறுத்து அமையும். பெண்களின் இதயம் ஆண்களின் இதயத்தை விட வேகமாக துடிக்கிறது.

சுண்டெலி, மூஞ்சுறு போன்றவை மிகச் சிறிய பிராணிகள். அவற்றின் இதயம் நிமிடத்துக்கு ஆயிரம் தடவை துடிக்கிறது. திமிங்கலம் மிகப் பெரிய விலங்கு. அதன் இதயம் நிமிடத்துக்கு 5 முறைதான் துடிக்கிறது. வயது வந்த ஒரு ஆணின் இதயத்தின் எடை 284 கிராமில் இருந்து 430 கிராம் வரை இருக்கும். வயதுக்கு வந்த பெண்ணின் இதயம் 227 கிராமில் இருந்து 340 கிராம் வரை இருக்கும்.

குளிர் காலத்தை விட கோடை காலத்தில் இதயத்துடிப்பு அதிகம் காணப்படும். ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனில் 70 சதவிகிதத்தைத் தான் உபயோகத்துக்கு இதயம் எடுத்துக் கொள்கிறது. இதயம் துடிப்பதற்கு இவ்வளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. பொதுவாகவே ஆண்களின் இதயத்தை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கிறது.

சாதாரண மனிதனின் இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக் கிறது. ஒரு மணி நேரத்துக்கு 1,03,680 தடவை துடிக்கிறது. இதுவே ஒரு ஆண்டு என்று எடுத்துக் கொண்டால் 37 கோடியே 83 லட்சத்து 120 தடவை துடிக்கும்.

இதயத் துடிப்பு சாதாரணமாக காலையில் குறைவாக இருக்கும். பிற்பகலில் அதிகரிக்கும்.

100 மில்லி ரத்தத்தில் 20 முதல் 45 மில்லி கிராம் புரதமும், 50 முதல் 80 கிராம் வரை குளுகோசும், 700 முதல் 750 மில்லி கிராம் வரை குளோரைடுகளும் உள்ளன. ஒரு ஆணின் ரத்தம் ஒரு கன மில்லி மீட்டரில் 4.5 6.5 மில்லியன் சிவப்பு அணுக்கள் கொண்டதாக உள்ளது. அதே அளவு கொண்ட பெண்ணின் ரத்தத்தில் 4.05.5 மில்லியன் சிவப்பு அணுக்களே இருக்கின்றன.

ஹீமோகுளோபினை எடுத்துக் கொண்டால் ஆணின் ரத்தத்தில் 13.5 முதல் 18.0 வரை உள்ளது.

பெண்ணின் ரத்தத்தில் 11.5 முதல் 16.5 வரையே உள்ளது. பொதுவாக மனித ரத்தத்தில் 100 மில்லியன் லிட்டர் அளவில் 125300 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. 1740 மில்லி கிராம் யூரியா உள்ளது. 14.5 மில்லி கிராம் யூரிக் அமிலம் உள்ளது.

-விடுதலை,17.7.!4

நட்புக்கு காரணம் மரபணுக்களா?




நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறி முகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப் பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

நல்ல நண்பர்களாக இருப்பவர்களின் மரபணுக்கள், அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வேற்று ஆட்களின் மரபணுக் களைவிட, கூடுதலாக ஒரே மாதிரி இருப் பதாக அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கும் ஆய்வின் முடிவு மரபணுத்துறையில் இன்று மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பவுலர் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நிக்கோலஸ் கிறிஸ்டாகிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து செய்த ஆய்வின் முடிவுகளை அவர்கள் தற்போது வெளி யிட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் சிறு நகரம் ஒன்றில் இவர்கள் மனித இதயம் தொடர்பிலான ஆய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட சுமார் 2000 பேரிடம், இவர்கள் தமது மரபணு தொடர்பான இந்த குறிப்பிட்ட ஆய்வையும் மேற்கொண்டனர். அதன் படி நண்பர்கள் மத்தியில் மரபணுக்கள் எந்த அளவு ஒத்துப் போகின்றன என்று இவர்கள் ஆராய்ந்தனர்.

அதன் முடிவில் நல்ல நண்பர்களாக இருப்பவர்களுக்கு இடையில், மற்றவர்களை விட குறைந்தபட்சம் 0.1 சதவீத மரபணுக்கள் அதிகமாக ஒரே மாதிரி இருப்பதை தாங்கள் கண்டறிந்திருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது முன் பின் அறிமுகம் இல்லாத வர்களை விட நல்ல நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் கூடுதலாக ஒரே மாதிரி இருப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். வழக்கமாக இப்படியான மரபணு ஒற்றுமை என்பது ஒன்றுவிட்ட சகோதரன் அல்லது சகோதரிகள் மத்தியில் மட்டுமே காணப்படும்.

அதுவும் கூட தலைமுறைகள் கடந்து செல்லச் செல்ல, இந்த மரபணு ஒத்துப்போகும் தன்மையும் படிப்படியாக குறையத் தொடங்கும். அப்படி பார்க்கும்போது, ஒருவரின் நான்கு தலைமுறைகள் கடந்த கொள்ளுத்தாத்தா-பாட்டிக்குப் பிறந்த இன்றைய நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசுகளுக்கு மத்தியில் என்ன மாதிரியான மரபணு ஒற்றுமைகள் காணப்படுமோ அதே மாதிரியான ஒற்றுமைகள் நல்ல நண்பர்கள் மத்தியிலும் காணப்படுவதாக இந்த இரண்டு அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்திருக் கிறார்கள்.

எந்த ஒரு குறிப்பிட்ட மரபணு அல்லது மரபணுவின் மூலக்கூற்றையும் தாங்கள் இங்கே குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போகும் போக்கு, அளவு என்பது எண்ணிக்கை அடிப் படையில் அதிகமாகவும், ஒரே மாதிரி தொடர்ந்தும் இருக்கிறது என்பது மட்டுமே தங்களின் கண்டுபிடிப்பு என்றும் இவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சக விஞ்ஞானிகள் உடன்படவில்லை

ஆனால் இவர்களின் இந்த கண்டு பிடிப்பை சகவிஞ்ஞானிகள் அப்படியே ஏற்க முடியாது என்று நிராகரித்திருக்கிறார்கள். இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் எல்லோரும் ஒரு சிறு நகரில் இருப்பவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் இவான் சார்னி, இவர்கள் எடுத்த மாதிரிகளில் பெரும்பான்மையான வர்கள் ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்த வர்களாக இருந்திருக்கலாம் என்றும் அதனாலேயே கூட இந்த ஆய்வின் முடிவுகள் இப்படி வந்திருக்கலாம் என்றும் வாதாடுகிறார்.

மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் யாரும் யாருக்கும் உறவு முறையானவர்கள் அல்ல என்பதையும் இந்த ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடியாத நிலையில், இப்படி நண்பர்களுக்கு மத்தியில் மரபணுக்கள் ஒத்துப்போவதாக பொத்தாம் பொதுவில் சொல்வது சரியான அறிவியல் அணுகு முறையல்ல என்றும் அவர் கூறுகிறார்.

-விடுதலை,17.7.14

தூக்கத்திலும் மனித மூளை விழிப்புடன் செயல்படுகிறது




மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித் திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் மற்றும் பாரிசைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது ஒரு வார்த்தைக்கட்டளையை பிறப்பித்து, அந்த கட்டளையை ஏற்று அந்த பங்கேற் பாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி பணிக்கப் பட்டார்கள். இந்த சோதனையின்போது இந்த பங்கேற் பாளர்கள் விழித்திருக்கும்போது செய்யப்பழகிய செயல்களை தூங்கும்போதும் அதே மாதிரி கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் தொடர்ந்து செய்தார்கள்.

இதன் முடிவில் மனிதர்கள் தூங்கும்போதும், அவர்களின் மூளை சிக்கலான அதேசமயம் தன்னிச்சையாக செய்யக்கூடிய செயல்களை செய்யும் என்பதை இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவுகள் கரெண்ட் பயாலஜி என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் சில சொற்கள் பேசப்பட்டன. அந்த சொற்கள் குறிப்பிடுபவை விலங்குகளா அல்லது பொருட்களா என்று பங்கேற்பாளர்கள் பிரித்தறியவேண்டும். குறிப்பிட்ட சொல் விலங்குகளை குறிக்கும் சொல்லாக இருந்தால் அவர்கள் தங்களின் வலது பக்கத்தில் இருக்கும் பொத்தானை வலது கையால் அழுத்தவேண்டும்.

மாறாக சொல்லப்படும் சொற்கள் பொருட்களை குறிப்பனவாக இருந்தால் பங்கேற்பாளர்கள் இடது பக்கத்தில் இருக்கும் பொத்தானை இடது கையால் அழுத்தவேண்டும். இது தான் சோதனை. இந்த பரிசோதனையை அவர்கள் விழித்திருக்கும்போது ஆரம்பித்த ஆய்வாளர்கள், அவர்கள் இருளான அறைக்குள் உறங்கும்போதும் அந்த சோதனைகளை தொடர்ந்தனர். பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றபிறகும் கூட, அவர்களிடம் இந்த வார்த்தை விளையாட்டு தொடர்ந்து நடத்தப்பட்டது.

உறங்கிய நிலையில் இருந்த பங்கேற்பாளர்களும் தாங்கள் கேட்ட வார்த்தைகளுக்கு ஏற்ப வலது மற்றும் இடதுகைகளில் இருக்கும் பொத்தான்களை மாற்றி மாற்றி அழுத்தியபடியே இருந்தனர். இந்த ஒட்டுமொத்த பரிசோதனையும், ஈஈஜி என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் அய் பயன்படுத்தி மூளையின் ஒட்டுமொத்த செயற்பாடும் பதிவு செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையின் போது பங்கேற்பாளர்கள் தூங்கிய பிறகு அவர்களிடம் புதிய சொற்களைப் பயன்படுத்தியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய சொற்களை வகைப்படுத்த மூளை கூடுதலாக வேலை செய்யும் வகையிலான சொற்களாக அவற்றை விஞ் ஞானிகள் தேர்வு செய்திருந்தனர். அப்படியிருந்தும் தூக்கத்தில் இருந்தவர்களின் மூளை இந்த புதிய சொற்களையும் சரியாக தரம்பிரித்து அதற்கேற்ற சரியான பொத்தான்களை அழுத்தச் செய்தது. ஒரே வித்தியாசம் இந்த புதிய சொற்களை தரம்பிரிப்பதற்கு மூளைக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது. அவ்வளவே.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான பாரிசைச் சேர்ந்த சித் கவ்தெர் இதுவரை தாங்கள் நம்பியிருந்ததைவிட தூங்கும்போதும் மனிதர்களின் மூளை கூடுதல் விழிப்புடன் இருப்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

பெயரைச் சொல்லி அழைத்தால் விழிப்பு வருவது ஏன்?

ஒருவர் தூங்கும்போதும் கூட அவர் பெயரைச்சொல்லி அழைக்கும்போது அவர் விழிப்படைவதும், கடிகாரத்தின் குறிப்பிட்ட அலார ஒலிக்கு ஒருவர் எழுந்துகொள்வதும் கூட இதே காரணத்தின் அடிப்படையில் நடக்கும் மூளையின் செயற்பாடுகளே என்றும் அவர் விளக்குகிறார்.

ஒருவர் தானாக செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் அவர் உறங்கும் நிலையில் கூட அவரது மூளை செய்யவல்லது என்பதை தங்களின் ஆய்வுகள் உறுதி செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுவாக மனிதர்கள் தூங்கினாலும் அவர்களின் மனசாட்சி தூங்காது என்பார்கள் சமூகவியலாளர்கள். அறிவியலாளர்களின் இந்த ஆய்வின் முடிவுகளோ மனிதர்கள் தூங்கினாலும் அவர்களின் மூளைகள் விழிப்புற்றே இருக்கின்றன என்பதை காட்டியிருக்கின்றன.

சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கப் பரிந்துரை


உலக சுகாதர நிறுவனமும், இங்கே பிரிட்டனின் சுகாதார நிபுணர்களும் சமீபத்தில் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

இன்றைய நிலையில் ஒருவரின் அன்றாட உணவில் இருந்து உடலுக்கு பெறப்படும் சக்தியின் அளவில் அதிகபட்சமாக 10 சதவீதம் வரை உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையில் இருந்து கிடைக்கலாம் என்று மருத்துவர்கள் அனுமதிக்கிறார்கள்.

தற்போது லண்டனில் இருக்கும் ஆய்வாளர்கள் இதுகுறித்து செய்திருக்கும் பரிந்துரையில் இந்த அய்ந்து சதவீதத்திற்கு பதிலாக உடலுக்கு கிடைக்கும் உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை சக்தியின் அளவு 3 சதவீதத்திற்கு மேல் போகாமல் இருக்கவேண்டும் என்று தெரிவித் திருக்கிறார்கள்.

-விடுதலை,18.9.14