செவ்வாய், 27 நவம்பர், 2018

மின்னஞ்சலை (Email) கண்டுபிடித்தவர் யார் ?

யாராவது வெளிநாட்டுக்காரர்தான் என்று நினைத்திருப்பீர்கள்.

இல்லை...! அவர் ஒரு தமிழர். அதுவும் தனது 14வயதில் கண்டுபிடித்து சாதனை செய்த சிவா அய்யாதுரை.

ஒரு வீடியோ, போட்டோ, கடிதமாகவோ இருக்கட்டும் உடனே ஒருவருக்கு அனுப்ப வேண்டும் என்றால் (Email) லில் அனுப்பினால் அனுப்பிய மறு நிமிடம் அவருக்கு கிடைத்துவிடும்.

மின்சாரம் இல்லாத மனிதனுடைய வாழ்க்கையை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ, அதைப் போலவே (Email) இல்லாத மனித வாழ்க்கையை இனி நினைத்துப் பார்க்கவும் முடியாது.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள நெவார்க் என்ற ஊரில் வசித்துவருபவர்.

அவருடைய அம்மா மீனாட்சிக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பரமன்குறிச்சி, அப்பாவுக்குச் சொந்த ஊர் ராஜபாளையம் அருகேயுள்ள முகவூர். அம்மா அந்தக் காலத்திலேயே எம்எஸ்ஸி படித்தவர். அப்பா யுனிலீவர் போன்ற பெரிய நிறுவனங்களில் உற்பத்தித்துறைத் தலைவராக இருந்தவர்.

பள்ளியில் படிக்கும்போது கோடை விடுமுறையில் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் FORTRAN, COBOL, PL/1, SNOBOL, BASIC ஆகிய ஐந்து வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளைப் படித்து,

1978 இல் நியூஜெர்ஸி மாகாணத்தில் நெவார்க்கில் உள்ள “யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி’யில்கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்தார் அப்போது அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர் மயமாக்க முடியுமா? என்று அவர்கள் கேட்ட போது இவருக்கு 14 வயது.

தொடர்ந்து பலநாட்கள் கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினார். அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தார்.

இந்த E MAIL-ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

இவர்தான் FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவர், இது DATABASE, LAN உடன் தொடர்புடையதாக இருந்தது.

இ – மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் இவர் உருவாக்கியவை.

அதற்குப் பிறகு “மசாசூùஸட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி’யில் (MIT) மேற்படிப்புக்காகச் சென்றார்,

மிக அதிகமான திறமையுள்ள, கண்டுபிடிப்புகள் செய்யும் மாணவர்களை அந்தக் கல்லூரி ஆண்டுதோறும் அடையாளம் காட்டிச் சிறப்பிக்கும். 1980 இல் 1040 மாணவர்கள் படித்தனர். அப்படி அடையாளம் காட்டிச் சிறப்பிக்கப்பட்ட நான்கு மாணவர்களில் இவரும் ஒருவர்.

1982 ஆகஸ்ட் 30 இல் இ-மெயிலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமை பெற்றார்.

வியாழன், 22 நவம்பர், 2018

பகலைப்போல இரவில் படமெடுக்கும் வசதி, கூகுள் செல்போனில் அறிமுகம்

இரவு நேரத்திலோ அல்லது குறைந்த ஒளி கொண்ட இடத்திலோ புகைப்படங்களை எடுக்கும்போது இருக்கும் சிரமத்தை பெருமளவில் நீக்கும் தொழில்நுட்பத்தை கூகுள் நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தொழில்முறை கேமராக்களில் மட்டுமே எடுக்க முடிந்த தரமான புகைப்படங்கள்/ காணொலிகளை தற்போது கைபேசிகளிலேயே எடுக்குமளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியுள்ளது. இருந்தபோதிலும், இரவு அல்லது ஒளி குறைந்த இடங்களில் புகைப்படங்களை எடுக்கும்போது தெளிவான புகைப்படங்களை பெறுவதில் சிரமம் நீடித்து வருகிறது. கைபேசியிலுள்ள ஃபிளாஷை பயன்படுத்தி எடுக்கப்படும் புகைப்படங்களும் செயற்கையான தோற்றத்தையே அளிக்கின்றன.

இந்நிலையில், தமது பிக்சல் கைபேசிகளில் இருக்கும் கேமராக் களுக்கென ‘நைட் சைட்’ என்னும் பிரத்யேக வசதியை அறிமுகப்ப டுத்தியுள்ளது கூகுள். அதாவது, இயந்திர நுண்ணறிவு தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த வசதியின் மூலம் அனைத்து விதமான ஒளியிலும் பளிச்சென வண்ணமயமான புகைப்படங்களை எடுக்கமுடியுமென்று கூகுள் அறிக்கை வெளியிட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 22.11.18

வியாழன், 15 நவம்பர், 2018

செல்பேசி உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல - ஆய்வு

செல்பேசிகள் வெளிப்படுத்தும் அலைவரிசை களால் நோய்கள் வருமா? இந்த கேள்விக்கு விடை காண, 10 ஆண்டுகளாக, 218 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட விரிவான ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.


அமெரிக்கா அரசின் தேசிய நச்சியல் திட்டப் பிரிவு, மொபைல்கள் வெளியிடும் ரேடியோ அலைவரிசை கதிர் வீச்சால் ஏற்படும் பாதிப்புகளை, எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தது.


அந்த ஆய்வின் முடிவில், விலங்குகள் தொடர்ந்து ரேடியோ அலைவரிசைக்கு ஆளாகும் போது, சில விலங்குகளுக்கு புற்றுநோய் துண்டப் படலாம் என்றும், இந்த விளைவு மனிதர்களுக்கு ஏற்படுவதற்கான ஆதாரம் மிக மிக பலகீனமாக இருப்பதாகவும், அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


ஆய்வகத்தில் சராசரி மொபைல் வெளியிடும் கதிர்வீச்சை விட, நான்கு மடங்கு அதிகமான கதிர்வீச்சு பயன்படுத்தப்பட்டது. எனவே அதைவிட குறைவான கதிர்வீச்சையே சந்திக்கும் மனிதர் களுக்குள், அத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று சொல்ல முடியாது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த, 10 ஆண்டுகளில், ‘2ஜி’ மற்றும் ‘3ஜி’ அலைவரிசை, மொபைல்கள் வெளியிடும் கதிர்வீச்சு மட்டுமே அந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது. இத்தொழில்நுட்பங்கள் குறைந்த, ‘மெகாஹெர்ட்ஸ்’ அலைவரிசைகளையே பயன்படுத்துகின்றன. இவை விலங்குகளின் உடல்களை துளைக்க வல்லவை.


ஆனால், தற்போது வேகமாக, 4ஜி மற்றும் 5ஜி அலைவரிசை போன்களின் பயன்பாடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த உயர் அலைவரிசைகளுக்கு, விலங்குகளின் உடல்களுக்குள் ஊடுருவும் திறன் கிடையாது என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அப்படியென்றால், ‘4ஜி, 5ஜி’யால் ஆபத்து இருக்காதா?


புதிய அலைவரிசைகள் பாதுகாப்பானவை என, உத்தரவாதம் தர முடியாது என்றும், அவை ஏற்படுத்தும் தாக்கம், ஆய்வுக்குள்ளான, 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசைகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட மாறுபட்டவையாக இருக்கும் என்றும், ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.


- விடுதலை நாளேடு, 15.11.18

புதன், 7 நவம்பர், 2018

விண்வெளியில் நாசா கண்டறிந்த சிரிக்கும் முகம் தோற்றம் கொண்ட விண்மீன் கூட்டம்



வாசிங்டன், நவ.6  விண்வெளியில் நிறுவப் பட்டுள்ள ஹப்பிள் தொலைநோக்கி மூலம் நாசா சிரிக்கும் முகம் போன்ற தோற்றம் கொண்ட விண்மீன் கூட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக நாசா அமைப்பின் அதிகாரப்பூர்வ இன்ஸ் டாக்ராம் பக்கத்தில் குறிப்பிட்ட விண்மீன் தொகுப்பின் புகைப் படத்தோடு வெளியிடப்பட்டுள்ள தகவல் வருமாறு:

ஹப்பிள் தொலைநோக்கி கேமராவின் இதற்கு முன் இல்லாத அளவிலான உருப்பெருக்கும் திறனைப் பயன்படுத்தி இத்தகைய நட்சத்திர கூட்டங்களின் இருப்பிடம் மற்றும் அமைப்பு பற்றியெல்லாம் கண்காணிக்க முடிகிறது.  படத்தில் வில் போன்று காணப்படும் ஒளியானது ஒரு விண்மீனாகும். அதன் வடிவமானது உருமாற்றம் அடைந்தும், கொஞ்சம் இழுக்கப்பட்டது போலும் தோற்றமளிப் பதற்கு காரணம், அதன் ஒளியானது நம்மை வந்தடையும் வழியில் ஒரு வலிமையான ஈர்ப்பு விசையினைக் கடந்து வருவதுதான். அதனால்தான் சிதறடிக்கப்பட்டு இவ்வாறு தோற்றமளிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான தடைகளை ஈரான் மீது விதிக்க அமெரிக்கா முடிவு


வாசிங்டன், நவ.6 அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது இன்று விதிக்கவுள்ளது. ஈரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது. இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும். நேற்று ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர். தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இடைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னர் பேசிய டிரம்ப், ஈரான் மீது விதிக்கப்படும் தடைகள் மிகவும் கடுமையானது. இதுதான் இதுவரை விதித்த தி லேயே கடுமையான தடைகள். இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார்.அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது  விதிக்கவுள்ளது.

- விடுதலை நாளேடு, 6.11.18

வெள்ளி, 19 அக்டோபர், 2018

வேற்றுக்கிரகங்களில் யாராவது வாழ்கிறார்களா?



நீரை கொண்டிருக்கும் அளவுக்கு அதிக வெப்பமில்லாத அல்லது அதிக குளிரில்லாத “கோல்டிலாக்ஸ் மண்டலத்தை” தேடி கண்டறிவதன் மூலம் விஞ்ஞானிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

வேற்றுக்கிரகங்களில் வாழுகின்ற நம்மைப் போன்ற உயிரினங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வேற்றுக்கிரவாசிகளை கணக் கெடுப் பது முதல் சூரிய சக்தியால் இயங்குகின்ற விண்கலம் வரை நாம் அறிந்திருக்க வேண்டும்.

வேற்றுக்கிரகங்களில் யாராவது வாழ் கிறார்களா? பல நூற்றாண்டுகளாக மனிதர் களால் இந்த கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

இதற்கு சிறந்த விடையை சொல்ல விஞ்ஞானிகள் துணிந்திருக்கின்றனர் அல்லது ஏதாவது விடையை கூற முனைந்துள்ளனர்.

இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவல் உள்ளது. இது தொடர்பாக முக்கிய வானியல் திருப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் சில எதிர்பார்க்காத கோட்பாடுகள் மற்றும் முழுவதும் விசித்திரங்கள் நிறைந்த உண் மைகள் காணப்படுகின்றன.

வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதாக இருந் தால், அவர்கள் கோல்டிலாக்ஸ் மண்டலத்தில் தான் வாழ முடியும் என்று தெரிகிறது. வேற்றுக் கிரகங்களில் உயிர்கள் வாழ்வது பற்றி விஞ்ஞானிகள் எவ்வாறு கண்டுபிடிக்க முயல் கின்றனர்?

கலிலியோவின் புரட்சிகர தொலைநோக்கி மூலம் சந்திரனை முன்பைவிட மிகவும் தெளிவாக மனிதர்களால் பார்க்க முடிந்தது.

17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வானில் வெகு தொலைவில் இருப்பவற்றை உற்று பார்ப்பதற்கு கலிலியோ கண்டுபிடித்த புதிய தொலைநோக்கி உதவியதை தொடர்ந்து வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் பற்றி அறியும் ஆவல் நம்மிடம் அதிகரித்தது.

நிலவில் கறுப்பாக தெரிந்த இடங்கள் நீர் நிறைந்த பெருங்கடல்கள் என்று நம்பப்பட்டு, லத்தீன் மொழியில் ‘கடல்கள்’ என்று பொருள் படும் “மரியா” என்று அழைக்கப்பட்டன.

நம்முடைய கடல்களில உயிரினங்கள் வாழ்வதுபோல அங்கும் இருக்கலாமா?

நிலவிலுள்ள இந்த கறுப்பு இடங்கள் முற்காலத்தில் எரிமலை சீற்றங்களால் உரு வான கருங்கல் சமவெளிகள் என்று இப்போது நாம் அறிய வந்துள்ளோம்.

2. சக்தி வாய்ந்த செவ்வாய் கிரகவாசிகள்

சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் வாழ்வோர் சராசரியாக மனிதர் களைவிட உயரமானவர்களாக இருப்பர் என்று 1870ஆம் ஆண்டு வானியலாளர் வில்லியம் எர்ச்செல் தெரிவித்தார்.

அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளை பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தை அளவிட்ட அவர், அதன் பருவகால அளவையும், நாட் களையும் கவனமாக அளவிட்டுள்ளார்.

நமது பூமியை விட செவ்வாய் கிரகம் சிறியதாக இருப்பதால், அதிலுள்ள ஈர்ப்பு விசை குறைவாக உள்ளது என்று அவர் கூறி னார். செவ்வாய் கிரகவாசிகள் அதிக உயரம் கொண்டி ருப்பர் என இதனால் பொருள் படுகிறது.

3. மேல்நிலையான சனிக்கிரகவாசிகள்

புத்திசாலிகள் அல்லாத புதன்கிரக வாசிகளில் இருந்து புத்திக்கூர்மையுடைய சனிக்கிரகவாசிகள் வரை புவிக்கு அப் பாலுள்ளவை பற்றிய அறிவு சூரியனிடம் இருந்து காணப்படும் தொலைவை போல எட்டாத ஒன்றாகவே இருந்தது என்று தத்துவயியலாளர் இம்மானுவேல் கான்ட் கூறி யுள்ளார்.

4. வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கணக்கெடுப்பு

1848ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து திருச் சபை அமைச்சரும், அறிவியல் ஆசிரியரு மான தபமஸ் டிக், சூரிய கும்பத்திற்குள் வாழுகின்ற வேற்றுக்கிரகவாசிகளின் எண்ணிக்கையை கணக்கிட தொடங்கினார்.

புவிக்கு அப்பால் வாழுகின்ற உயிரினங் களின் செறிவு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 280 பேர் வாழுகின்ற இங்கிலாந்துக்கு ஒத்தாக இருந்தால், சூரிய குடும்பத்திற்குள் 22 டிரில்லியன் வேற்றுக்கிரகவாசிகள் வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

5. சந்திரனில் உயிர் வாழ்க்கை

உயிர் வாழ்வதை ஆய்வு செய்ய சிறந்த இடம் புதன் கிரகம் போன்ற அருகிலுள்ள சூரிய குடும்பமல்ல. வியாழன் கிரகத்தை சுற்றிவருகின்ற யுரோப்பா மற்றும் சனிக் கிரகத்தின் ஒரு செயற்கைக்கோளான என் சிலாடுஸ் போன்ற தொலைதூர சந்திரன்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவை இரண்டும் அடர்த்தியானதொரு பனிக்கட்டி அடுக்குக்கு அடியில் நீர்நிலை பெருங்கடலை கொண்டுள்ளன.

இந்த சந்திரன்களின் பெருங்கடல்கள் பனியாக உறைந்து விடுவதை தடுப்பதற்கு உள்ளக வெப்ப ஆதாரம் ஒன்று இருக்குமென நம்பப்படுகிறது. இந்த சந்திரன்களின் மய்யப் பகுதியில் வெப்பம் உருவாகி, பெருங்கடல் தரையிலுள்ள வெப்பநீர் துளைகள் வழியாக வெளியாகலாம்.

பூமியில் வெப்பநீர் துளைகள் ரசாயன எதிர்வினையை உருவாக்கி, விறுவிறுப்பாக உள்ள நீர்நிலையிலுள்ள சூழலியல் அமைப்பு களுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்கிறது.

6. விண்வெளி மீன் வகை உயிரினங்கள்

இத்தகைய நீர்நிலையுடைய சந்திரன்களில் உயிரினங்கள் வாழ்வதாக இருந்தால், அவை எவ்வாறு தோன்றும் என்பதற்கு எளிமையான இயற்பியல் துப்புகளை வழங்கும்.

பெரிய நீர்வாழ் வேற்றுக்கிரக உயிரி னங்கள் வாழ்ந்தால், இரையை பிடிப்பதற்கு அல்லது இரையாகுவதில் இருந்து தப்பிக்க அவை வேகமாக செல்ல வேண்டியிருக்கும்.

எனவே, மீன் வகைகள், டால்பின்கள் மற்றும் சுறாக்கள் போன்ற வடிவங்களில் அந்த உயிரினங்கள் இருக்கலாம். மீன் வகை உயிரினங்களை தேடுகின்ற படலம் இங்குதான் தொடங்குகிறது.

-  விடுதலை நாளேடு, 18.10.18

புதன், 10 அக்டோபர், 2018

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜப்பானை சேர்ந்த 2 மருத்துவர்கள் தேர்வு



ஸ்டாக் ஹோல்ம், அக்.2 அமெரிக்கா, ஜப் பானை சேர்ந்த 2 மருத்துவர்களுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் ஆலிசனுக்கும், ஜப்பானை சேர்ந்த மருத்துவர் தசுகு ஹோன்ஜோவுக்கும் அளிக்கப்படுகிறது.நோய் எதிர்ப்பு மருத்துவ நிபுணர்களான ஆலிசனும், ஹோன்ஜோவும் நோய் எதிர்ப்பு கட்டுப்படுத்துதலை தடுக்கும் புற்றுநோய் சிகிச்சையை கண்டுபிடித்தவர்கள். நோய் எதிர்ப்பு செல்கள், சில புற்றுநோய் செல்களிலிருந்து புரதத்தை உருவாக்கி அதன் மூலமாக புற்றுநோய் செல்களின் வீரியத்தை தடுத்து, அவற்றை அழிப்பதே இந்த மருத்துவ சிகிச்சையின் முறையாகும்.

இவர்களுக்கு 7.5 கோடி பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப் படும். வரும் டிசம்பர் 10இல் ஸ்டாக்ஹோல்மில் நடக்கும் விழாவில் நோபல் பரிசு வழங்கப்படும்.

- விடுதலை நாளேடு, 2.10.18

இயற்பியல்: லேசர் சிகிச்சை முன்னோடிகள் மூவருக்கு நோபல் பரிசு



ஸ்டால்க்ஹோம், அக்.3 லேசர் சிகிச்சை முறைகளுக்கு முன் னோடியாகத் திகழும் மூன்று விஞ்ஞானிகள், இயற்பியல் பிரிவில் நிகழாண்டுக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்சைச் சேர்ந்த ஜெனார்டு மோரூ, கனடா வைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக் லாண்ட் ஆகிய அந்த மூவரும், லேசர் சிகிச்சைகளுக்குப் பயன் படும் ஒளியியல் (ஆப்டிகல்) லேசர்களைக் கண்டுபிடித்தமைக் காக அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.

இதுகுறித்து அந்தக் குழு தெரிவித்ததாவது: அணுத் துகள்கள், வைரஸ்கள் மற்றும் உயிரணுக் களை அள்ளியெடுக்கும் ஒளி யியல் லேசரை கடந்த 1987-ஆம் ஆண்டு கண்டுபிடித்தமைக்காக, ஆர்தர் ஆஷ்கினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

வெறும் கதிர்வீச்சை பயன் படுத்தி, பொருள்களை நகரச் செய்யும் அறிவியல் கனவை, அவரது அந்தக் கண்டுபிடிப்பு நனவாக்கியிருக்கிறது.

மேலும், அதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த லேசர் அதிர்வுகளை உருவாக்கிய மோரூ மற்றும் ஸ்ட்ரிக்லாண் டுக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அவர்கள் இருவரும் உருவாக்கிய ஒளியியல் லேசர் கதிகள், கண் குறைபாடுகளை சரி செய்வதற் கான லேசர் சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது என்று நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

ஆர்தர் ஆஷ்கின் (96)


பெல் லேபரட்ரீஸ், லூ ஸென்ட் டெக்னாலஜிஸ் ஆகிய வற்றில் பணியாற்றிய ஆர்தர் ஆஷ்கின், நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களி லேயே மிகவும் அதிக வயது டையவர் ஆவார். இதற்கு முன்னர், 90 வயதான லியோனிட் ஹுர்விச் கடந்த 2007-ஆம் ஆண்டில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றதே சாதனை யாக இருந்து வந்தது.

ஜெனார்டு மோரூ (74)


பிரான்ஸில் உள்ள எகோல் பாலிடெக்னிக் மற்றும் அமெரிக் காவின் மிச்சிகன் பல்கலை கழகத்தில் பணியாற்றும் மோரூ, உலகின் மிக சக்தி வாய்ந்த ஈஎல்அய் லேசர் உருவாக்கத் திட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

டோனா ஸ்ட்ரிக்லாண்ட் (59)

கனடாவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் டோனா ஸ்ட்ரிக்லாண்ட், ஜெனார்டு மோரூவின் மாணவி ஆவார். இயற்பியல் துறையில் கடந்த 1901-ஆம் ஆண்டுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப் பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 3.10.18

காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்றால்?



வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரண்மாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம் என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று பரவியுள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.

ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.

ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத் தில் காற்றழுத்தம் மிக அதிகமாக இருக்கும். வேறி டத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம். காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக முக்கியம்.

வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.

காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவலகளை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு  Isobar என்று பெயர்.அருகே உள்ள படத்தில்  L என்ற Low எழுத்து   என்பதைக் குறிப்பதாகும். H என்பது  high என் பதைக் குறிப்பதாகும். ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை  என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கிய வையாக வருகின்றன். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.

குரல் மூலம் கட்டுப்படும் கருவிகள்


அமேசான், தன் அலெக்சா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வைத்து, பல கருவிகளை விற்பனை செய்து வருகிறது.

ஸ்மார்ட் ஸ்பீக்கர் வகை கருவிகளான, எக்கோ, டாட், ஷோ போன்ற கருவிகளுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ள அமேசான், மேலும் சில சிறிய கருவிகளையும் வெளியிட்டுள்ளது.

வீட்டில் இருப்போரின் குரல் உத்தரவுகளை நிறைவேற்றும் அலெக்சா மென் பொருள் தான் இந்த கருவிகளின் அடிப்படை. வீட்டாரின் குரலுக்கு கட்டுப்படும், ஸ்மார்ட் பிளக்குடன் இணைந்துள்ள எந்த கருவியையும் முடுக்கவோ, அணைக்கவோ முடியும்.

- விடுதலை நாளேடு, 4.10.18

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

கருந்துளை’ பற்றிய அய்ன்ஸ்டீனின் கணக்கு சரி!



அன்றே சொன்னார் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன். அது இன்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கருந்துளை எனப்படும் காலாவதியான நட்சத்திரம், தன்னைச் சுற்றியுள்ள எதையும் கபளீகரம் செய்யுமளவுக்கு, அசாதாரணமான ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கும் என்பது அய்ன்ஸ்டீனின் கணிப்புகளுள் ஒன்று.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிகற்றைகளைக் கூட கருந்துளை ஈர்த்துக் கொள்ளும் என்றார் அவர்.

அண்மையில், நமது பால் வீதியின் மத்தியில் உள்ள ‘சாஜிட் டாரியஸ்- - ஏ’ என்ற கருந்துளை அதைச் செய்து காட்டியிருப்பதாக அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யத்தின் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்திஉள்ளனர்.

சாஜிட்டாரியஸ் - ஏ கருந்துளையை சில நட்சத்திரக் கூட்டங்கள் அதிவேகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்றான, ‘எஸ் 2’ என்ற நட்சத்திரம் சாஜிட்டாரியஸ் - ஏவை ஒருமுறை வலம் வர, 15 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது.

கடந்த மே, 19 அன்று எஸ் 2 நட்சத்திரம் கருந்துளைக்கு அருகா மையில் கடந்து போனது.

அப்போது அது வெளிவிடும் ஒளியை கருந்துளை அப்படியே ஈர்த்துக் கொண்டதை அய்ரோப்பிய விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் கண்டுள்ளனர். இதனால் அய்ன்ஸ்டீனின் கருந்துளை பற்றிய முக்கியமான கணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 23.8.18