கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
- மதிமன்னன்
சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநாட்டு மக்களிடமும் இருக்கிறது. உலகின் பெரிய மதங்கள் எனப்படும் ஆறு மதத்தைச் சேர்ந்த மக்களிடமும் இந்த நம்பிக்கை இருக்கிறது.
நம்புங்கள் என்பதுதான் எல்லா மதங்களின் ஆரம்ப வாக்கியம். எதையும் நம்பி ஒருவன் தொடங்கினால் இறுதியில் அவனுக்குச் சந்தேகங்களே மிஞ்சும்; ஆனால் சந்தேகங்களுடன் தொடங்கினால், இறுதியில் உறுதியான கருத்து கிடைக்கும்.
இந்தக் கருத்தைத்தான் சாக்ரடீஸ், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர் பெருமக்களின் வாழ்வும், செயலும், தத்துவக் கருத்துகளும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.
எதையும் சந்தேகி என்ற மார்க்சின் சொற்களும், எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள் என்ற மேற்கத்திய சாக்ரடீசும் கிழக்கத்திய பெரியாரும் சொன்ன சொற்களும் எண்பித்துக் கொண்டிருக்கின்றன.
வள்ளுவரும் புத்தரும் இதையேதான் உலகுக்கு அறிவித்தனர். ஆனால், குள்ள மனிதர்கள் நம்பு எனக் கூறி மக்களை மாக்களாகவே வைத்துவிட்டனர். எல்லாம் கடவுள் செயலாலே என அறிவித்து, மனிதனால் ஆவது எதுவுமே இல்லை என்ற எண்ணத்தை விதைத்துவிட்டனர்.
ஆனால், எல்லா மனிதர்களும் இதை ஏற்கவில்லை. ஆதாமும் ஏவாளும் அம்மணமாகத் திரிந்தது போல பின்னிட்ட சந்ததியினர் இருக்கவில்லை. வேட்டையாடிக் கொன்று தின்ற விலங்குகளின் தோலைக் கொண்டு ஆடை என்ற பெயரில் எதையோ அணிந்தனர்.
சாக்ரடீஸ்
மானத்தை மறைப்பது என்ற எண்ணம் இல்லாத நிலையில், குளிரில் இருந்து தம்மைக் காத்துக் கொண்டனர். தோலைத் தைப்பதற்கு எலும்பு ஊசிகளையும் ஆக்கினர். இத்தகைய கண்டுபிடிப்பு எண்ணம் எப்படி ஏற்பட்டது? மதப் போதனைகளைப் போலவே வாழ்ந்திருந்தால் இது முடிந்திருக்குமா?
தந்தை பெரியார்
அந்தக் காலத்தில் கடவுளும் இல்லை, அதைக் கட்டிக் காப்பாற்றிக் காசு பார்க்கும் மதங்களும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இவை இரண்டும் பிற்காலப் பித்தலாட்டங்கள்!
இவை இல்லாத காலத்தில் கல் கருவிகள், தோல் ஆடைகள், நெருப்பில் வதக்கி உண்ணுதல் போன்றவை-யெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுளால் அல்ல, இதற்கான தூண்டுதல் மனித மூளையின் செயல்பாடுகளால் விளைந்தவை.
கார்ல் மார்க்ஸ்
இத்தகைய தூண்டுதலை முதலில் புரிந்து செயல்பட்டவன் பாராட்டுக்குரிய மனிதன். இவனுக்கு வழிகாட்ட மோசே வரவில்லை. யேசு வரவில்லை. முகம்மது வரவில்லை. முப்பத்துமுக்-கோடி தேவன்களும் வரவில்லை.
தாமஸ் ஆல்வா எடிசன்
பின் எது வந்தது? மனிதனின் தேவை வந்தது. தேவைதான் கண்டுபிடிப்பின் தாய். குளிரிலிருந்தும் பனிப் பொழிவிலிருந்தும் காத்துக் கொள்ள வேண்டிய தேவை, தோலாடையைக் கண்டுபிடித்தது.
வேட்டைச் சமூகத்தின் வயிற்றுப் பசி, பசி ஆற்ற வேண்டிய தேவை விலங்குகளைக் கொல்லும் கல் கருவிகள், ஆயுதங்களைக் கண்டுபிடித்தது. தற்செயலாக ஏற்பட்ட காட்டுத் தீயில் வெந்த இறைச்சியின் சுவையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதுவே நெருப்பைக் கடைந்து ஏற்படுத்தும் சக்கிமுக்கிக் கல்லைப் பயன்படுத்தும் நுட்பத்தைக் கண்டுபிடிக்க உதவியது.
இப்படிக் கூறிக்-கொண்டே போகலாம். போதும் என்ற மனமே, பொன்செய்யும் மருந்து எனப்படுவதுபோலவே எல்லா மனிதர்களும் இருந்திருந்தால் கண்டுபிடிப்புகளே வந்திருக்காது.
எனவே, தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், தந்தை வேண்டுமே! மதிநுட்பம் தந்தை எனலாம். மதி அனைவருக்கும் உண்டுதான். மதிநுட்பம் சிலர்க்கு மட்டுமே இருக்கிறது. இவர்கள் மதியைப் பயன்-படுத்துகிறார்கள். நுட்பம் சேர்கிறது. விதியை நம்பாததால், மதிநுட்பம் வளர்கிறது.
மதிநுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை, கருவிகளாகவோ பொருட்களாகவோ இருக்க வேண்டியது இல்லை. புதிய எண்ணம், புதிய கொள்கை, பாட்டு, நாட்டியம், இசை என்றும் இருக்கலாம்.
சமதர்மம், பொது உடைமை போன்ற புதிய எண்ணங்கள், மக்களாட்சி போலும் புதிய அரசமைப்புக் கொள்கைகள் கூட கண்டுபிடிப்புகளே எனலாம். தொல் பழங்காலக் கண்டுபிடிப்புகளான ஆடை, நெருப்பு, கூரிய கருவிகள், ஈட்டி போன்றவையும் ஆதிகாலக் கண்டுபிடிப்புகளே!
ஏழு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலைபெற்று இருந்த மெசபடோமிய நாகரிகத்தில், சக்கரம், அச்சு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. சக்கரம், அச்சு போன்றவற்றைக் கண்டுபிடித்தவன்தான் முதல் விஞ்ஞானி! அவனது கண்டுபிடிப்புகளால்-தான் மனிதன் இடம் பெயரவும் புதிய இடத்தில் வாழவும் தொடங்கினான்.
முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எனச் சக்கரத்தைக் கொண்டாடும் நோக்கம் இதுதான்! அய்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலைபெற்றிருந்த சிந்துவெளி நாகரிகம் நீர்ப்பாசன முறைகளைக் கண்டுபிடித்தது.
இதுவே எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் சீன நாட்டின் மஞ்சள் ஆற்றின் கரையில் பரவிப் பெருமை பெற்றது. கட்டற்று ஓடும் காட்டாற்று நீரைக் கட்டுப்படுத்திப் பாசனம் செய்து வேளாண்மை செய்யும் கண்டுபிடிப்பு இன்றைய மானுட குலத்துக்குச் சிறப்பான கொடை.
2500 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளில், குறிப்பாக கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் தோன்றிய கணிதம், தத்துவம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.
ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த மிதவைத் தத்துவம் நீர்வழிப் பயணத்திற்கு உதவும் கப்பல், படகுகள் போன்றவை கண்டுபிடிப்பதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. சிந்துவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை வெளி-உலகுக்குத் தெரியாமலே இருக்கின்றன.
ஆனால், சீன நாட்டின் முக்கிய நான்கு கண்டுபிடிப்புகள் அனைவர்க்கும் பயன்படுகின்றன; வெடிமருந்து, காகிதம், காம்பஸ் எனப்படும் திசைகாட்டும் கருவி, அச்சுத் தொழில்முறை ஆகிய நான்கும் மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் எனலாம்.
அய்ரோப்பிய நாடுகளில் 14ஆம் நூற்றாண்டுக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ஆடி (மைக்ராஸ்கோப்) தொலைநோக்காடி (டெலஸ்கோப்) ஆகியவை மனிதர்களின் அறிவியல் ஆய்வுகளுக்குப் பல வகையிலும் ஆற்றிய பங்கு அளவிட்டுக் கூறமுடியாதது.
16ஆம் நூற்றாண்டு பகுத்தறிவின் காலம் என வருணிக்கப்பட்டாலும், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் வானவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றின் வளர்ச்சி சிறப்பான வகையில் அமைந்தது.
பலப்பல கருவிகள் -_ தெர்மா மீட்டர், ஹைட்ரோ மீட்டர் போன்றவை கண்டுபிடிக்கப்-பட்டதன் விளைவாக இயற்பியலில் பல சாதனைகளை மனிதன் செய்தான். மின்சாரம், காந்தசக்தி ஆகிய இரு முக்கிய சக்திகளை மனிதன் கண்டுபிடித்ததும் இந்தக் காலத்தில்-தான்.
நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்கி எடுக்கவும் புதிய பொறிகளை உருவாக்கவும் மனிதன் கற்றான். தொழில் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்த தொழில்நுட்பம் இதுதான். இதனால் பெரும்பலன் அடைந்தது இங்கிலாந்து நாடு.
தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து குடியேறியதும் இத்தகைய கண்டுபிடிப்புகளால்தான்.
பெரும்பாலான கண்டுபிடிப்புகளைச் செய்து சாதித்த மனிதர்கள் நிறைந்த நாடாக அமெரிக்கா விளங்குகிறது. பல நாடுகளி-லிருந்தும் வந்து குடியேறிய மக்கள் நிறைந்த நாடு அது.
அந்நாட்டின் தாமஸ் ஆல்வா எடிசன் என்பார் 1000 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இது எப்படி? யேவா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினத்தைச் சேர்ந்தவரா அவர்? அல்லவே! மனித அறிவை, ஆற்றலைப் பயன்படுத்திடக் கற்றவர், பயன்படுத்தியவர்! அவ்வளவே!
இப்படி எண்ணற்றவை! ஆற்றல்மிக்க இந்த மனிதர்கள் தம் அறிவைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துத் தந்த கண்டுபிடிப்புகளால் மனித குலம் முழுவதும் பயன்படுகிறது.
மனித குலத்துக்கு இத்தகைய மனிதர்களால் விளைந்த பயன்களில் ஒரு சிலவற்றையாவது நாம் அறிவது நலம்.
அதை விட்டுவிட்டு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி கூறுவதைப் போல பிளாஸ்டிக் சர்ஜரி பாரதத்தில் இருந்தது என்பதற்கு அடையாளம் விநாயகன் பொம்மை என்று பேசிக் கொண்டிருந்தால் மிஞ்சுவது என்ன?
மூடப் பைத்தியம் எனும் பட்டம்தான்! குந்தி குழந்தை பெற்றது, சோதனைக் குழாய்க் குழந்தை முறை இந்தியாவில் இருந்ததற்கான அடையாளம் என்று மோடி கூறியுள்ளதைத் திருப்பிக் கூறினால் சிரிப்பு பின்பக்கத் துளை வழியேதான் வருமே தவிர, புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம் வரவே வராது!
குளோரஃபார்ம், அனஸ்தீசியா (மயக்க மருந்துகள்) கண்டுபிடிப்பதற்கு முன்னமேயே மயக்க மருந்து கொடுக்காமலே, ஆணின் விலா எலும்பை எடுத்து அதைக் கொண்டு ஏவா எனும் பெண்ணைப் படைத்தது எங்கள் கர்த்தர் என்றானாம் கிறித்தவன்.
ஒருவன், போடா போ! எங்கள் சிவன், தன் மகன் தலை காணாமல் போய்விட்ட நிலையில் யானைத் தலையை மனிதக் கழுத்தில் ஒட்டவைத்து மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையே செய்தது என்று சவடால் அடித்தானாம் இந்து ஒருவன்!
இவர்கள் இருவர் பேச்சைக் கேட்கும் ஒருவருக்கு என்ன நினைக்கத் தோன்றும்? இந்த இரண்டும் எந்தப் பைத்தியக்கார விடுதியிலிருந்து தப்பித்து வந்தன? என்ற அய்யம்தானே ஏற்படும்!
அதைப்போல பாரதப் பிரதமர் பேச்சைக் கேட்டுக் குழப்பிக் கொண்டிருக்காமல் நடைமுறை உலகுக்கு வருவோம்! நமக்குப் பலவற்றையும் கண்டுபிடித்துக் கொடையளித்த அறிவியல் அறிஞர்களை அறிந்து கொள்வோம்.
பல இலட்சக்கணக்கான அறிவியல் பட்டதாரிகள் இருக்கும் இந்தியாவில், அறிவியல் மனப்பான்மை கொண்ட, அறிவியல் வாழ்க்கை வாழும் மனிதர்களைக் காணோம்! அவர்களை உருவாக்க உதவிடும் சில செய்திகளை அடுத்த இதழில் பார்ப்போம்.
கண்டுபிடித்தது...கடவுள் அல்ல! 4
அறிவு தந்ததல்லவா ஆடியும் கண்ணாடியும்?
-மதிமன்னன்
விழிகள் பார்வைக்கும் படிப்பதற்கும் உதவுவன. பார்வைக் கோளாறுகள் சிலருக்குச் சிறுவயதிலேயே ஏற்பட்டு விடுகிறது. மனிதனைப் படைத்தது என்று கூறப்படும் கடவுளின் தயாரிப்புக் கோளாறு இது. சிலருக்குச் சாதாரணமாக 40_50 வயதுக்குமேல் பார்வைத்திறன் குறைகிறது.
இதனைச் சரி செய்திட கண்ணாடிகள் அணிகிறோம். இவற்றை மூக்குக் கண்ணாடி என்கிறோம். மூக்கின் மேல் பொருத்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் மூக்குக் கண்ணாடி எனப்படுகிறது.
முன்பு ஒரு கண்ணில் மட்டும் பொருத்திப் படிக்கும் பழக்கம் இருந்தது. இதனை ஒற்றைக் கண்ணாடி (Monocle) என்றனர்.
இந்த ஆடிகள் ஸ்நெல்ஸ் விதி (Snell’s Law)யில் அமைக்கப்பட்டவை. இப்ன் சாஹி எனும் ஈராக் நாட்டுக் கணித அறிஞர் இதற்கான கோட்பாட்டை 984ஆம் ஆண்டில் உருவாக்கினார். கண்ணாடி நூல் (Book of Optics) என்பதை எழுதிய மற்றொரு ஈராக்கிய அறிஞர் இப்ல் அல்ஹாதம் என்பவரின் கோட்பாட்டின்படி தற்கால கண் ஆடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒளி நேராகச் செல்கிறது என்றும், கண்ணில் உள்ள ரெடினா பகுதியில் ஆடி (லென்ஸ்) உருவங்களைப் பதிவு செய்யும் வகையையும் அவர் எண்பித்துக் காட்டினார்.
13ஆம் நூற்றாண்டில்தான் தூரப் பார்வைக்குக் குவி ஆடிகளும் கிட்டப் பார்வைக்குக் குழி ஆடிகளும் பயன்-படுத்தப்பட்டு மூக்குக் கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆடிகள் (Glass) கி.மு.2500க்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில், குறிப்பாக எகிப்தில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது அகழ்வு ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் ஆடி மணிகள் அணியப்பட்டிருந்தன.
சிலிகா மணல், கால்ஷியம் ஆக்சைடு, மக்னீசியம் சோடா ஆகிய நான்கின் கலவை 1500 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் உருக்கப்பட்டு செய்யப்படுகிறது. இது ஆடம்பரப் பொருளாகக் கருதப்பட்ட காலம் இருந்தது.
ஆனால் 15ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்டு சாதாரண மக்களும் வாங்கும் வகையில் மலினமாகிவிட்டது. 1950இல் சர் அலஸ்டய்ர் பிகிங்டன் என்பார் கண்டுபிடித்த புதிய தயாரிப்பு முறையில் உற்பத்தி எளிதாக்கப்பட்டது.
நுண்ணிய பொருள்களையும் உருப்பெருக்கிக் காட்டக்கூடிய மைக்ராஸ்கோப் கருவி, லென்ஸ் எனப்படும் ஆடிகளை ஒன்றுக்குமேல் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன. முதலில் தயாரிக்கப்பட்ட மைக்ராஸ்கோப் ஒரு ஆடியை மட்டும் பயன்படுத்தி ஒரு பொருளை ஆறு அல்லது பத்து மடங்கு வரைப் பெரிதாக்கிக் காட்டும் அளவில்தான் தயாரிக்கப்பட்டன.
இதில் உற்றுநோக்கும் கருவி ஒன்றினை வடிவமைத்தவர் இத்தாலியரான கலிலியோ கலிலி. இவர்தான் சூரியன் நிலையாக இருக்கிறது, பூமிதான் அதனைச் சுற்றிவருகிறது என்பதைக் கண்டு, அறிவித்து, கிறித்துவ மதப் பீடத்தால் தண்டிக்கப்பட்டு, பின் கண்டிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் என்பதை நாம் அறிவோம்.
சிறிய துளை உள்ள மயிரிழை போன்ற இரத்தக் குழாய்களில் குருதி ஓட்டத்தை இந்தக் கருவியின் மூலம் கண்டு அறிந்தவர் இத்தாலி நாட்டவரான மார்செலோ மால்பிக் என்பவர். நெய்யப்பட்ட துணியில் எத்தனை நூல் இழைகள் உள்ளன என்பதைக் கணக்கிட்டுச் சொன்னவர் அந்தோனி வான் லீவன்ஹோக் எனும் டச்சு நாட்டவர்.
ஒரு கண்ணாடியை மட்டுமே பயன்படுத்தி இவர் வடிவமைத்த மைக்ராஸ்கோப் ஒரு பொருளை 270 மடங்கு பெரிதாக்கிக் காட்டியது. அவர் 17ஆம் நூற்றாண்டில் தயாரித்த 500 கருவிகளில் இன்றளவும் 10க்கும் மேற்பட்டவை பயன்பாட்டில் உள்ளன. தற்போதைய உருப்பெருக்கி ஆடிகள் பலவகைச் சிறப்புகளுடன் இருந்தாலும் 1590இல் கண்டுபிடிக்கப்பட்ட உருப்பெருக்கி ஆடிதான் முன்னோடி.
மூக்குக் கண்ணாடிக் கடைக்காரரின் இரண்டு மகன்கள் விளையாட்டாக இரு லென்சுகளைச் சேர்த்து வைத்துப் பார்த்தபோது, உள்ளூர் தேவாலயத்தின் உச்சி மிக அருகில் தென்பட்டதாம். அதைக் கொண்டு தொலைநோக்கு ஆடி(டெலஸ்கோப்) உருவாக்கப்பட்டது என்பார்கள். மூக்குக் கண்ணாடிக் கடைக்காரர் ஆன லிப்பர்ஷெ தான் டெலஸ்கோப் கண்டுபிடித்தவர் எனலாம்.
ஆனாலும் இன்னும் சிலபேர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். என்றாலும் லிப்பர்ஷெ கண்டுபிடித்த கருவியின் அடிப்படையில் அய்ரோப்பிய நாடுகளில் எல்லாம் டெலஸ்கோப்கள் உருவாக்கப்பட்டன. அவை டச்சு டிரங்க் என்றழைக்கப்பட்டன. ஹாலந்து, நெதர்லாண்ட்ஸ் என்றெல்லாம் கூறப்படும் டச்சு நாடு கடல் மட்டத்திற்குக் கீழே உள்ள நாடு என்பது நமக்குத் தெரியும்.
ஆனால், டச்சு தைரியம் (DUTCH COURAGE) என்பது பற்றிச் சிலருக்குத் தெரிந்திருக்கும். பியர் (BEER) குடித்த டச்சுக்காரர்கள், குடிவெறியில், தங்களுக்கு அசுர பலம் வந்துவிட்டதாகக் கருதிக்கொண்டு அடுத்தவர்களிடம் சண்டைக்குப் போவார்களாம்.
குடிகாரனை சும்மா தட்டுத் தட்டினாலே விழுந்துவிடுவான். எனவே, சும்மனாங்காட்டியும் உதார் விட்டுப் பேசுவதை டச்சு தைரியம் என்பார்கள்.
1609 மே மாதத்தில் வெனிஸ் நகரத்தில் இருந்த கலிலியோ அதுமாதிரி தொலைநோக்கு ஆடி ஒன்றைத் தயாரித்தார். அதன்வழியே சூரியனைப் பார்த்தார். அதில் கரும்புள்ளிகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். ஜூபிடர் கோளுக்கு 4 துணைக்கோள்கள் இருப்பதைக் கண்டறிந்தார்.
சந்திரனில் மலைகள் இருப்பதையும் வீனஸ்கோளில் மடிப்புகள் இருப்பதையும் கண்டறிந்தார். இவைபற்றி 1610ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் வந்த (சைட்ரியல் மெசஞ்சர்) SIDERIUS NUNCIUS எனும் ஏட்டில் எழுதினார். இங்கே இந்து மதத்தில் சூரியன் ஒற்றைச் சக்கரத் தேரில் ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் பவனி வருகிறது என்கிறார்கள்.
சந்திரனுக்கு 27 மனைவி என்கிறார்கள். குருவின் மனைவியை முறைதவறிப் புணர்ந்ததாகவும் அதனால் தரப்பட்ட சாபத்தால் 15 நாள்கள் தேய்வதாகவும் பின் 15 நாள்கள் வளர்வதாகவும் கதை. நம்பிக்கை, வழிபாடு, எல்லா இழவும்!
இரண்டு குவி ஆடிகளையும் கொண்டு ஜெகன்னஸ் கெப்ளர் வடிவமைத்த தொலைநோக்காடி, அய்சக் நியுட்டன் வடிவமைத்த பிரதிபலிக்கும் டெலஸ்கோப் என மேம்பாடுகளை அடைந்துகொண்டே உள்ளது.
அதைப்போலவேதான் மூக்குக் கண்ணாடிகளும். சாதாரண ஆடிகளைக் கண்டுபிடித்தவர்கள், உருவைப் பெருக்கிக் காட்டும் ஆடிகளை (லென்ஸ்) உண்டாக்கினார்கள். வெனிஸ் நகரில் இத்தொழில் வளர்ந்தது. கண்பார்வை குறைந்தவர்கள் இரண்டு கண்களுக்கும் இரு ஆடிகளை மரச்சட்டத்தில் வைத்துக்கொண்டு படித்தனர்.
செல்வினோ டிஅர்மேட் (1218_1312) மற்றும் அலசான்ட்ரோ டாஸ்பினா (1313இல் பிறப்பு) என்பவர்கள் இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தவர்கள் என்கிறார்கள். ஆனால் மார்கோபோலோவின் பயணக் குறிப்பு (1270ஆம் ஆண்டு)களில் வயதான சீனர்கள் இம்மாதிரி கண்ணாடி அணிந்திருந்ததைக் கண்டதையும் அவர்கள் 11ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் கண்டுபிடித்தது எனக் கூறியதையும் பதிவு செய்துள்ளார்.
இன்றைய மூக்குக் கண்ணாடியை 1730இல் லண்டனைச் சேர்ந்த எட்வர்டு ஸ்கார்லெட் வடிவமைத்தார் என்பது மட்டும் போதும்.
தூரப் பார்வையும் கிட்டப் பார்வையும் கோளாறாகிப் போனவர்களின் பயன்பாட்டுக்காக இரண்டு லென்சுகளும் மேலே பாதி, கீழே பாதி என்றமைக்கப்பட்ட பைஃபோகல் லென்சுகள் வந்துள்ளன. பலநூறு கண்டுபிடிப்புகளைச் செய்த பெஞ்சமின் ஃபிராங்க்ளின் இதையும் கண்டுபிடித்தார்.
அவர் அமெரிக்க அதிபராக இருந்தது அனைவரும் அறிந்ததே!
இரண்டு லென்சுகளும் இரு துண்டுகளாக இல்லாமல் ஒன்றிலேயே இணைந்து செய்யப்படும் வெரிஃபோகல் (VARIFOCAL) லென்சுகள் 1950 முதல் செய்யப்படுகின்றன. கடவுள் படைத்த கண் கோளாறைச் சீர்செய்ய மனிதன் எத்தனை கண்டுபிடித்திருக்கிறான் எனும்போது மனித ஆற்றலை என்னென்பது?
நான்கு கால்களால் நடந்து கொண்டிருந்த மனிதன், நேராக நிமிர்ந்து இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கியதிலிருந்து கண் பார்வைக் கோளாறு தொடங்கிவிட்டதாம். மனிதன் இன்றைய உருவை, படிநிலை வளர்ச்சியால் (பரிணாமம்) தானே பெற்றான்!
அந்த வகையில் இன்றைய மனிதனை (ஹோமே சேப்பியன்) கடவுள் படைக்கவில்லை என்பதும் உறுதியாகிறது. கண் பார்வையைச் சீராக்கிட லென்சு வைத்த கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் 1880இல் டாக்டர்கள் அடால்ப் ஃபிக் மற்றும் ஈஜின் கால்ட் ஆகிய இருவரும் கான்டாக்ட் லென்ஸ் கண்டுபிடித்தனர்.
விழியோடு ஒட்டி இருக்கும் இவை வலி, வீக்கம் போன்ற கூடுதல் கோளாறுகளை ஏற்படுத்தின என்றாலும் அமெரிக்காவில் 1935 முதல் 1939 வரை 10 ஆயிரம் ஜோடி விற்பனை ஆயின. பிளாஸ்டிக் கான்டாக்ட் லென்ஸ் 1949இல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதன் விற்பனை 2 லட்சம் ஜோடி என்று உயர்ந்தது.
PMMA எனும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட லென்சும் கார்னியாவில் கோளாறு ஏற்படுத்தியதால் HEMA எனும் பிளாஸ்டிக் கொண்டு லென்சு தயாரிக்கப்பட்டது. இதனை பாலிஷ் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. சாப்லென்ஸ் என்பதை பாஷ் மற்றும் லாம்ப் நிறுவனம் 1971இல் தயாரித்துள்ளனர். இன்றைய நிலையில் கான்டாக்ட் லென்ஸ் வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை 10 கோடிக்கு மேலே!
(தொடரும்)
கண்டுபிடித்தது.... கடவுள் அல்ல! - 6
- மதிமன்னன்
வயது ஆக ஆக, புத்தகங்களைக் கைக்கு எட்டிய தூரத்தில் பிடித்துக் கொண்டால்தான் படிக்க முடியும் என்கிற குறைபாடு (Presbyopia) ஏற்படுகிறது. கிட்டத்தில் இருக்கும் பொருள்களை அப்படிப் பார்த்தால்தான் மிகத் தெளிவாகக் காணமுடியும். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒவ்வொரு கண்ணாடி என்கிற வகையில் கிட்டப்பார்வைக்கு ஒன்றும், தூரப் பார்வைக்கு ஒன்றும் பயன்படுத்திய நிலை. இதை மாற்றி ஒரே கண்கண்ணாடியில் கிட்டப் பார்வைக்குப் பாதிக் கண்ணாடியும் தூரப் பார்வைக்குப் பாதிக் கண்ணாடியுமாக இரு கண்களுக்குமாக ஒரே கண் கண்ணாடியை வடிவமைத்தவர் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த அறிவியலாளரும் பகுத்தறிவாளருமான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் அவர்களாவார். (படிக்க: உலகப் பகுத்தறிவாளர்கள் எனும் நூல்) Bifosals எனப்படும் கண்ணாடி இரண்டு துண்டுகளால் ஆனது. இந்தப் பெயரைச் சூட்டியவர் ஜான் அய்சக் ஹாகின்ஸ் என்பவர். இவரே மூன்று துண்டுகளால் ஆன Trifocals எனும் கண்ணாடியையும் வடிவமைத்தார். நடுத்தரமான தூரத்தில் உள்ளவற்றைப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டதால் இது பிரபலம் அடையவில்லை.
1950க்குப் பிறகு Varifocals எனப்படும் ஆடிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கட்டுரையாளர்கூட அம்மாதிரி மூக்குக் கண்ணாடியைத்தான் அணிந்திருக்கிறார்.
கண்ணாடி அணிவதை விரும்பாதோர் உள்ளனர். பார்வைக் குறைபாடுகளை அறுவை மருத்துவம் மூலம் சரி செய்து கொண்டு பார்க்கின்றனர். 1950இல் ஸ்பெயின் நாட்டவரான ஜோஸ் பாராகுவர் என்பவர் விழித்திரையைச் சீர்செய்யும் மருத்துவ முறையைக் கண்டார். ரஷிய கண் மருத்துவர் ஸ்வையடோஸ்லாவ் ஃபயோடொராவ் என்பவர் பாதிக்கப்பட்ட கண் காயத்திற்கு மருத்துவம் பார்த்தபோது பார்வைக் குறைபாடு முற்றிலும் சீர் செய்யப்பட்டதைக் கண்டார். 1973இல் இம்மருத்துவ முறையை உலகுக்கு அறிவித்தார். இதற்கான காப்புரிமையையும் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரங்கசாமி சீனுவாசன் எனும் இந்திய இயற்பியலாளர் அல்ட்ராவயலட் லேசர் மூலம் பாதிப்பே இல்லாதவகையில் குறைபாட்டைச் சீராக்கலாம் என்பதைக் கண்டறிந்தார். இவ்வாறான கண்டுபிடிப்புகளையெல்லாம் கொண்டு, 1990இல் இத்தாலி நாட்டு லூகியோ புராட்டோ, மற்றும் கிரேக்க நாட்டு லோயான்னிஸ் பல்லிகாரிஸ் என்பவரும் சேர்ந்து கண்டுபிடித்துள்ள மருத்துவ லாசிக் (Lasik) அறுவை முறை இப்போது கடைப்பிடிக்கப்படுகிறது. காலவிரயமின்றி கண்பார்வை சீராக்கப்படுகிறது.
நம் ஊரில் சானேஸ்திரம் எனக் கூறப்படும் காட்டராக்ட் கோளாறு (Cataract)என்பதைக் கண்ணில் உள்ள லென்சின்மேல் புகைபடர்ந்த மாதிரியான ஒருவகைப் பொருள் உருவாகிப் பார்வையை மழுங்கச் செய்யும் கோளாறு. இதனைச் சீர்செய்திட, பழுதான லென்சை கரைத்திட (எமல்சிபிகேஷன்) முறையைப் பயன்படுத்தி உடைந்த நுண்ணிய துகள்களை அப்புறப்படுத்தினார்கள். தற்போது லேசர் மூலம் காட்டராக்டை அப்புறப்படுத்தலாம் எனக் கண்டுபிடித்தவர் பாட்ரிகா பாத் எனும் பெண் மருத்துவர். 1988இல் இதற்கான காப்புரிமையை அவர் பெற்றுள்ளார். அந்த முறையில் காட்டராக்டை அப்புறப்படுத்த முடியாது என்று தொடக்கத்தில் கூறப்பட்டது. அவர் மனந்தளராமல் முயன்று வெற்றி பெற்றுள்ளார்.
பிறப்பிலேயே பார்வைக்குறை, பார்வை தரும் உறுப்புகளே இல்லாத நிலை போன்ற பார்வை அற்றவர்களுக்குப் புதிய செயற்கை கண் பொருத்திடும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இல்லாத கடவுளும் கபோதிக் கடவுளாக இருப்பதால், வைக்காமல் போன உறுப்பை வைத்திட மனிதன் முயன்று வருகிறான். விரைவில் வெற்றி பெறுவான். அதுவரை, இடைக்கால ஏற்பாடாக, Bionic கண் பொருத்திடும் பணி நடைபெறுகிறது. இத்தகைய பயோனிக் கண்கள் அர்கஸ் II எனப்படுகின்றன. இவை 2007ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டன. கண் கண்ணாடிகளில் பொருத்தப்படும் நுண்ணிய கேமரா, உருவத்தையும் அசைவையும் அணிந்திருப்பவரின் மூளைக்குத் தெரியப்படுத்துகின்றன. 1950இல் பயன்படுத்தப்பட்ட பயோனிக் கண்கள், கிரியோலிட் எனப்படும் ஒருவகை அக்ரிலிக்கால் செய்யப்பட்ட வளைவான தாள் பழுதுபட்ட கண்ணுக்குமேல் ஒட்டப்படும். இடையில் பார்வையை இழந்தவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கிறது. தொடக்கத்தில் இருந்தே இவ்வுறுப்பு இல்லாத குறை உள்ளவர்களும் பார்வை பெறும் காலம் விரைந்து வருகிறது. மனித மூளையின் ஆற்றலை அந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாக அறிவியலாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பார்வையைப் பெறவே முடியாதவர்கள் எப்படிப் படிப்பது? வேலன்டின் ஹாய் என்பவர் பாரிஸ் நகரில் பள்ளி ஒன்றைத் தொடங்கி கல்வி கற்பித்தார். அரிச்சுவடி மரப்பலகையில் செய்யப்பட்டது. இதனைத் தடவிப் பார்த்து வடிவத்தைப் புரிந்து மாணவர்கள் படித்தனர். அப்படி அந்தப் பள்ளியில் படித்த சிறுவன் லூயி பிரெய்லி தனது 10 வயதில் பார்வையை இழந்தவன்.
1809ஆம் ஆண்டில் பிறந்த இச்சிறுவன் தனது 15ஆம் வயதில் பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கினார். தனது 12ஆம் வயதில் பள்ளிக்கு வந்த ராணுவ காப்டன் ஒருவர், கோகெள், புள்ளிகள் போன்ற குறியீடுகளால் உச்சரிக்க பாட்டுப்பாடப் பயிற்றுவித்ததைக் கொண்டு எழுத்து முறையை வடிவமைக்க உந்துதலைப் பெற்றார். உருவாக்கினார். புள்ளிகளைக் கொண்டு படிக்கவும் எழுதவும் இசையைக் கற்கவும் வழிமுறைகளைக் கூறும் அரிய நூலை எழுதி 1829இல் வெளியிட்டார். பலரும் படிப்பதற்கான வாய்ப்புக் கதவைத் திறந்துவைத்தார்.
கண்பார்வைக் குறைவாக இருந்தால் அதனைச் சரி செய்யக் கண்கண்ணாடிகள் அணிகிறார்கள். மூக்குத் தண்டின்மேல் அமர்ந்து இருப்பதால் அதனை மூக்குக் கண்ணாடி எனத் தமிழில் கூறுகிறோம். அதற்கும் மூக்குக்கும் தொடர்பில்லை.
கண்ணாடி வெளியே தெரியும்படி அணிவதால் யாரும் கூச்சப்படுவதில்லை. வெளியே தெரியாமல் கண்ணில் பொருத்திப் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும் கான்டாக்ட் லென்சுகளை அணிவதில் பெரும்பான்மையோர் ஆர்வம் காட்டுவது இல்லை, தோற்றத்தில் அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் கண்ணாடியை விரும்புவது இல்லை, பெரும்பாலும் மேட்டுக்குடிப் பெண்கள் நடிகைகள்.
ஆனால் கேட்கும் திறன் குறைவாக இருப்பவர்கள் அப்படி அல்ல. காது கேட்கும் கருவியை மறைத்துப் பொருத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். ஆனால் காது கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டபோது அது மறைத்துவைக்க முடியாததாக இருந்தது. விலங்குகளின் காது மடல்கள் போலத் தோற்றம் அளித்த இக்கருவிகள் 1598இல் கண்டுபிடிக்கப்பட்டபோது மரத்தினால் செய்யப்பட்டன. விலங்குகளுக்குக் காது மிகவும் துல்லியமாகக் கேட்கும் என்பதால்அவற்றின் காதைப்போல் வடிவமைத்தார்களாம்! 1700இல் வடிவமைக்கப்பட்டவை ஒலி அலைகளை உள்வாங்கி, செவிக் குழாயின் உள்ளே செலுத்துகிற வகையில் பல்வேறு உருவங்களில் செய்யப்பட்டனவாம்.
போர்த்துகீசிய மன்னர் கோவா என்பவர் காது கேளாதவர். அவருக்காக 1819இல் வடிவமைக்கப்பட்ட காதுக்கருவி அவரது தலையில் மறைவாகப் பொருத்தப்படும் வகையில் இருந்தது. 1890இல் மின்சக்தியைச் சேகரித்து வைக்கும் பாட்டரிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைக் கொண்டு காதுக் கருவிகளைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளை அறிவியலாளர்கள் செய்தனர். 1898இல் அகுலேலியன் (Akoulalion) கருவியை டாக்டர் மில்லர் ரீஸ் ஹட்சிசன் என்பார் கண்டுபிடித்தார். அதற்கான காப்புரிமையைப் பெற்றார். இதனை மேசைமேல் வைத்துதான் பயன்படுத்த முடியும். மிகவும் விலை கூடுதலானது. இருந்தாலும் 1902இல் இம்மாதிரி கருவியை எடுத்துக்கொண்டு லண்டன் போனார். கன்சார்ட் அலெக்ஸாண்ட்ரா எனும் இங்கிலாந்து அரசிக்குச் செவித்திறன் குறைந்துகொண்டு வந்ததால் அவருக்கு ஒரு கருவியைப் பரிசளித்தார். பின்னர் 1903இல் கையடக்கமான அகுலேலியனை அவரே உருவாக்கினார்.
அதன் பெயர் அகுஸ்டிகான் (Acousticon) என்று வைத்தார். அரசிக்கும் பிரச்சினை தீர்ந்தது. மக்களுக்கும் காது கேட்கும் கருவி கிடைத்தது டாக்டர் ஹட்சிசனால்!
(தொடரும்)
கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - 7
- மதிமன்னன்
பிறக்கும்போதே காது கேட்காமல், செவிடாகச் சிலர் பிறக்கிறார்கள். சிலர் பேச இயலாத ஊமையாகப் பிறக்கிறார்கள். காது கேளாதவர்களுக்குப் பேச்சு வராது. ஒலிகளையும் உச்சரிப்புகளையும் கேட்டு அவை மூளையில் பதிவானால்தான் அதே ஒலிகளையும் உச்சரிப்புகளையும் குழந்தையால் திருப்பிக் கூற முடியும். பேச முடியும். கேட்கும் திறனே இல்லையென்றால் பேசவும் இயலாது. செவிட்டு ஊமை என்ற பெயர் கிடைக்கும். (Deaf and Dumb) என்கிறார்கள். இக்குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவியை எந்நேரமும் வைத்துக்கொள்ளச் செய்வதன்மூலம் கேட்கும் ஆற்றல் வரும்! நாளடைவில் பேசும் ஆற்றலும் வரும். முழுவதும் செவித்திறன் இழந்தவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் காதுக்குள் அறுவை செய்து காது கேட்கச் செய்ய முடியும். செவிப்பறை அதிர்ந்து, அவை நரம்புகளின் மூலம் மூளைக்குச் செல்லும் இயற்கை முறைக்கு மாற்றாக, மின் அதிர்வுகளை ஏற்படுத்தி அவை நரம்புகள் மூலம் மூளைக்குச் செல்லும் வகையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. காக்ளியர் இம்ப்ளான்ட் (Cochlear Implant) எனப்படும் முறையை வில்லியம் ஹவுஸ் எனும் அமெரிக்கர் கண்டுபிடித்தார். 1961இல் மூன்று செவிடர்களுக்கு இத்தகைய கருவியைப் பொருத்தி சிறிதளவு முன்னேற்றம் கண்டார். 1969இல் தொடர்ந்த ஆய்வுகளின் மூலம் இதனைச் சரியான இடத்தில் பொருத்துவதில் வெற்றி கண்டார். காதுக்குள் அணிந்துகொள்ளும் கருவியைக் கண்டுபிடித்து வெற்றி கண்டார்.
ஆனாலும் செயற்கைமுறைத் தூண்டல் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்கிற கருத்து பரப்பப்பட்டது. மீண்டும் ஆய்வுகள் தொடர்ந்தன. 1984ஆம் ஆண்டில் இக்கருவிகளுக்கான அங்கீகாரம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறையால் அளிக்கப்பட்டு வாதப் பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது இருக்கும் இம்ப்ளான்ட் கருவி மேம்படுத்தப்பட்டு 2005இல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
குருடர்கள் பார்ப்பதும், செவிடர்கள் கேட்பதும், ஊமையர் பேசுவதும், முடவர்கள் நடப்பதும் கடவுளால் அல்ல! மனிதர்களால், அறிவியலாளர்களால்!
இந்துமத வேதம் எனப்படும் ரிக் பாடல்களில் ஒரு கதை. விஷ்பிளா எனும் ராணி போரிடும்போது ஒரு காலை இழக்கிறாள். தேவலோக மருத்துவனான அஸ்வின் இரும்புக்கால் ஒன்றைப் பொருத்திவிட்டானாம். அரசி மீண்டும் சண்டை போட்டாளாம்.
கிரேக்கத் தொன்மங்களில் ஹெகசிஸ்ட் ராடஸ் எனும் பாரசீகப் போர்வீரன் ஸ்பார்டன் அரசால் கைது செய்யப்படுகிறான். தப்பித்துப் போகாமல் இருப்பதற்காக அவனது கால் வெட்டப்படுகிறது. இருந்தாலும் அவன் மரக்கால் ஒன்றைச் செய்து அணிந்து கொண்டு 30 மைல்கள் நடந்து டிரெக்யா எனும் நகருக்குப் போய்விடுகிறான். ஜாக்கின்தியசால் அங்கே சிறைபிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான்.
பழங்கால வரலாற்று ஆசிரியரான பிளினி (Pliny) ஒரு சம்பவத்தை மார்கஸ் செர்ஜியஸ் எனும் ரோமப் பேரரசன் வரலாற்றை எழுதும்போது படைத்தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த அவன் 23 காயங்களைப் பெற்றதனால் அவனது வலது கையை வெட்டி எடுக்க வேண்டி நேரிட்டதையும் இரும்புக்கரம் ஒன்றைச் செய்து பொருத்திக் கொண்டு போருக்குத் திரும்பியதையும் அதன் பின்னர் நான்கு போர்களில் சமர் செய்ததையும் விவரித்திருக்கிறார்.
1858இல் இத்தாலி நாட்டில் உள்ள கபுவா (Capua) எனும் இடத்தில் ஒரு சமாதி கண்டுபிடிக்கப்பட்டது. சாம்னைட் போரின்போது ஈடுபட்டவர்களின் புதைகுழி. அதில் மரம், செம்பு ஆகியவற்றால் செய்யப்பட் செயற்கைக்கால் அதில் கிடைத்தது.
தொழிற்சாலைகளில் பணியின்போது கை, கால்களை இழக்கும் தொழிலாளர்களின் பயன்பாட்டுக்காக மின்சக்தியால் இயங்கும் செயற்கைக் கைகள் 1949இல் வடிவமைக்கப்பட்டது. மூனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்துவந்த ரீன்ஹோல்ட் ரீய்டர் என்பார் கண்டுபிடித்தார். அதனை எளிமைப்படுத்தித் தயாரிக்கும் முயற்சியில் இருந்தபோது ஜெர்மனியின் பொருளாதார சீர்கேட்டால் நிதி கிடைக்காமல் ஆய்வு நிறுத்தப்பட்டது. 1958இல் கி.ணி.கோப்ரின்ஸ்கி என்பாரின் தலைமையிலான ரஷியக் குழு 1958இல் செயற்கைக் கரம் ஒன்றை உருவாக்கியது. 1968, 1974 ஆகிய ஆண்டுகளில் மாசசூசட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நார்பர்ட் வெய்னர், மெல்வின் கிளிம்சர், அமர்போஸ், ராபர்ட் மாண் ஆகியோர் மற்றும் சிலருடன் சேர்ந்து உருவாக்கிய செயற்கைக் கரம் சிறப்பாகச் செயல்பட்டது. பாஸ்டன் எல்போ என இதற்குப் பெயரிட்டார்கள். தசைச் சுருக்கத்தால் ஏற்படும் மின்சக்தியை உணர்ந்து செயல்படும் உணர்விகள் (Sensors) பொருத்தப்பட்டு இவை செயல்படுகின்றன.
படைத்தானே, படைத்தானே! மனிதனை ஆண்டவன் படைத்தானே! என்று சாக்குருவி வேதாந்தம்/சித்தாந்தம் பாடிக் கொண்டிருக்கும் திண்ணைத் தூங்கிகளைப் போல் இல்லாமல் மேலை நாட்டவர்கள் பலரும் அறிவியல் மனப்பான்மையுடன் ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர். மனித குலத்திற்கு நன்மை பயக்கும் புதிய, புதிய கண்டுபிடிப்புகளைச் செய்கின்றனர். கடவுளால் செய்யப்பட்ட கோளாறுகளைச் சரி செய்கின்றனர்.
அந்த வகையில் செயற்கைத் தோலை உருவாக்கியுள்ளனர். மனித உடலில் உள்ள தோல் அற்புதமான பொறியியல் சாதனை. மிகவும் வன்மையானது. விரிந்து கொடுக்கக் கூடியது. நெகிழக்கூடியது. கடும் வெப்பம், மழை, நோய்த்தொற்று போன்றவற்றில் இருந்து காப்பாற்றக்கூடியது. அதற்கு மாற்றுப் பொருள் ஒன்றைச் செய்திட இயலாது. அத்தகைய தனித்தன்மை வாய்ந்தது.
தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொருத்துவதற்குத் தோல் அவசியமாகத் தேவைப்படுகிறது. உடலின் எல்லா இடங்களிலும் தோல் உள்ளது. என்றாலும் பாதி உடம்புக்குமேல் தீப்புண் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குத் தோலை பிற பகுதிகளிலிருந்து எடுத்துப் பொருத்த இயலாது. என்ன செய்வது? என்று ஆய்வு செய்தனர் ஜான்பர்க் எனும் அறுவை மருத்துவரும், பயன்னாஸ் எனும் வேதியியல் பேராசிரியரும்! விலங்குகளின் தசைகளை எலும்புடன் பிணைக்கும் தசை நாண்களில் மிகுந்திருக்கும் புரோட்டீன்களைப் பற்றிய ஆய்வில் இருந்தவர். இருவரும் இணைந்து மாட்டின் தோலில் உள்ள புரோட்டீனைப் பிரித்தெடுத்து பாலிமர் சவ்வு தயாரித்தனர். இதனை உலரவைத்து விஸ்கோஸ் பிளாஸ்டிக் உடன் இணைத்தனர். இவை இரண்டும் காகிதம் அளவு கனமாக இருந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதனைக் கொண்டு மூடினால், தோலைப் போலவே நோய்த்தொற்று ஏற்படாமல் காக்கின்றன. நீர்ச்சத்து இல்லாமல் வறண்டு போகாமல் பாதுகாக்கின்றன. புதிய தோல் உருவாகிச் செல்கள் வளர உதவுகின்றன. புதிய தோல் செல்கள் வளர்ந்து முழுமை அடைந்ததும் இது சிறிது சிறிதாக உடைந்து வெளியேறுகின்றன. கையினால் உரித்து எடுத்து விடவும் முடிகின்றன. புதிய தோல் முந்தைய இயற்கைத் தோலைப் போலவே இருக்கிறது. வியர்வைச் சுரப்பிகள், மயிர்க்கால்கள் அமைவதில்லை. 50 முதல் 90 விழுக்காடு வரை தீக்காயங்கள் பட்டவர்களுக்கான சிகிச்சையில் செயற்கைத் தோல் மாபெரும் வெற்றியைத் தந்துள்ளது.
தோலை உரித்துவிடுவேன் என்று எவராவது மிரட்டினாலும் இனிமேல் கவலையில்லை. செயற்கையாகப் புதிய தோலை வளர்த்துக் கொள்ளலாம்!
கொடுமை செய்பவனைப் பார்த்து உனக்கு இதயமே இல்லையா? என்று கேட்பார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இதனை பார்க்கலாம். ஈவு, இரக்கம், அன்பு, கோபம், கொடூரம், துரோகம், வஞ்சம் போன்ற பலவகைக் கெட்ட குணங்களும் மனிதர்களிடம் இருப்பதற்கு இதயம்தான் காரணி என்கிற (மூட) நம்பிக்கை! இதனாலேதான் மேலை நாடுகளில் இதயத்தின் பகுதியில் கை வைத்துக் கொண்டு உறுதிமொழி கூறுகிற மடத்தனம் உள்ளது. குணங்களுக்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை என்று சிக்மண்ட் ஃபிராய்டு எழுதி எண்பித்த பிறகும்கூட, பழக்கத்தை விடவில்லை என்றால் வேறு எப்படித்தான் அழைப்பது?
கொடுமை செய்பவனைப் பார்த்து உனக்கு இதயமே இல்லையா? என்று கேட்பார்கள். தமிழ்த் திரைப்படங்களில் இதனை பார்க்கலாம். ஈவு, இரக்கம், அன்பு, கோபம், கொடூரம், துரோகம், வஞ்சம் போன்ற பலவகைக் கெட்ட குணங்களும் மனிதர்களிடம் இருப்பதற்கு இதயம்தான் காரணி என்கிற (மூட) நம்பிக்கை! இதனாலேதான் மேலை நாடுகளில் இதயத்தின் பகுதியில் கை வைத்துக் கொண்டு உறுதிமொழி கூறுகிற மடத்தனம் உள்ளது. குணங்களுக்கும் இதயத்திற்கும் தொடர்பில்லை என்று சிக்மண்ட் ஃபிராய்டு எழுதி எண்பித்த பிறகும்கூட, பழக்கத்தை விடவில்லை என்றால் வேறு எப்படித்தான் அழைப்பது?
நம் ஊரில்கூட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அதனைப் பார்த்தோ என்னவோ, வணக்கம் சொல்லும்போது கையை இதயத்தின் மேல் வைப்பதுபோலச் சைகை செய்கிற பழக்கம் பரவி வருகிறது. ஆன்மீக வேடம் போடும் போலிகளின் மத்தியில் பரவலாகப் பார்க்கலாம்.
கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - 8
- மதிமன்னன்
உடலின் பல பாகங்களுக்கும் குருதி ஓட்டம் சீராக நடைபெறும் பணியை இதயம் செய்கிறது. இதன் பணியில் சீர்குலைவு ஏற்பட்டாலோ, பாதிப்பு பெருமளவு உடலுக்கு ஏற்படுகிறது. இதய அடைப்பு ஏற்படுகிறது. உயிரை இழக்கவும் நேரிடுகிறது. அதனைச் சீர் செய்திட அறுவை மூலம் மருத்துவம் பார்க்க நேரிடுகிறது. இதயத்தைத் திறந்து சீர் செய்ய வேண்டிய நிலையில் குருதி ஓட்டம் தடையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பழுதான இதயம் மூலம் அன்றி வேறொரு இதயம் மூலம் செய்திட வேண்டும்.
செயற்கை இதயம் தேவைப்படுகிறதே! செயற்கை இதயத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துத் தந்துவிட்டனர்! அமெரிக்காவில் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த பால் விஞ்ச்செல் மற்றும் டாக்டர் ஹென்றி ஹெல்மிச் ஆகிய இருவரும் இணைந்தனர். டாக்டர் ஹெல்மிச் இதய அறுவை சிகிச்சை செய்யும்போது பால்விஞ்செல் உடனிருந்து கவனித்தார். குருதி ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்கான கருவியை வடிவமைத்தார். 1956இல் இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தார்.
1963இல் காப்புரிமை கிடைத்தது. இந்த உரிமையை அவர் உடா (UTAH)பல்கலைக்கழகத்திற்கு அளித்துவிட்டார். ராபர்ட் ஜார்விக் உட்பட 7 பேர் ஆய்வாளர்கள் இந்தக் கருவியை மேம்படுத்திப் புதிய செயற்கை இதயத்தை மேம்படுத்திப் புதிய செயற்கை இதயத்தை வடிவமைத்தனர். உடலில் பொருத்துமளவில் உருவாக்கினர். 1982ஆம் ஆண்டில் டிசம்பர் 2ஆம் நாளில் பார்னி கிளார்க் எனும் பல் மருத்துவர் ஒருவருக்கு டாக்டர் வில்லியம் டி வீனாஸ் செயற்கை இதயத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தார். என்றாலும் 112 நாள்களுக்குப் பிறகு செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் இறந்துபோனார். முழுவதுமாக இதயம் பழுதுபட்டவர்கள் மாற்று இதயம் கிடைத்து பொருத்தப்படும் வரை, உயிருடன் இருப்பதற்கு இத்தகையச் செயற்கை இதயம் பெருமளவில் உதவுகிறது. குருதி ஓட்டம் தடைபடாமல் நடைபெற உதவுகிறது. குருதியை பம்ப் செய்யும் பணியை நிறுத்தாமல் செய்கிறது. மருத்துவ அறிவியல் உலகில் செயற்கை இதயம் மாபெரும் சாதனை அல்லவாம்!
செயற்கை ஈரல்தான் மிகப்பெரும் சாதனை என்கிறார்கள். ஏனென்றால், ஈரல் பலப்பல பணிகளைச் செய்கிறது. உண்ணும் உணவைச் சத்தாக மாற்றுகிறது. உணவில் உள்ள தீங்கான வேதிப் பொருள்களின் நச்சுத் தன்மையைப் போக்குகிறது. கலப்படம் இல்லாத பொருளே இல்லை, உணவே இல்லை என்பது இந்திய நிலைமை. பற்பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பொருள்களையெல்லாம் கொள்ளையே குறியாகக் கொண்ட வியாபாரிகள் இங்கே கொண்டுவரும்போது முந்தி விரித்து வாங்கிச் சந்தைப்படுத்துகிறவர்கள் இந்தியர்கள்.
அத்தகைய பொருள்களின் நச்சுத் தன்மையை நீக்கும் ஈரல் எத்தகைய மனிதநேயப் பணியைச் செய்யும் உறுப்பு! சத்துப் பொருளாக மாற்றிய உணவைத் தேக்கி இருப்பு வைக்கிறது ஈரல். வெட்டுக் காயங்களினால் இரத்தம் வெளியேறி உயிருக்கு ஊறு விளைவிப்பதைத் தடுத்து பித்தநீர்(Bile) சுரந்து புரதத்தில் சேர்க்கும் தடுப்பு நடவடிக்கையை ஈரல் செய்கிறது. இப்படிப் பலவற்றையும் செய்யும் ஈரலைக் குலைக்காமல் மனிதன் இருக்கிறானா? ஈரலைக் கெடுக்கும் ஆல்கஹாலை அருந்தாமல் இருக்கிறானா-? மது குடித்து ஈரலைப் பாழாக்குகிறார்களே! பாழாக்கப்பட்ட ஈரலைப் பழுது பார்க்க எத்தனையோ வழிகளில் முயன்றும் முடியவில்லை என்ற நிலையில் 2001இல் டாக்டர் கென்னத் மட்சுமுரா என்பவர் செயற்கை ஈரலை உருவாக்க முனைந்தார்.
ஈரலின் செல்களை எடுத்து, அதன் மூலம் செயற்கை ஈரலை உருவாக்கிட ஆராய்ச்சி செய்தார். வெற்றி கண்டார். புதிதாக ஈரல் கிடைத்து, ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வரை, செயற்கை ஈரல் மூலம் வாழலாம் என்கிற வகையில் இது பெரிய அறிவியல் கொடை. பிரிட்டனின் மருத்துவ அறிவியலாளர்கள், செயற்கையாகவே ஈரல் செல்களை உருவாக்கி வெற்றி கண்டுள்ளனர். தொடர் ஆராய்ச்சிகளின் மூலம் முழுவதும் செயற்கை செல்களால் ஆன செயற்கை ஈரலைக் கண்டுபிடித்து மனித குலத்தைக் காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவர். அறிவியல் முடிவில்லாதது, தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும். ஒன்றை விஞ்சும் ஆய்வு ஒன்றினை ஆய்வாளர்கள் நடத்துவர். வெற்றி பெறுவர். அதுவரை ஆய்வுகள் நடக்கும். குழந்தையைப் பெற்றெடுப்பது எப்பேர்ப்பட்ட துன்பம் என்பதைப் பிரசவ வைராக்கியம் எனும் சொல்லே எடுத்துக்காட்டும். அந்த நோவு பொறுக்க முடியாமல் இருப்பதால்தான், தாய்மார்கள் இனி, குழந்தைக்காகக் கணவனுடன் கூடுவதே கூடாது என்று உறுதி எடுத்துக் கொள்வார்களாம், பின்னரும் பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதுவேறு சங்கதி! முந்தைய காலங்களில் பிள்ளைப் பேற்றின்போது இறந்து போகும் தாய்மார்கள் அதிகம். நிறைப் பிள்ளைத் தாய்ச்சியைத் தலையில் சாவை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும், பெற்றுப் பிழைத்து வந்தாள் என்றும் கூறுவதுண்டு.
இத்தகையச் சாவுகளுக்குக் காரணம் பிள்ளைப் பேற்றின்போது குருதிப்போக்கு நிறைய இருந்ததுதான். இதனைத் தடுத்துத் தாயின் உயிரைக் காக்க வேண்டும் என்றால் குருதி இழப்பை ஈடுசெய்யும் வகையில் இரத்தம் அவளின் உடலுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். எப்படி உள் செலுத்துவது? பூனை, நாய் போன்றவற்றிடம் ஆய்வுகள் நடத்தினர். பின்னர் மனிதனிடம் வந்தனர். முதன்முதலில் ரத்தம் உள் செலுத்தப்பட்டது ஓர் ஆணுக்குத்தான். வயிற்றில் புற்றுநோய்ப் பாதிப்புக்கு உள்ளான ஆண் ஒருவருக்குத்தான் ரத்தம் செலுத்தப்பட்டது. 22.12.1818இல் செலுத்தப்பட்டது. மொத்தம் 14 அவுன்சு ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக சிரிஞ்சு (ஊசி மருந்து செலுத்தும் கருவி) மூலம் செலுத்தப்பட்டது. 56 மணி நேரம் கழித்து அவர் இறந்துவிட்டார். ரத்தம் அளிப்பவரிடமிருந்து தேவைப்படுபவருக்குச் செலுத்த ஒரு வகைக் கருவியை ஜேம்ஸ் பிளன்டல் எனும் மகப்பேறு மருத்துவர் வடிவமைத்திருந்தார். அதன் மூலம் 1818 முதல் 1829 வரை பத்துப் பேருக்கு ரத்தம் செலுத்தினார்.
அவற்றுள் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். ரத்தம் உள்ளே செலுத்தப்பட்டோர் கருப்பு நிறச் சிறுநீரை வெளியேற்றியதாக பிளன்டல் எழுதினார். இதற்கான காரணம் 1900இல்தான் தெளிவாகியது. சிலரின் ரத்தம் சிலர்க்கு ஒத்துவராத நிலையில் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் இறந்து போகின்றன என்பதுதான் காரணி என்பதைக் கண்டறிந்தார் கார்ல் லான்ட்ஸ்டீனர் எனும் வியன்னா மருத்துவர். அவர்தாம் ரத்தத்தில் மூன்று வகைகள் உள்ளன எனக் கண்டறிந்தார். அவற்றை A, B, C என்று வகைப்படுத்தினார். பின்னர் இவை A, B, O எனப் பெயரிடப்பட்டன. நான்காவதாக ஒரு ரத்தவகை இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு அது AB எனப்பட்டது. ஆரியச் சநாதன மதமான இந்து மதத்தின் கேடுகெட்ட மனிதப் பிரிவுகளான நால்வருணங்களை இந்த ரத்த வகைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார் காஞ்சிபுரம் மடத்தலைவர் சாமிநாத சங்கராச்சாரி. ரத்தம் உள்செலுத்தும்போது ரத்த வகைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும் என லான்ட்ஸ்டீனர் கூறியதை மருத்துவ உலகு பத்தாண்டுகளாகக் கண்டுகொள்ளவேயில்லை. தற்போது மிகவும் கவனமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இக்காலத்தில் இயங்கிவரும் இரத்த வங்கியைத் தொடங்கியவர் சார்லஸ் ட்ரூ என்பவர். 46 வயதிலேயே இறந்துபோன இவர் ரத்தத்தின் பிளாஸ்மாவிலிருந்து சிவப்பு அணுக்களைப் பிரித்தெடுப்பதைக் கண்டுபிடித்தார். அதனைப் பாதுகாத்து, உள் செலுத்துவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தார்.
1941இல் இவர் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்க ரத்த வங்கியின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆயிரக்கணக்கான யூனிட் ரத்தத்திலிருந்து காயவைக்கப்பட்டுப் பவுடராக்கப்பட்ட பிளாஸ்மாவைச் சேமித்து வைத்தார்.
பின்னர் காய்ச்சி வடிகட்டிய நீருடன் கலந்து திரவ பிளாஸ்மாவாக ஆக்கப்பட்டுத் தேவைப்படுவோர்க்குச் செலுத்தப்பட்டது. உலக யுத்தத்தின்போது ரத்தம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட மக்கள், போர்வீரர்களல்லாதவருக்கும் ரத்தம் செலுத்தி உயிர்பிழைக்க வைக்க வேண்டும் என விரும்பினர். 1950 வரை கண்ணாடிப் பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்ட ரத்தம் தற்போது பிளாஸ்டிக் பைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த முறையைக் கண்டுபிடித்தவரான ட்ரூ (ஞிக்ஷீமீஷ்) கடுமையான கார் விபத்தில் சிக்கி, நிறைய ரத்தம் வீணாகிப் போனதால் ரத்தம் உள் செலுத்தப்பட்டு உயிர் பிழைத்தார். சேமித்து வைத்திட குருதிக்கொடை வழங்குபவர்கள் குறைவு. மேலும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்த் தொற்று இருப்போர் தரும் ரத்தத்தை மற்றொருவருக்குச் செலுத்துவதனால் ஏற்படும் அபாயம் ஒரு பக்கம். எனவே, செயற்கை ரத்தத்தைக் கண்டுபிடித்திடும் தேவை ஏற்பட்டது.
பல்கலைக்கழக மாணவரான தாமஸ் ஷான் என்பவர் 1956இல் செயற்கை ரத்தச் செல்களை உருவாக்கினார். அப்போது அவருக்கு 23 வயதுதான்.
இந்தச் செயற்கை ரத்தத்தைத் தம் உடலில் செலுத்திக்கொள்ளப் பலரும் முன்வரவில்லையாம். ரத்தத் தூய்மை எனும் மினுக்கித்தனம் மனித மனதில் ஆழ்ந்து பதிந்துள்ளதே! ரத்தத்தில் சேரும் கழிவுகளைப் பிரித்துச் சிறுநீர்க் குழாய் வழியே வெளியே அனுப்பும் பணியைச் சிறுநீரகம் செய்கிறது.
சிறுநீரகம் பழுதுபட்டுவிட்டால் கழிவுப் பொருள்கள் ரத்தத்திலேயே தேங்கி விடுகின்றன. அதனால் மனிதர் இறக்க நேரிடும். எனவே, சிறுநீரகத்தின் பணியைச் செய்திடும் கருவியைக் கண்டுபிடித்திடும் அவசியம், ஆராய்ச்சிகள் தொடங்கின. வில்லியம் கோல்ஃப் எனும் மருத்துவர் தொடங்கினார். இரண்டாம் உலகப் போர் நடந்ததால் அத்தியாவசியமான பொருள்கள் கிடைக்கவில்லை. எனினும் கிடைத்தவற்றைக் கொண்டு செயற்கைச் சிறுநீரகம் உருவாக்கினார். 1943இல் ஒரு நோயாளிக்குச் சிகிச்சையும் செய்தார்.
போர் முடிந்தபிறகு கோல்ஃப் அமெரிக்கா திரும்பினார். செயற்கைச் சிறுநீரகத்தை சிறப்பாக வடிவமைக்க உழைத்தார். 1956இல் உருவாக்கி விற்பனையும் செய்தார்.
1960 முதல் டையலாசிஸ் எனப்படும் செயற்கைச் சிறுநீரகம் பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பது சாக்குருவி வேதாந்தம். உருப்படாத தத்துவம். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
- (தொடரும்)
கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - 9
- மதிமன்னன்
ரோமன் கத்தோலிக மதத்தில் தீவிர நம்பிக்கையுள்ளவரான ஜான்ராக் எனும் மகப்பேறு மருத்துவர் கிரிகோரி பின்கஸ் எனும் உயிரியல் நிபுணருடன் இணைந்து ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததுதான் மகளிர்க்கான கருத்தடை மாத்திரைகள். கருத்தடையை எதிர்ப்பது கத்தோலிகம். கருத்தரிப்பதை மேம்படுத்த வேண்டும் என்று ஆய்வுகள் செய்தார் ஜான் ராக். அவர் கண்டுபிடித்த மாத்திரையை உட்கொண்ட பெண்ணுக்கு கருத்தரிப்பதற்கான ஹார்மோன்கள் பாதிப்புக்கு ஆளாகிவிட்டன. கருத்தடைக்கான மாத்திரை கிடைத்துவிட்டது. பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிவிட்டதோ? கிணறு தோண்ட பூதம் வெளிப்பட்டதோ? எப்படியோ மதத்திற்கு எதிரான விடை கிடைத்துவிட்டது. மகளிர்க்கு _ சிறப்பாக மனித குலத்திற்கு ஒரு கொடை!
ஆண்களின் முகத்தில் தாடி மீசை வளர்வது வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது. தாடி, மீசையைச் சிரைக்காமல் அப்படியே விட்டு வளர்ப்பது சிலர்க்கு அழகிய பொலிவைத் தருகிறது. கார்ல் மார்க்ஸ், தந்தை பெரியார் ஆகியோர்க்குத் தாடி அமைந்தது மிக அழகிய தோற்றத்தைத் தருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆண்தான் அழகு என்பார்கள். சிங்கத்தின் பிடரி, மானின் கொம்பு சேவலின் கொண்டை, மயிலின் தோகை, யானையின் தந்தம் என்று பட்டியலிட்டு நீக்கி முழக்குவார்கள். குயிலின் குரலைச் சொல்லும்போது மறுக்கத் தோன்றாது. எனினும் கூடுதல் உறுப்புகள் இல்லாமலே பெண்ணின் அழகு கவரக்கூடியதுதானே! அப்படிப்பட்ட வகையில் ஆணு க்கேயுரிய தாடி மீசையை அகற்றுவது சிரமமாக இருந்தது. அதைச் செய்யும் தொழிலாளரை அணுக வேண்டும் அல்லது நெருங்கிய உறவினரின் உதவி வேண்டும். ஏனென்றால், சவரக் கத்தி கழுத்தையும் அறுத்துவிடும் அபாயம் உண்டே! அதற்காகப் பாதுகாப்பான ரேஸர் கண்டுபிடித்தனர்.
மரத்தாலான கைப்பிடியில் பாதுகாப்பாகப் பொருத்தப்பட்ட பிளேடுடன் கூடிய ரேஸரை 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரஞ்ச் நாட்டவரான ஜுன் ஜாக்குவிஸ் பெர்ரெ என்பவர் வடிவமைத்தார். 1875ஆம் ஆண்டில் ஜெர்மன் நாட்டவர்களான ஃபிரெடெரிக், ரிச்சர்டு, ஓட்டோ ஆகிய சகோதரர்கள் வடிவமைத்தது பாதுகாப்பாக இருந்தது. 1901இல் கிங் கில்லட் எனும் அமெரிக்கரும் வில்லியம் நிக்கர்சன் என்பவரும் சேர்ந்து உருவாக்கிய ரேசரில் பயன்படுத்தித் தூக்கி எறியும் பளேடு பயன்படுத்தப்பட்டது. பின்னர் மிகவும் மெல்லியதும் கூரியதுமான பிளேடுகளை கில்லட் கண்டுபிடித்தார். முதல் உலகப் போரில் பணி செய்த ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காகப் பிளேடுகளை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. நீண்ட நாள்கள் உழைக்கக்கூடிய பிளேடுகளை இங்கிலாந்து நாட்டவரான வில்கின்சன் ஸ்வேர்டு கண்டுபிடித்தார்.
இது துருப்பிடிக்காத இரும்பினால் செய்யப்பட்டது.
முகம் மழிப்பதற்கு முன்பு சோப் அல்லது கிரீம் தடவி ஈரமாக்கிப் பின்னர் சிரைப்பது எளிது. தண்ணீர், சோப் அல்லது கிரீம் இல்லாமல் முகம் மழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டது. மின் மோட்டார் பொருத்தப்பட்ட மின்சார ரேஸர் வடிவமைக்கப்பட்டது. 1931இல் இது பயன்பாட்டுக்கு வந்தது. 1939இல் ஹாலந்து நாட்டு நிறுவனமான ஃபிலிப்ஸ் இம்மாதிரி ரேஸர்களைத் தயாரித்து விற்பனை செய்தது. பேட்டரியால் இயங்கும் ரேஸர் 1940இல் வந்தது. 1947இல் பெண்களுக்கான ரேஸர் வடிவமைக்கப்பட்டது. 1960இல் கிரீம் தடவிப் பயன்படுத்தக்கூடிய மின்ரேஸர்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுதான் வேடிக்கை.
தீக்குச்சியால் விளக்கேற்றி நூல்களைப் படிக்கலாம். தீக்குச்சியால் வீடுகளைக் கொளுத்தி ஜாதி சண்டைகளை வெளிப்படுத்தலாம். கத்தியைக் கொண்டு காய், கனிகளை வெட்டிச் சமைக்கலாம். கழுத்தை அறுத்துக் கொலையும் செய்யலாம். அறிவியல் அறிவைக் கொண்டு ஆக்கப் பணிகளுக்கான அரியனவற்றையும் கண்டுபிடிக்கலாம். தீய விளைவுகளை ஏற்படுத்தும் கருவிகளையும் கண்டுபிடிக்கலாம். அந்த அடிப்படையில் மனிதன் கண்டுபிடித்த சமுதாயக் கேடான கருவிகளும் நிறைய உண்டு.
வெடிமருந்து அப்படிப்பட்ட ஒன்று. பொதுவாக மருந்து எனும் சொல் நோய்தீர்த்து நன்மை பயக்கும் ஆற்றல் பெற்ற பொருள்களுக்குப் பயன்படும் சொல். வெடிமருந்து அப்படி அல்லவே! ஒரு குழாயில் அதனைத் திணித்துப் பற்ற வைத்தால் நெடுந்தொலைவுக்கு அதன் தீயவிளைவு அழிவை ஏற்படுத்தும். அதனை எப்படி மருந்து எனலாம்? ஆங்கிலத்தில் வெடிப்பொடி என்கின்றனர் (கன் பவுடர்). எனவே, நாமும் அப்படியே அழைக்க வேண்டும், மொழியைக் காப்பாற்றிட!
பொட்டாசியம் நைட்ரேட் 75%, மரக்கரி 15%, கந்தகம் 10% என்ற அளவில் கலந்து தயாரிக்கப்படும் பொடி (கரும்பொடி _ பிளாக் பவுடர்) ஒரு பக்கத்தில் மூடப்பட்ட குழாயில் திணிக்கப்பட்டு எரிக்கப்பட்டால் வெகு தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அழித்திடும் ஆற்றல் பெற்றதாகிறது. சீனர்கள் இந்த முறையை ஆதியில் கையாண்டனர். 13ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இதனைக் கையாண்டார்கள். மூங்கில் குழாயை இரும்புத் தகடால் கெட்டிப்படுத்தி வெடிப்பொடியைத் திணித்துத் துப்பாக்கி தயாரித்தனர். பின்னர் இத்தொழில்நுட்பம் அய்ரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. 19ஆம் நூற்றாண்டில் கரும்பொடி மேம்படுத்தப்பட்டு, நைட்ரோ செல்லுலோஸ் பயன்படுத்தியதால் சிறிதளவே புகைவருவதுபோல் மென்மையாகத் தயாரிக்கப்பட்டது. தற்போதைய தயாரிப்பு வெடிப்பொருள்கள் சிறிதளவுகூடப் புகை வராதவகையில் தயாரிக்கப்படுகின்றன.
14ஆம் நூற்றாண்டில் சீனர்கள், வெடிப்பொடியைப் பயன்படுத்தித் தாக்கும் மஸ்கட் என்ற கருவியைக் கண்டுபிடித்தனர். ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் மட்டைபோல் ஒரு முனையில் வளைந்தும் மறுமுனை நேராகவும் அமைந்த இரும்புக் குழாயினுள் வெடிப்பொருளைத் திணித்துப் பற்றவைத்துத் தாக்குதலுக்குப் பயன்படுத்தினார்கள். இதனை நிறுத்துவதற்கு ஒரு ஸ்டாண்டு தேவைப்பட்டது. தொலைக்கண்ணாடியைப் பொருத்தும் ஸ்டாண்டு போல! பொடியைத் திணிப்பதற்கு நெடுநேரம் ஆனதால் இது அவ்வளவாகப் பயன்படவில்லை. இருப்பினும் போர்த்துக்கீசியர்கள் இதனைத் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.
ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் Arquebus என்றழைக்கப்படும் சிறிய பீரங்கி ஒன்றை வடிவமைத்தனர். 1300ஆம் ஆண்டிலிருந்தே பீரங்கிகள் போரில் பயன்படுத்தப்பட்டு வந்தன. என்றாலும் கைகளில் ஏந்திச் சுடும் வகையில் இருந்தால் தேவலை என்ற எண்ணம் ஏற்பட்டு இது வடிவமைக்கப்பட்டது. இருந்தாலும் குறிபார்த்துச் சுடுவதற்கு இது சரிப்படவில்லையாம்.
சிறிய கைத்துப்பாக்கி (Flintlock) பதின்மூன்றாம் லூயி எனும் பிரான்சு நாட்டு மன்னனின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்தது. கிட்டத்தட்ட 1612ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது எனலாம். வெடிப்பொடி கிட்டித்து வைக்கும் குழாய்ப் பகுதியோடு இணைக்கப்பட்டுள்ள விசை (டிரிக்கர்) இழுக்கப்பட்டவுடன் வெடிப்பொடி எரிந்து வெளிப்பட்டு சேதத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. என்னதான் வேகமாகச் செயல்படும் ஆளாக இருந்தாலும் வெடிப்பொடி கிட்டித்துச் சுடுவதற்கு 15 நொடிகள் தேவைப்படும். இந்த வகைத் துப்பாக்கி செயல்படும் விதத்திலிருந்து உருவான ஆங்கிலச் சொல்லடை (Phrase) தான் லாக், ஸ்டாக் அன்ட் பாரல் (Lock Stock and Barrel) என்பதாகும். அதைப் போலவே மற்றொரு சொல்லடை Going off Half Cocked என்பதும்.
சாமுவேல் கோல்ட் எனும் அமெரிக்கர் வடிவமைத்து உருவாக்கியதுதான் ரிவால்வர் கைத்துப்பாக்கி. ஒரு குண்டு திணித்துச் சுட்டுக் கொண்டிருந்தபோது, 1835இல் கோல்ட் ரிவால்வரைக் கண்டுபிடித்தார். அய்ந்து அல்லது ஆறுமுறை தொடர்ந்து சுடும் ஆற்றல் இதற்கு உண்டு. தொடக்கத்தில் கோல்ட் துப்பாக்கிகளை வாங்க ஆளில்லை. அவர் தொழிற்சாலையை மூடிவிடலாம் என்று நினைத்திருந்தபோது, அமெரிக்க ராணுவம் ஆயிரம் துப்பாக்கிகளுக்கு ஆர்டர் கொடுத்தது. 1856இல் உலகம் முழுவதும் இருந்து துப்பாக்கிகள் கேட்டு வாங்கினர். கோல்ட் பெரும் பணக்காரர் ஆனார். ஸ்மித் அண்ட் வெஸ்சன் எனும் போட்டி நிறுவனமும் துப்பாக்கித் தயாரிப்பில் இறங்கியது. மனிதர்களை அழிக்கும் கொலைக் கருவிகள் தயாரிப்பில் போட்டி!
ரைஃபிள் என்பது நீண்ட குழல் உடைய பெரிய துப்பாக்கி. இதில் ஒரு குண்டு போட்டுச் சுடுவார்கள். இதனை மேம்படுத்தி பெஞ்சமின் டைலர் ஹென்றி என்பவர் பல தோட்டாக்களைத் திணித்துத் தொடர்ச்சியாகச் சுடக்கூடிய ரிபீட்டிங் ரைஃபிளை வடிவமைத்தார். 1860இல் வந்த இத்துப்பாக்கி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து கிறிஸ்டோபர் ஸ்பென்சர் என்பார் வேறு மாதிரி துப்பாக்கியை வடிவமைத்தார். அமெரிக்க வணிகரான வின்கெஸ்டர் என்பவர் மேலும் மேம்படுத்தப்பட்ட துப்பாக்கியை உருவாக்கினார். வின்கெஸ்டர் மாடல் துப்பாக்கிகள் இன்றளவும் தயாரிக்கப்படுகின்றன என்பதே அதன் சிறப்பைக் கூறும்.
(தொடரும்)
கண்டுபிடித்தது... கடவுள் அல்ல! - மதிமன்னன்
1862ஆம் ஆண்டில் ரிச்சர்ட் காட்லிங் என்பவர் மெஷின் கன் எனப்படும் இயந்திரத் துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். பித்தளைத் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பத்துக் குழாய்களில் அவை நிரப்பப்பட்டுச் சுடப்படுகின்றன. மிகமிக வேகமாகச் சுடக்கூடிய ஆற்றல் வாய்ந்தது. அமெரிக்காவில் நிறவெறியின் அடிப்படையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது இந்த வகைத் துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தது.
1884இல் ஹிரம் ஸ்டீவன் மாக்சிம் என்பவர் தானியங்கித் துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். சுடப்பட்ட தோட்டாக்களின் கூடுகள் தானாகவே வெளியே விழும் வகையிலும் புதிய தோட்டாக்கள் நிரப்பப்படும் வகையிலும் இது உருவாக்கப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்களைச் சுடும் ஆற்றல் உள்ளது. எடை குறைவாகவும் எடுத்துச் செல்ல எளிதாகவும் அமைந்துள்ளதால் அய்ரோப்பிய ராணுவங்களில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. முதல் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டு அது விளைவித்த உயிர்ச்சேதம் மிகவும் கடுமையும் கொடுமையும் ஆனதாகும். இரண்டாம் உலகப் போரிலும் அந்தக் காரணத்திற்காகவே மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.
சகமனிதர்களை எதிரியாகப் பாவித்து அவர்களைக் கொன்று தீர்ப்பதில் மனிதன் ஏன் இவ்வளவு ஆர்வம் கொள்கிறான்? சகமனிதனை நேசிக்காமல் கொல்லும் வெறுப்புணர்வு வளர்ந்தது எப்படி? யாரால்? இந்தத் தீய எண்ணம் மனிதனின் மனதில் தோன்றியதற்கும் வளர்ந்ததற்கும் யார் காரணி? இந்தத் தீங்குக்குத் தொடக்கம் எது? யார்? இதைத்தான் கிரேக்க அறிஞன் எபிகூரஸ் கேட்டார். கிறித்து பிறப்பதற்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவர் கேட்ட கேள்விக்கு விடையை எவரும் தரவில்லையே! எல்லாமும் கடவுள் செயல் என்றால் இதுவும் அதன் செயல்தானே! அப்படியானால் அதை என்ன செய்யலாம்? ஒன்றும் செய்ய முடியாது! அது கற்பனைதானே! அந்தக் கற்பனையை ஏற்பதைக் கைவிட வேண்டியதுதானே!
எந்திரத் துப்பாக்கியைக் கண்டுபிடித்த மாக்சிம் என்பாரின் மகன் ஹிரம் பெர்சி மாக்சிம் என்பார் தன் தந்தையின் கண்டுபிடிப்பின் வாயை அடைத்துவிட்டார்! மோட்டார் சைக்கிள் என்ஜின் போடும் சத்தத்தைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் சைலன்சர், மஃப்ளர் போன்ற ஒன்றை வடிவமைத்து எந்திரத் துப்பாக்கியில் பொருத்தினார். தோட்டா வெடிக்கும்போது ஏற்படும் பெரும்சத்தம் குறைந்துவிட்டது. ஓசைப்படாமல் வெடித்து உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறது. 1902இல் வடிவமைத்து 1909இல் காப்புரிமை பெறப்பட்ட இது காவல்துறையிலும் ராணுவத்திலும் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
கொடுமை என்னவென்றால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரும் இதனைப் பயன்படுத்தி ஓசைப்படாமல் சுட்டுத்தள்ளிக் கொண்டே இருக்கின்றனர் என்பதுதான்.
வானவெளியிலிருந்து பெரும் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தி அழிவை ஏற்படுத்தும் நிலை முதல் உலகப் போரில் 1914இல் தொடங்கியது. 1939இல் இரண்டாம் உலகப் போரில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டன. ஒரு பெட்டியில் வைக்கப்படும் பல குண்டுகள் வெடித்துச் சிதறிப் பல திக்குகளிலும் சிறுசிறு குண்டுகளாகப் பாய்ந்து பேரழிவைப் பெரும் பரப்பளவில் ஏற்படுத்தும். இரண்டாம் உலகப் போரின்போது இது மிகவும் கண்டனத்தைப் பலரிடம் இருந்தும் பெற்றது. பாரசூட் மூலம் வீசப்படும் கொத்துக் குண்டுகள் (Cluster Bombs) விமான தளங்கள், குடியிருப்புப் பகுதிகள் போன்றவற்றில் வீசப்பட்டன. இவை கான்கிரீட் தளங்களைப் பிளந்தன. ராணுவக் கவச மோட்டார்களை, டாங்கிகளை கிழித்து அழித்தன. வியட்நாம் நாட்டின் விடுதலை வீரர்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய அக்கிரமப் போரின்போது அமெரிக்கா பயன்படுத்தியது. நாபாம் போன்ற கொடிய வேதிப்பொருள் நிரப்பிய குண்டுகளை வியட்நாம், லாவோஸ், கம்போடியா நாடுகளின்மீது அமெரிக்கா வீசியது. அண்மையில் கொசாவோ, ஈராக், ஆப்கானிஸ்தான் நாடுகளின் மீது நடத்திய கொடுந் தாக்குதல்களிலும் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இலங்கையில் தங்கள் தாயகமான ஈழத்தின் விடுதலைக்காகப் போராடிய நிராதரவான தமிழ்க் குடிமக்கள் மீது சிங்கள இனவாத அரசு இத்தகைய கொத்துக் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்திக் கொன்ற கொடுமையும் நிகழ்ந்தது. மானுடப் பற்றாளர்களும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரும் குரல் எழுப்பி இக்கொடும் குண்டுகளைத் தடை செய்திட வேண்டுகோள் விடுத்தனர். ஆனாலும், கொடும் வல்லரசுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா போன்றவை கேளாக் காதினராக இருந்து வருகின்றனர்.
52 ஆயிரம் கோடி டாலர் செலவு செய்து மன்ஹாட்டன் திட்டம் என்ற பெரியாரியல் கமுக்கமாக ஆய்வு செய்து அமெரிக்கா கண்டுபிடித்த பேரழிவு ஆயுதம்தான் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட அணுகுண்டு. ஜெர்மனியில் ஆண்ட நாஜி அரசு (இட்லரின் ஆட்சி) அணுகுண்டைத் தயாரிக்கும் என்கிற அச்சத்தை இட்லரின் பரம எதிரிகளான யூதர்கள் சிலர் தெரிவித்தனர்.
ஜெர்மனியை முந்திக் கொண்டு தாம் தயாரித்து விடவேண்டும் என்று அமெரிக்கா துடித்தது. திட்டமிட்டது. திட்ட இயக்குநராக ராபர்ட் ஓபன்ஹீமர் என்பார் நியமிக்கப்பட்டார். 1942இல் தொடங்கிய ஆய்வு 16.7.1945இல் முதல் அணுகுண்டைத் தயாரித்தது. அதற்குப் பெயர் டிரினிட்டி எனச் சூட்டப்பட்டது. இந்து மதத்தில் மூன்று முக்கிய கடவுள்களுக்கு (திரிமூர்த்தி) இப்பெயர். கத்தோலிக்கக் கிறித்துவத்தில் பரிசுத்த ஆவி, தந்தை, தாய் ஆகிய மூன்றுக்கும் இப்பெயர். வழிபாட்டுக்கு உரியதாகக் கருதப்படும் மதப் பெயர் பேரழிவுக்குக் காரணமாகும் அணுகுண்டுக்கு வைத்த விசித்திரத்தை என்ன சொல்வது? கடவுள்களை நம்புவதும்கூட மனித இனத்தை அழித்திடும் மூடநம்பிக்கை என்பதாக இருப்பதால் வைத்தார்களோ? இதனை நியூமெக்சிகோவில் அலமகார்டோ என்ற இடத்தில் வெடிக்கச் செய்து சோதனை நடத்தின நாள் 16.7.1945! ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது வீசி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று மகிழ்ந்தது அமெரிக்கா?
அணுகுண்டு தயாரித்த மன்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்றிய எட்வர்ட் டெல்லர் என்பவர் ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க முடியும் என நம்பினார். முயற்சித்தார். ஸ்டானிஸ்லா உலம் என்பாருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்தார். ஹைட்ரஜன் குண்டைத் தயாரித்தார். இரண்டாம் உலகப் போரில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு 20 ஆயிரம் டன் TNT ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அய்வி மைக் (Ivy Mike) எனப் பெயர் சூட்டப்பட்ட ஹைட்ரஜன் குண்டு 104 லட்சம் டன் TNT ஆற்றல் பெற்றது என்றால் எத்துணை வலிமை வாய்ந்த பேரழிவு ஆயுதம் என்பதை விளங்கிக் கொள்ளலாம். 1952 நவம்பர் மாதத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டது.
இதனையெல்லாம் அறிந்த அறிஞர் அய்ன்ஸ்டீன் குறிப்பிட்டார். இந்த ஹைட்ரஜன் குண்டு மூன்றாம் உலகப் போரில் பயன்படுத்தப்படும். அந்தப் போருக்குப் பிறகு நடக்கும் போர்களில் கழி, கல் முதலியவற்றைக் கொண்டு தாக்கிக் கொள்வார்கள் என்று! எல்லாம்தான் அழிந்துபோய் இருக்குமே! கல்லும் கழியும்தான் எஞ்சி இருக்கும் என்ற கருத்து! சரிதானே! நம்முடைய நாட்டில் ஆயுத பூஜை என்று கொண்டாடுகிறார்கள். காவல்துறையும் ராணுவமும் கொலைக் கருவிகளுக்குப் பூஜை போட்டு வணங்குகிறார்கள். அவை என்ன மானுட வாழ்க்கைக்குப் பயன்படும் கருவிகளா? துப்பாக்கிகளைக் கண்டுபிடித்தவர்களின் பெயர் தெரியாது இவர்களுக்கு! ஆனால் பூஜை செய்கிறார்கள்.
இத்தகைய மடத்தனம் மலிந்திருப்பதால்தான் அறிவியல் மனப்பான்மையே இல்லாத மக்களாக இந்தியர்கள்! இம்மனப்பான்மை மாற்றப்பட்டு அறிவியலும் வளர வேண்டும், அரிய கண்டுபிடிப்புகளைச் செய்திட வேண்டும் என்கிற ஆர்வமும் ஆற்றலும் வளர வேண்டும். சும்மா வெறுமனே செக்கு மாட்டு வாழ்க்கை வாழக்கூடாது. இதற்கான கண்களை இந்திய மக்களுக்குத் திறக்க வைக்கக் கட்டுரை பயன்படட்டும்!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக