புதன், 24 ஜூலை, 2024

மருத்துவத்திற்கான நோபல் பரிசு! கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்தவர்களுக்கு!

 



கட்டுரையாளர்: கோவர் அந்தோணிராஜ்

2023-ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அடிப்படை அறிவியல் மூலமாக பெருந்தொற்றான COVID-19இல் இருந்து பல கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றிய mRNA தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் மிகவும் திறம்பட செயல்படக்கூடிய அந்த தடுப்பூசியை கண்டுபிடித்ததற்காக அங்கேரி நாட்டைச் சார்ந்த உயர்வேதியாளர் கேட்டலின் கரிக்கோ (Katalin Karikó) மற்றும் அமெரிக்காவை சார்ந்த நோய் எதிர்ப்பு நிபுணர் ட்ரூ வெய்ஸ்மேன் (Drew Weissman), University of Pennsylvania ஆகிய இருவருக்கும் இப்பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி மருந்தானது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு கூறுகளுடன் இணைந்து செயல்பட்டு நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய நோய் எதிர்ப்பு ஆற்றலை (ஆண்டிபாடிகளை) உருவாக்குகிறது. மேலும் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை நோய் காரணிகளுக்கு எதிராக பயிற்றுவிப்பது மூலம் நோய் காரணிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோயிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது.
முதல் தலைமுறை தடுப்பூசி மருத்துவமானது கொல்லப்பட்ட அல்லது பலவீனமாக்கப்பட்ட வைரஸிலிருந்து தயாரிக்கப்பட்டு போலியோ (polio), மீசல்ஸ் (measles), மற்றும் எல்லோ ஃபீவர் (yellow fever) போன்ற நோய் தொற்றிலிருந்து மனிதர்களை காப்பாற்றியது.

மூலக்கூறு அறிவியலின் துரித வளர்ச்சியின் காரணமாக நோய் தொற்றுக்கு காரணமான வைரஸின் குறிப்பிட்ட புரதப் பகுதி பிரித்தெடுக்கப்பட்டு அதை தடுப்பூசியாக அளிக்கும்போது நோய்க் கிருமிக்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்கி நோய் தொற்றிலிருந்து காப்பாற்றுகிறது. ஹெப்பாட்டிட்இஸ் பி வைரஸ் (hepatitis B virus) மற்றும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (human papillomavirus)- க்கு எதிரான தடுப்பூசி இந்த அடுத்த தலைமுறை தடுப்பூசி மருந்துக்கு உதாரணம் ஆகும். வைரஸின் பிரிக்கப்பட்ட புரதப் பகுதி பாதிப்பில்லாத வைரஸ் கேரியருக்குள் (vector) செலுத்தி பயன்படுத்தும் போது நோய்க் காரணிக்கு எதிரான மூலக்கூறுகளை உருவாக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது. எபோலா வைரஸ் (Ebola virus) தடுப்பூசி இதற்கு உதாரணம்.

மேற்சொன்னபடி வைரஸில் இருந்தோ, வைரஸின் குறிப்பிட்ட புரத மூலக்கூறில் இருந்தோ அல்லது vector அடிப்படையிலான தடுப்பூசிகள் தயாரிப்பதற்கு பல்வேறு படி செயல்முறைகள் தேவைப்படுவதால் குறுகிய காலத்தில் அதிக அளவிலான தடுப்பூசிகளை கரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் தயாரிப்பதில் சிரமம் உள்ளது. அதற்காக பல ஆண்டுகளாக எளியமுறையில் தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் நியூக்ளிக் ஆசிட் (DNA & mRNA) அடிப்படையிலான தடுப்பூசி மருந்தாகும். செல்களில் உள்ள மரபணு தகவல்கள் குறிப்பிடப்பட்ட DNA ஆனது mRNA ஆக மாற்றம் செய்யப்பட்டு உடலின் இன்றி அமையாததான புரதங்களை உருவாக்க உதவுகிறது. ஆகவே நோய்த் தொற்று கிருமிகளின் மரபணு தகவல்கள் பொறிக்கப்பட்ட DNA நியூக்ளியஸில் (nucleus) mRNA ஆக மாற்றமடைந்து புரத உற்பத்தியின் மூலம் நோய்க் கிருமியின் வழியான ஆன்டிஜென்களை உருவாக்குகிறது. அதன் பிறகு அதற்கு எதிரான ஆண்டிபாடிகளை நோய் எதிர்ப்பு மண்டலம் மூலம் தூண்டிவிட்டு நோய் தொற்றிலிருந்து நீண்ட காலம் நம்மை பாதுகாக்கிறது.

1990 தொடக்கத்தில் நியூக்ளிக் ஆசிட் (DNA & mRNA) தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகளில், DNA தடுப்பூசி அதிக வரவேற்பை பெற்றது. ஆனாலும் அவைகள் நமது செல்களின் மேற்பரப்பான plasma membrane மற்றும் செல்லில் உள்ள nucleus membrane கடந்து சென்று செயலாற்றுவது என்பது கடினமானதாலும், DNA தடுப்பூசி தேவையற்ற மரபணு மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதாலும் mRNA தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி அதிகரித்தது. mRNA செல்களின் plasma membrane கடந்து சைட்டோப்லஸ்மில் (cytoplasm) உள்ள ribosome-க்கு புரதங்களை உற்பத்தி செய்வதற்கான தகவல்களை கொடுத்து நோய்க் கிருமிக்கு எதிரான ஆன்ட்டி பாடிகளை உருவாக்குகிறது. mRNA தடுப்பூசியை செல்களில் செயல்படுத்துவதில் உள்ள சிரமம் மற்றும் அதன் மூலமான மரபணு மாற்ற செயல்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

mRNA தயாரிப்பதற்கான ஆராய்ச்சியில் வெற்றி அடைந்தாலும் அதனுடைய குறைந்த நிலைத்தன்மை மற்றும் நமது உடலுக்குள் செலுத்துவதில் உள்ள சிரத்தன்மை தடுப்பூசியின் பயன்பாட்டை சவால் ஆக்கியது. இந்த சவால்களை கலைந்து mRNA தடுப்பூசியை பயன்பாட்டுக்கு வந்ததற்கான ஆராய்ச்சிக்காக தான் இருவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பே கேட்டலின் (Katalin) சவால்கள் நிறைந்த mRNA, மருத்துவ பயன்பாட்டிற்கு உதவும் என்ற தொலைநோக்கு எண்ணத்துடன், நோய் எதிர்ப்பு நிபுணர் வெய்ஸ்மேன் (Weissman) உடன் இணைந்து செயல்பட்டு mRNA மருத்துவத்தில் உள்ள சவால்களை களைய ஆரம்பித்தனர். முதலில் தயாரிக்கப்பட்ட mRNA மருந்தானது செல்களுக்குள் செலுத்திய போது எதிர்பாராத எதிர் வினைகளை உருவாக்கியது. அதற்குக் காரணம் mRNA கட்டமைப்பு மூலக்கூறுகளான Adenine (A), Uracil (U), Guanine (G) மற்றும் Cytosine (C) என்று அவர்கள் ஊகித்ததால், கட்டமைப்பு மூலக்கூறுகளில் சிறிய மாற்றம் செய்து வேண்டத்தகாத எதிர்வினைகளை குறைத்தனர். இருவரின் தொடர்ச்சியான ஆராய்ச்சியின் மூலம் mRNA மூலக்கூறில் மாற்றங்களை செய்து எதிர்வினை நிகழ்வுகளை குறைத்ததோடு இல்லாமல் அதிகளவிலான நோய் எதிர்ப்பு புரதங்களை உற்பத்தி செய்வதிலும் வெற்றி அடைந்தனர்.

mRNA நோய் தடுப்பு மருந்து அயனி கொழுப்பு நானோ துகள்களுக்குள் (ionic lipid nanoparticle) செலுத்தப்பட்டு அதனுடைய பயன்பாடு பல மடங்கு நம் உடலில் அதிகரிக்கப்பட்டது. பல ஆண்டுகள் mRNA தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்தாலும் இவர்களின் mRNA மூலக்கூறு மாற்றப்பட்ட தடுப்பூசி தான் 95 சதவீதம் கோவிட் நோய் எதிர்ப்பாற்றல் தந்ததுடன் மிகக் குறுகிய காலத்தில் பன்மடங்கு தடுப்பூசிகள் தயாரிக்க உதவியது. இந்த mRNA மூலக்கூறு மாற்றப்பட்ட தடுப்பூசி தொழில்நுட்பமானது சவாலான சுகாதார நெருக்கடி காலத்தில் பல கோடி உயிர்களை காத்தது மட்டுமல்லாமல், இந்த நுட்பமானது மற்ற பல்வேறு நோய்களை குணப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக கேன்சர் நோயைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தகுந்த பயன்பாட்டை அளித்துள்ளதால் இந்த தொழில் நுட்பம் பல்வேறு நோய்களை குணமாக்குவதில் அளப்பரிய பங்களிப்பு தரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஞாயிறு, 23 ஜூன், 2024

ஹோமோ சேப்பியன்ஸ் ஷாம்பியாவில் நடந்த ஆய்வில் புதிய திருப்பம்


 நவம்பர் 1-15, 2023 

சரவணா இராஜேந்திரன்

முதன்முதலில் நடக்கத் துவங்கிய மனித இனம் உருவாக்கிய மரத்தால் ஆன கூடாரம் கண்டுபிடிப்பு!

தென்மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஜாம்பியாவில் உள்ள ஸாம்பி ஆற்றின் கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பழங்கால மனித வாழ்க்கை பற்றிய இன்றுவரையிலான கருத்தியலையே மாற்றிவிடும் வகையில் உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுமார் அய்ந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் தமக்கான கட்டமைப்பை உருவாக்க மரத்தைப் பயன்படுத்தி இருப்பதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள இந்தச் சான்றுகள், கற்கால மனிதனின் தங்குமிடங்களாக இருந்ததைக் காட்டுவதாக, ‘நேச்சர்’ ஆய்விதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது “இந்தக் கண்டுபிடிப்பு நமது ஆரம்பகால மூதாதையர்
களைப் பற்றி இதுநாள் வரையில் நமக்கு இருந்த புரிதலை மாற்றியுள்ளது,”

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் தலைமையிலான குழு, மனித இனத்தின் ஆழமான வேர்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக, பழங்காலத்தில் மரங்கள் பயன்பாட்டில் இருந்தனவா என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

இதன்படி ஜாம்பியாவில் உள்ள மேய்ச்சல் குழு ஒன்று இதுவரை காணாத ஒரு பொருளைக் கண்டதாகக் கொடுத்த தகவலின்படி அந்த நாட்டு அரசு தொல்பொருள் ஆய்வுக்குழுவை அனுப்பியது. பேராசிரியர் லாரி பர்ஹாம் தலைமையில் அக்குழு அங்கு சென்று ஆய்வு செய்து அது பழங்காலத்தில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டை என்பதை உறுதி செய்தனர்

இந்தக் கண்டுபிடிப்பு பழங்கால மனிதர்கள் எளிமையான, நாடோடி வாழ்க்கை நடத்தியதாகக் கருதும் தற்போதைய நமது எண்ணத்தை மாற்றியமைக்கக்கூடும்.
பண்டைய கால மனிதர்கள் மரத்திலிருந்து அவர்கள் தங்களின் புத்திசாலித்தனம், கற்பனை மற்றும் திறன்களைப் பயன்படுத்தி, தங்களது காலத்துக்கு முன்பும், பின்பும் பார்த்திராத ஒன்றை உருவாக்கினர்’’, என்கிறார் பர்ஹாம்.

மரக்குச்சிகள் உள்ளிட்ட பழங்கால மரப் பொருள்களை ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்தனர். ஆனாலும் அவற்றில், ஒன்றுக்கொன்று செங்குத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மரக்கட்டைகள் தான் அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

“ஒன்றன் மீது ஒன்று சாய்த்து வைக்கப்பட்டது போன்ற நிலையில் காணப்பட்ட அவற்றில் வெட்டுகளும் இருந்தன என்கிறார் ஆய்வுக் குழுவின் உறுப்பினரும், அபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான ஜெப் டல்லர் கூறினார்.

“இந்த மரக்கட்டைகளில் உள்ள வெட்டுகள், கல்லால் ஆன கருவியால் ஏற்பட்டவை “இது இரண்டு மரக்கட்டைகளையும் ஒன்றாகப் பொருத்தி ஒரு கட்டமைப்பாக ஆக்குகிறது” என்கிறார் டல்லர். பெரிய மரக்கட்டைகள் ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் இருந்தன, அவற்றில் கல் கருவிகளால் வெட்டப்பட்ட அடையாளங்கள் இருந்தன.

இந்த மரக்கட்டைகள் சுமார் 4.76 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பது மேற்கொண்டு செய்யப்பட்ட பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெருப்பை உருவாக்குவதற்கும் குச்சிகள், ஈட்டிகள் போன்ற தற்காப்புக் கருவிகளை உருவாக்குவதற்கும் தான் மனிதன் மரத்தைப் பயன்படுத்தி வந்தான் என்பதே இதுவரை நமது புரிதலாக உள்ளது.

பிரிட்டனின் எசெக்ஸுக்கு உட்பட்ட கிளாக்டன் பகுதியில் மணலில் புதைந்திருந்த மர ஈட்டி ஒன்று கடந்த 1911இல் கண்டெடுக்கப்பட்டது. உலகின் பழமையான மரக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்பட்ட அது, 4,00,000 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஜாம்பியா -தான்சானியா எல்லைக்கு அருகில் உள்ள கலம்போ நீர்வீழ்ச்சிக்கு மேலே வளைந்து செல்லும் ஆற்றங்கரையில் தற்போது இரு மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை தண்ணீரில் மூழ்கியிருந்ததாகக் கருதிய ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் காலத்தை லுமினென்சென்ஸ் டேட்டிங் தொழில்நுட்பம் மூலம் கணக்கிட்டனர்.

அதில், எந்த வகையான பண்டைய மனிதர்கள் அல்லது மனித இனங்கள் இவற்றை உருவாக்கினர் என்பதைத் தெளிவாகக் கணிக்க இயலவில்லை. மேலும், இந்த மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இதுவரை எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், 3,15,000 ஆண்டுகள் பழமையான நாகரிக மனிதன் அல்லது ஹோமோசேப்பியன் புதைபடிவங்களைவிட இந்த மரக்கட்டைகள் மிகவும் பழமையானவை என்பது மட்டும் டேட்டிங் தொழில்நுட்ப ஆய்வில் தெரிய வந்தது.

இரண்டு மரக்கட்டைகளில், சிறியதான ஒன்றின் நீளம் சுமார் 1.5மீ (5அடி). அதை மற்றொன்றுடன் பொருத்தி ஏதோவொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கக் கூடும்.

ஆனால் அது ஒரு குடிசை அல்லது நிரந்தர வசிப்பிடமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறும் ஆய்வுக் குழுவினர், அது ஒரு தங்குமிடத்திற்கான தளத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆற்றங்கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதற்கு வசதியான ஒரு கட்டமைப்பாக இருந்திருக்கலாம் என்றும் பேராசிரியர் டல்லர் கூறினார்.

ஆனால், அவை எந்த வகையான கட்டமைப்பாக இருந்திருக்கும் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்வது கடினம் எனவும் அவர் தெரிவித்தார். “ஜாம்பியா ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மரக்கட்டைகள் ஹோமோசேப்பியன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாமா என்று எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் அந்தக் காலத்தைய புதைபடிவங்களை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை,” என்கிறார் பேராசிரியர் டல்லர். ஆனால், “தென்னாப்பிரிக்காவில் அந்த நேரத்தில் பல மனித இனங்கள் இருந்தன. எனவே ஹோமோ எரெக்டஸ் அல்லது ஹோமோ நலேடி மனித இனங்களின் காலத்தைச் சேர்ந்தவையாக இவை இருக்கலாம்,” என்கிறார் அவர்.

பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பிற்காக இந்த மரக்கட்டைகள் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கடந்த அரை மில்லியன் ஆண்டுகளாக மிகவும் அழகாகப் பாதுகாக்கப்பட்ட நீர்த் தேக்கத்தைப் பிரதிபலிக்கும் தொட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ள அவை, விரைவில் மீண்டும் ஜாம்பியாவுக்குக் கொண்டு வரப்படும் என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.

“இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், எங்கள் சேகரிப்பை வளப்படுத்தவும், ஜாம்பியாவில் மரவேலைப் பாரம்பரியத்தின் இருப்பு குறித்து விளக்குவற்கான ஆய்வுகளுக்கும் இந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்தலாம் என்று நம்புகிறோம்,” என்று என்கோம்ப்வே கூறினார். கொலம்போ நீர்வீழ்ச்சித் தளத்தில் பணியைத் தொடர்ந்த அவர், “பண்டைய மரவேலை நுட்பங்கள், கைவினைத்திறன் மற்றும் சுற்றுச்சூழல் உடனான மனிதத் தொடர்புகள் குறித்த நமது அறிவை ஆழப்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளன,” என்கிறார். ஹோமோசேப்பியன்ஸ் என்ற இன்றைய மனிதர்களுக்கு முன்பு ஹோமோ எரக்டன்ஸ், ஹொமோ நலேடி உள்ளிட்ட 14 வகை நிமிர்ந்து நடக்கும் இன்றைய மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் இருந்தனர். இதில் ஹோமோ சேப்பியன்ஸ்களுக்கு முன்பு ஜாம்பியாவில் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த எரக்டன்ஸ்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அய்ரோப்பாவில் வாழ்ந்த ஹோமோ நியண்டர்தாலென்ஸிஸ் ஹோமோசேப்பியன்ஸ் ஆதிக்கத்தால் அழிந்தே போனார்கள். ஆனால் ஹோமோ எரக்டன்ஸ் ஹோமோ சேப்பியன்ஸ்களின் ஆதிக்கத்தையும் மீறி ஆசியக்கண்டங்களில் பரவி இருந்தனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதர ஹோமோ அந்தேசெசர், Homo antecessor எரக்டஸ் Homo erectus, பிலோரெசியன்சிஸ் Homo floresiensis ஹபிலிஸ் Homo heidelbergensis ஹெடெல்பர்கென்சிஸ் Homo habilis லோங்கி Homo longi, நியாண்டர்தாலென்ஸிஸ் Homo neanderthalensis ரொடொசியன்ஸிஸ் Homo rhodesiensis, ருடொல்ஃபென்ஸிஸ் Homo rudolfensis போன்றவை காலஓட்டத்தில் ஹோமோசேப்பியன்ஸ்களோடு போட்டியிட முடியாமல் அழிந்து போயின.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மரக்கட்டைகளைப் பயன்படுத்திய மனிதர்களை ஒத்த உயிரினத்திற்கும் தற்போது நிலநடுக்கோட்டுப் பகுதியில் வசிக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்றும் இதன் மூலம் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற மனித இனம் மட்டுமே உயிரினவாழ்வியல் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றும் அதற்கு முன்பே ஓர் உயிரினம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. மரக்கட்டைகளின் பகுப்பாய்வு மேலும் அப்பகுதியில் கிடைக்கும் உயிரின எச்சங்கள் மூலம் மனித இனத் தோற்றத்தின் வரலாற்றில் மேலும் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்படும் என்பதில் அய்யமில்லை. ♦


ஞாயிறு, 16 ஜூன், 2024

கடவுள் கற்பனையைப் போட்டுடைத்த சார்லஸ் டார்வின்



– முனைவர் வா.நேரு

சமூக விஞ்ஞானி தந்தை பெரியார் 1879-ஆம் ஆண்டு பிறந்து 1973-ஆம் ஆண்டு மறைந்தார். அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி பிறந்து, ஏப்ரல் 19, 1882இல் தனது 73-ஆம் வயதில் மறைந்தார். தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகளுக்குப் பின்பும் அவர் நினைக்கப்படுவதும், அவரின் பணி இன்னும் பல பணிகளை நாம் ஆற்றுவதற்கு அடிப்படையாகவும் உந்துதலாகவும் இருப்பதைப் போலவே சார்லஸ் டார்வின் மறைந்து 140 ஆண்டுகள் ஆனாலும் அவர் தொடங்கி வைத்த பணி என்பது இன்னும் முழுமையாகவில்லை, தொடர்ந்து அறிவியல் அறிஞர்கள் புதிய புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு அடிப்படையாக அமைந்திருக்கிறது.


மனிதர்களை எளிதாக வசப்படுத்துவதற்கு கடவுள் என்னும் கற்பனையை மதவாதிகள் ஏற்படுத்தி, இந்த உலகம் என்பது கடவுளால் படைக்கப்பட்டது, இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும், எப்படி எப்படி இருக்கிறதோ, அப்படி அப்படியே கடவுளால் உருவாக்கப்பட்டது என்னும் சித்திரத்தை மனிதர்களின் மனங்களில் மிக ஆழமாக வரைந்து வைத்திருந்தனர். அதனை மிகக் கட்டுப்பாடாக பிரச்சாரத்தின் மூலம் நிலை நிறுத்தி வைத்திருந்தனர். இந்த மனச்சித்திரத்தை போட்டு உடைத்தவர் சார்லஸ் டார்வின்.

ஆனால், அன்றைக்கு சார்லஸ்டார்வின் அவர்கள் சொன்ன இயற்கைத் தேர்வும், பரிணாமமும் என்னும் கோட்பாடு பலருக்குப் புரியவில்லை. மதவாதிகள் அதை எதிர்த்து பரப்புரை செய்த நிலையில், சக அறிவியல் அறிஞர்களும் ஓவன் போன்றவர்களும் சார்லஸ் டார்வினின் கோட்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் எதிர்த்து இருக்கின்றனர். இன்றைக்கு சார்லஸ் டார்வின் அவர்-களின் இயற்கைத் தெரிவு, உயிரினங்கள் தோற்றம், பரிணாம வளர்ச்சி போன்றவற்றை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது, ஆனாலும் மதவாதிகள் இன்றும் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக கிறித்துவ, இஸ்லாமிய சமூகத்தைச்சார்ந்த மதவாதிகள் பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி ஏற்றுக்கொள்வது, தங்கள் மத நூல்கள் சொல்லும் கருத்துக்கு எதிரானது என்று கருதுகின்றனர்.

அறிவியல் என்பது உண்மை. ஒரு கருத்தை எடுத்துக்கொள்வது, அந்தக் கருத்தை அறிவியல் முறைப்படி சோதனைகள் செய்வது.
சோதனைகளின் முடிவுகளை அட்டவணைப் படுத்துவது, மீண்டும் மீண்டும் சோதனைகள் செய்து உண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டுவது என்பது அறிவியல் வழிமுறையாகும். சார்லஸ் டார்வின் அவர்கள் 160 ஆண்டுகளுக்கு முன்னால் தனது ஆய்வுப் பயணத்தின் விளைவாக விளைந்த கருத்தினை, பரிணாமக் கொள்கையினை ஆராய்ச்சி செய்தவர்.மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களைச் சேகரித்து,சேகரித்து இயற்கைத் தெரிவு என்னும் கருத்தினை வெளியிட்டவர். பல சோதனைகளுக்கும் ஆய்வுகளுக்கும் 20 ஆண்டுகள் உட்படுத்தி, தான் உலகில் பல பாகங்களில் கண்ட, பரிசோதித்த கருத்தினை
தன்னுடைய கோட்பாடாக வெளியிட்டவர். அவரின் ஆராய்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது தொல்லுயிர் படிவங்
களும் (இறந்த உயிர்களின் உடல்கள்) ஆமைகளும்.

இன்றைய உலகிலேயே இல்லாத, அழிந்து போன இனமான டைனோசர் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகத்தில் வாழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. கீழடியில் கிடைத்த ஒரு மண்பாண்டம் 3500 ஆண்டுகளுக்கு முந்தை
யது என்பதை இந்தக் கரிமக் காலக் கணிப்பு மூலமாகக் கண்டறிய முடிகிறது.தொல்லுயிர்ப் படிவங்கள் மூலமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த உயிரினங்கள் இப்படித்தான் வாழ்ந்திருக்கும் என்னும் முடிவைக்கூட இன்றைய அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி விடை தரும் ‘கரிமக் காலக் கணிப்பு’ பற்றி அறியாத சார்லஸ் டார்வின் அவர்கள் மிக நுட்பமாக இந்த உலகில் இருக்கும் உயிரிகளின் பரிணாம வளர்ச்சியை தனது ஆராய்ச்சியின் மூலம் சொன்னது வியப்பாக இருக்கிறது.
மரபணுக் குறியீடு(நிமீஸீமீtவீநீ சிஷீபீமீ) பற்றிய ஆராய்ச்சி இன்றைக்கு அறிவியலின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. உயிரியல் துறை என்பது தனது புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நம்மை வியப்பில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறது. பாரம்பரியப் பண்புகள் எப்படி தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுகிறது என்பதைப் பற்றியெல்லாம் பல விளக்கங்கள் இன்று நமக்குக் கிடைக்கிறது.குரோமோசோமுக்குள் இருக்கும் மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சியும் அதன் விளைவாக விளையும் பயனும் மனித குலத்திற்கு மிகப்பெரிய பாய்ச்சலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

மனித உடலுக்குள்இன்றைக்கு ஏறக்குறைய 30000 மரபணுக்கள் இருக்கின்றன, மனித உடலில் இருக்கும் ஒவ்வொரு மரபணுவும் எப்படிப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களில் இருக்கும் மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் புதிது புதிதாய் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஒருவன் மிகத் தீவிரமான பக்திமானாக இருப்பதற்குக் காரணமாக இருக்கும் மூளைக்குள் இருக்கும் வேதிப்பொருள்கள் பற்றியும் மரபணுக்கள் பற்றியும் ஆராய்ச்சி இன்று நடந்துகொண்டிருக்கிறது.

ஒருவன் பெண் பித்தனாக, காமப் பைத்தியம் பிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? அதனை மரபணு மாற்றத்தின் மூலமாக மாற்ற இயலுமா? என்பன போன்ற சோதனைகளும், செயற்கை இருதயம் பொருத்துவதுபோல செயற்கை மூளையை உருவாக்க முடியுமா என்னும்
முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், இன்னமும் கடவுள்தான் இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்களைப் படைத்தார் _ படைக்கிறார் என்று சொல்பவர்களும் மதவாதிகளும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர், தான் படித்த காலத்தில், தனக்குப் பாடம் நடத்திய கிறித்துவ நம்பிக்கை கொண்ட ஆசிரியர், சார்லஸ் டார்வின் அவர்களின் பரிணாமக் கொள்கைப் பாடத்தை நடத்திவிட்டு, முடிவில் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்த சார்லஸ் டார்வின் அவர்கள் தன்னுடைய கடைசிக் காலத்தில், இவை எல்லாம் தப்பு என்றும், கடவுள்தான் உலகத்தைப் படைத்தார் என்றும் டைரியில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார் என்றும் சொன்னார் என்பதைச் சொன்னார்.
அறிவியல் ஒருபக்கம் உண்மையை வெளிப்-படுத்திக் கொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் கடவுள் நம்பிக்கையாளர்கள் அறிவியலுக்கு எதிரான கருத்துகளை விதைத்துக் கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக குழந்தைகள் மனதில் விதைக்கிறார்கள். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் ‘கடவுள் இல்லை,கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை’ என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி அதையே அடிப்படை முழக்கமாக வைத்தார். கடவுள் இந்த உலகத்தைப் படைக்கவில்லை, இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் எல்லாம் இயற்கையாக, பரிணாம வளர்ச்சியில் தோன்றியவை என்று நிரூபணம் செய்த சார்லஸ் டார்வின் அவர்களைத் தந்தை பெரியார் தந்த ஈரோட்டுக் கண்ணாடி வழியாகப் பார்க்கின்றபோது மிகத் தெளிவாக சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை அறிய முடிகிறது. மிக நுட்பமாக உணரமுடிகிறது. வாழ்க சார்லஸ் டார்வின் அவர்களின் புகழ்!

ஞாயிறு, 26 மே, 2024

ஞாயிறின் முதல் ஒளியை படம் பிடித்த ஜேம்ஸ் வெப்

விடுதலை ஞாயிறு மலர்
Published November 25, 2023

நமது சூரியன் உருவாகி 470 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது. சூரியன் உருவாக்கத்தின் போது வெளிப்பட்ட ஒளிக் கற்றையை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இதன் மூலம் நாம் நமது சூரியனின் குழந்தைப் பருவத்தின் போது வெளிப்பட்ட ஒளிக்கற்றையைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒளிப்படக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை பத்திரப்படுத்தி அது எடுக்கப்பட்ட காலத்தில் இருந்த மக்களை  200 ஆண்டுகளுக்குப் ஒளிப்படமாக பார்க்கிறோம் அதாவது அந்தப் படங்களைப் பத்திரப்படுத்தி நமது பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

நமது சூரியனின் குழந்தைப் பருவத்தைப் பார்க்கமுடியுமா? என்ற கேள்விக்கு ஜேம்ஸ் வெப் விடை மட்டும் கூறவில்லை. நமக்கு காண்பித்தும் உள்ளது. 

சூரியனை ஒத்த வேறொரு விண்மீனின் பிறப்பைக் கண்கூடாகப் பார்ப்பதன் மூலம், நமது சூரியனின் பிறப்பு குறித்து நாம் புரிந்துகொள்ள முடியும். அதையே இப்போது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி செய்துள்ளது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மூலம் தற்போது கிடைத்துள்ள இந்த அற்புதமான, புகழ்பெற்ற புதிய படத் திலிருந்து உங்களுக்கு ஒரு சான்றும் 3 கிடைக்கும். இப்படத்தின் மய்யத்தில், 50,000 ஆண்டுகள் பழைமையான பிபி212 என்று அழைக்கப்படும் இந்தத் தொடக்கநிலை ‘குழந்தை விண்மீன்’’ உள்ளது.

நம்முடைய சூரியனும் இதே வயதாக இருந்தபோது இந்தக் காட்சியில் தோன்றுவதைப் போலவேதான் இருந்திருக்கும்.

வாயு மற்றும் தூசியின் அடர்த்தியான, சுழலும் வட்டுக்குள் மறைந்திருப்பதால், புரோட்டோ ஸ்டார் நிலையில் இருந்தே பளபளப்பை நீங்கள் உண்மையில் பார்க்க முடியாது.

துருவ எதிர் திசைகளில் அதிவேகமாகப் பாயும் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணத்திலான வாயுக்கள் மற்றும் தூசியின் காட்சிகள் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும்.

குழந்தை விண்மீனில் உள்ள வண்ணங்கள் எதைக் குறிக்கின்றன? HH212-வின் படம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் நியர் இன்ஃப்ராரெட் கேமரா (NIRCam) மூலம் பதிவு செய்யப்பட்டது. வாயு மற்றும் தூசியின் அடர்த்தியான, வீழும் ஒளிக்கற்றை மூலம் அது மறைக்கப்பட்டிருப்பதால், HH212 என்ற புரோட்டோ ஸ்டாரை பார்க்க முடியாது. பார்வைக்குத் தெரியும் வகையில் சில முதிர்ந்த விண்மீன்கள் உள்ளன, ஆனால் பெரும் பாலான ஒளி புள்ளிகளாகத் தெரிபவை தொலைதூர விண்மீன் கூட்டங்களாகும்.

HH212 என்ற இந்த குழந்தை விண்மீன் ஓரையான் விண்மீன் மண்டலத்தில் அமைந் துள்ளது. இந்த விண்மீனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் ஆகும்.

வியத்தகு வகையில் வெளியேறும் வாயுக்களின் ஆற்றல் தான் இந்த குழந்தை விண்மீன் அதன் செயல்முறைகளை ஒழுங்கு படுத்துவதற்கான வழிமுறையாகும். அதில் தெரியும் வண்ணங்களின் மூலமாக அந்த வாயுக்களை நாம் தெரிந்துகொள்ளலாம்.

“மய்யத்தில் உள்ள வாயுப் பந்து சுருக்கப் படுவதால், அது சுழல்கிறது. ஆனால் அது மிக வேகமாகச் சுழன்றால், அது தனியாகப் பிரிந்து பறந்துவிடும்.”இது வெளிநோக்கி அதிவேகமாகப் பாயும் வாயுக்கள் என்று தான் என்று நாங்கள் நினைக்கிறோம். அனைத்துப் பொருட்களும் சுருங்கும்போது, காந்தப்புலங்கள் ஒன்றாக இழுக்கப்படுகின்றன.

பின்னர் மய்ய வட்டு வழியாக வரும் சில பொருட்கள் காந்தப் புலங்களினால் ஈர்க்கப்பட்டு துருவங்கள் வழியாக வெளியே அதிவேகமாக வீசப்படுகின்றன. அதனால்தான் நாம் இந்த கட்டமைப்புகளை இருமுனை என்று அழைக்க முடிகிறது” என்று அய்ரோப்பிய விண்வெளி முகமையின் மூத்த அறிவியல் ஆலோசகர்  தெரிவித்தார்.

அமெரிக்கா, கனடா மற்றும் அய்ரோப்பிய கூட்டுத் தயாரிப்பான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் துல்லியமாக வான் பொருட்களைப் படம்பிடிக்க உதவுகிறது.

இளஞ்சிவப்பு-சிவப்பு நிறம் மூலக்கூறு ஹைட்ரஜன் இருப்பதைக் காட்டுகிறது. இது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது (புரோட்டோ ஸ்டாரின் பெயரில் உள்ள “பிபி” போல). 2.12 மைக்ரான் அகச்சிவப்பு அலைநீளத்தில் (இது புரோட்டோ ஸ்டாரின் பெயரின் இரண்டாம் பகுதி) முக்கியமாகப் படம் பிடிக்கப்பட்ட இந்த வெப் படத்தில் அதிர்வலைகள் வெளியேறி, அவற்றை ஒளியேற்றி, பிரகாசமாக ஒளிரச் செய்கின்றன.

மேலே உள்ள படத்தில், இடது மற்றும் வலது புறம் உள்ள காட்சிகளை உன்னிப்பாகப் பார்த்து, அவை ஒவ்வொன்றிலும் பிரகாசத்தின் முடிச்சுகளைக் கண்டறியவும். அந்த அதிர்வுகளை எண்ணிப் பாருங்கள். வேகமான பொருள் அதற்கு சற்று முன்னால் மெதுவாகச் செல்லும் பொருளில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வுகள் தான் அவை.

இந்த கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் சமச்சீராக உள்ளன. வலதுபுறத்தில் மிகவும் குழப்பமான அதிர்வுகள் இருந்தாலும் அவை கூடுதலாக இருப்பதாகத் தோன்றுகிறது.

உண்மையில், மறுபுறம் ஒரு முழுமைப் படுத்தும் அதிர்வுகள் இருக்கலாம். இந்த வெப் படத்தின் பரந்த காட்சியில் நிச்சயமாக அதுகுறித்த பிங்க் நிற குறிப்புகள் உள்ளன. அந்தத் திசையில் விண்வெளியில் உள்ள வாயு மற்றும் தூசியின் அடர்த்தி மெல்லியதாக இருப்பதால், தூண்டுவதற்கு குறைவான பொருள் உள்ளது. அதனால் அதிர்ச்சியின் அமைப்பு மிகவும் பரவலானதாகத் தோன்றுகிறது.

வானியல் விஞ்ஞானிகள் HH212- ஐ 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். அது என்ன மாற்றங்களை எதிர்கொள்கிறது என்பதைப் பார்க்க அவ்வப்போது அதன் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

HH211 என்ற விண்மீன் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மற்றொரு இளம் விண்மீனாகும்.

ஜேம்ஸ் வெப் சூப்பர் தொலைநோக்கியில் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது போல, முன்பு இருந்ததை விட 10 மடங்கு கூர்மையான படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், விஞ்ஞானிகள் விண்மீன் உருவாக்கத்தை தூண்டும் செயல்முறைகளை ஆழமாக ஆராய இந்த படங்கள் உதவிகரமாக இருக்கும்.

அதிவேகமாக வெளியேறும் வாயு கட்டமைப்புகளில் உள்ள கூறுகள் காலப் போக்கில் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பார்க்க, ஒரு முழு பட வரலாற்றையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்பது ஒரு நல்ல அம்சமாகும். மீண்டும் மீண்டும் கவனிப்பதன் மூலம், அந்த விண்பொருட்கள் நகரும் வேகத்தையும் நீங்கள் அளவிட முடியும். அது வினாடிக்கு 100 கி.மீ. மற்றும் அதற்கு மேல் இருக்கும்.

HH என்பது மூலக்கூறு ஹைட்ரஜனைக் குறிக்கிறது. அது ஒரு நேர்த்தியான பொருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் 1940கள் மற்றும் 50களில் இந்த வகைப் பொருளில் முன்னோடியாகப் பணியாற்றிய ஜார்ஜ் ஹெர்பிக் மற்றும் கில்லர்மோ ஹாரோ ஆகியோருக்குப் பிறகு இந்த பிபி என்பது உண்மையில் ஹெர்பிக்-ஹாரோவைக் குறிக்கிறது.

ஜேம்ஸ் வெப்பின் திறன்களைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. வெப் அதன் 6.5 மீட்டர் நீளமுள்ள முதன்மைக் கண்ணாடியால் காட்சிப்படுத்தக் கூடிய படத்தின் கூர்மை மட்டுமல்ல, அதன் கருவிகள் இப்போது கண்டறியக் கூடிய வண்ணத்தின் ஆழமும் இந்த தொலைநோக்கியை மிகவும் சிறப்பான தாக்குகிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வானியல் தொடர்பான பல துறைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

“நாங்கள் கூறியது போல், இந்த விஷயங் களைப் பார்ப்பதற்கான முக்கிய அலைநீளம் – அதிர்வடைந்த மூலக்கூறு ஹைட்ரஜனைப் பார்ப்பதற்கு – 2.12 மைக்ரான் அல்லது நடுவில் காணக் கூடியதை விட தோராயமாக நான்கு மடங்கு அதிகம். ஆனால் முதல் முறையாக, இப்போது நம்மிடம் ஒரு நல்ல வண்ணப் படம் உள்ளது.

இந்தக் குறிப்பிட்ட பொருளை நீங்கள் தரை தொலைநோக்கியில் இருந்து பார்க்க முடியாது என்பதுடன், மற்ற அலைநீளங்களில் எங்களால் அதைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அதிவேகமாக வெளியேறும் வாயுக்களில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிய இது எங்களுக்கு உதவும்” என்று பேராசிரியர் மெக்காக்ரியன் கூறினார்.

ஜேம்ஸ் வெப் பல வானியல் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெர்பிக்-ஹாரோ பொருட்கள் குறித்த ஆய்வுகள் நிச்சயமாக பயனடைந்துள்ளன.

கீழே பாருங்கள், HH211 எனப்படும் HH212 தம்பியைப் பார்த்து நீங்கள் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். பெர்சியஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள இந்த விண்பொருள் இன்னும் குழந்தை நிலையிலேயே உள்ளது. அதாவது சிலஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தான் அது தோன்றியிருக்க வேண்டும். நம் சூரியன் இப்படித் தான் உருவாகி தற்போதைய நிலையை அடைந்துள்ளது என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

ஞாயிறு, 12 மே, 2024

பூமியின் நிறம் நீலம் என்று கூறிய முதல் மனிதர்



விடுதலை ஞாயிறு மலர்
Published May 13, 2023

விண்வெளியில் முதலில் பறந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961ஆம் ஆண்டில் வாஸ்டாக் 1 என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார். அவர் விண்வெளி சென்ற ஏப்ரல் 12ஆம் தேதி, மனிதன் விண்வெளியில் பறந்த பன்னாட்டு நாளாக இப்போது கொண்டாடப்படுகிறது.

அவர் விண்வெளிக்குச் செல்வதற்கு முன்னதாக ஒரு நாய், ஒரு பூனை போன்றவை அனுப்பப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டிருந்தன. அவர் பங்கேற்றது மிகவும் ஆபத்தான பரிசோதனை. ஆனால் அது வெற்றிகரமாக நிகழ்ந்தது. 20ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் அவர் விண்வெளியில் பறந்தது மிகப் பெரிய திருப்புமுனை.

விண்ணில் பறந்த முதல் மனிதனான அவர், அப்படிப் பறந்தபோது, பதற்றமாக இருந்த நேரத்தில் தனது “வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது” போல இருந்ததாகக் கூறினார். அப்போது அவர் கூறிய அந்தப் பிரபலமான உவமைதான், இப்போது வரை பலராலும் எடுத்தாளப்பட்டு வருகிறது. ‘பூமி ஒரு நீல நிறக் கோள்’ என்பதை முதலில் சொன்னவரும் அவர்தான். இதற்குக் காரணம், அவரால் தானே முதன்முதலில் புவியை வெளியிலிருந்து பார்க்க முடிந்தது.

20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வந்த ரஷ்யா, முதலாளித்துவ ஆட்சி நடந்து வந்த அமெரிக்காவுக்கு இடையே விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய போட்டி நிலவியது. (ககாரின் வானில் வெற்றிகரமாகப் பறந்ததற்குப் போட்டியாகத்தான் நீல் ஆம்ஸ்ட்ராங்கை அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிவைத்து, பரிசோதனை நடத்தியது). அந்தப் பின்னணியில் சோவியத் விண்வெளித் திட்டத்தின் கீழ் விண்வெளியில் பறப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் யூரி ககாரின்.

இந்தத் திட்டத்துக்கு ககாரின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், அவர் அடக்கத்துடன் இருந்ததும், சிக்கலான கணிதக் கோட்பாடுகளைக் கையாளத் தெரிந்திருந்ததும், சட்டென்று எதிர்வினை ஆற்றியதும், இதற்கெல்லாம் மேலாக உடலை உறுதியுடன் வைத்திருந்ததும்தான்.

அவரைச் சுமந்து சென்ற வாஸ்டாக் 1 விண்கலம் வெறும் 108 நிமிடங்களில் உலகை வலம் வந்தது. அப்படியானால் அது எவ்வளவு வேகத்தில் சுற்றியிருக்கும்? அப்படிச் சுற்றியிருந்தால், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி என்ன, ஹெலிகாப்டரே பறந்திருக்கும்! ககாரின் அதை அழகாகச் சொல்லியிருக்கிறார் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

விண்வெளியில் பறந்துவிட்டுத் திரும்பிய பிறகு, உடல் எடையற்று இருந்ததுபோல உணர்ந்ததை, முக்கியமான வேறுபாடாக ககாரின் கூறியிருக்கிறார். “ஒரு நபர் அந்தரத்தில் கைவிடப்பட்டால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது,” என்று கூறியிருக்கிறார். அந்தரத்தில் உதிர்ந்து காற்றில் கீழே மிதந்து தரையிறங்கி வரும் ஒரு இலையைப் போல இருந்திருக்கும். இந்த அனுபவத்தை முதலில் பெற்ற மனிதர் அவரே.

வெற்றிகரமாக விண்வெளியில் பறந்த யூரி ககாரின், அதற்குப் பிறகு ஒரு நாயகனாகக் கொண்டாடப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள நாளிதழ்கள் அவரது கதையையும், அவர் பறந்த விதத்தையும் பற்றிக் கட்டுரைகளை வெளியிட்டன. ரஷ்யாவில் மதிப்புக்குரியதாக மதிக்கப்படும் கிரெம்ளின் மாளிகைக்கு ககாரின் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ‘சோவியத் யூனியனின் ஹீரோ’ என்ற உயரிய பட்டத்தை அப்போதைய சோவியத் அதிபர் நிகிதா குருஷ்சேவ் அவருக்கு வழங்கினார்.

அதற்குப் பின், ககாரின் ஓர் உலக சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். இது அவருக்கு மேலும் புகழைத் தேடித் தந்தது. சில நாடுகள் அவரை கௌரவிக்கும் விதமாக அஞ்சல்தலைகள், அஞ்சல் உறைகள், நினைவுக் காசுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளன.

ஆனால் விண்வெளியில் வெற்றிக்கொடி நாட்டிய ககாரினைப், பிற்காலத்தில் ஒரு விமானம் கைவிட்டுவிட்டது. 1968இல் மார்ச் 27இல் ராணுவ விமானம் ஒன்றை ஓட்டிச் சென்றபோது, விபத்தில் சிக்கி அவர் இறந்தார்.

2011 ஏப்ரல் 7ஆம் தேதி அய்.நாவின் 65ஆவது பொது அவை அமர்வு, ஏப்ரல் 12ஆம் தேதியை விண்வெளியில் மனிதன் பறந்ததற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது. “நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கு உதவும் வகையில் விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டுவதிலும், மக்கள், நாடுகளின் வளங்களை அதிகரிப்பதில் விண்வெளி அறிவியல் துறை அளித்துவரும் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், இந்த நாள் அனுசரிக்கப்படும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

“அமைதிக்கான காரணங்க ளுக்காகவே விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்பது ககாரினின் ஆசை. இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சியை நடத்தி வரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக பணியாற்றி வருகிறார்கள்.

ககாரின் விண்ணில் பறந்த பிறகுதான் விண்வெளியில் நடப்பது, விண்வெளி நிலையம் அமைப்பது போன்ற மற்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இன்றைக்கு ‘விண்வெளிக்குப் பறப்பது’ என்பது ஆச்சரியத்துக்கு உரிய ஒரு விஷயமாக இல்லை. இப்போது விண்வெளி சுற்றுலா பற்றியும் பேசப்பட்டு வருகிறது.

1961 ஏப்ரல் 12ஆம் தேதி வெறும் 108 நிமிடங்களில் (2 மணி நேரத்துக்கு 12 நிமிடங்கள் குறைவு) உலகம் தலைகீழாக மாறியது. அது யூரி ககாரினுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும்தான்.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

திராவிட வீராங்கனை பெரியார் பெருந்தொண்டர் தி.ஜெயலெட்சுமி அவர்களுடன் ஒரு நேர்காணல்

 



வி.சி.வில்வம்

பெயரை எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டபோது, சமஸ்கிருத ‘ஜெ’ பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும் என்றும் பெரியார் சாக்ரடீசு சொல்லியுள்ளார் எனத் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் காரைக்குடி
தி.ஜெயலெட்சுமி அவர்கள்! நான்கு தலைமுறையாக ஒரே இயக்கம், ஒரே கொள்கை என்பது பெரும் சாதனை தான்!
“எந்த ஒரு செயலுக்கும் தொடக்கம் முக்கியமல்ல; தொடர்ச்சி தான் முக்கியம்” என்பார்கள். அந்த வகையில் காரைக்குடி என்.ஆர்.சாமி குடும்பத்தின் மருமகளாக 55 ஆண்டுகள் இருந்து வரும் நிலையில், குடும்பம் வேறு; இயக்கம் வேறு என்றில்லாமல், மிகச் சிறந்த பெரியார் தொண்டராக இயங்கி வருபவர் தி.ஜெயலெட்சுமி அவர்கள்! இவர் காரைக்குடி சாமி.திராவிடமணி அவர்களின் வாழ்விணையர் ஆவார்!
விடுதலை ஞாயிறு மலருக்காக அவரைச் சந்தித்தோம்.

வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
நான் பிறந்தது காரைக்குடி தான். எனது பெற்றோர் கும.ராம.நா.இராமநாதன் – லெட்சுமி அம்மாள். நகரத்தார் குடும்பம் என்று அழைப்பார்கள். எனது தந்தையார் சிவபக்தர். கட்டுப்பாடான குடும்பம். நான் காரைக்குடி எஸ்.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, அதே பள்ளியில் படித்த சாமி.திராவிடமணி அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. பிறகு 1968 ஆம் ஆண்டு பெரியார் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

நீங்கள் நகரத்தார் குடும்பம் என்கிறீர்கள், அவர்கள் கடுமையான பெரியாரியல் குடும்பம். திருமணத்திற்கு எதிர்ப்பு அதிகம் இருந்திருக்குமே?
ஆமாம்! எங்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. சமாளிக்க முடியாது என்கிற சூழலில், சிவகங்கையில் சாமி.திராவிடமணி அவர்களின் சகோதரி தமிழரசி – ஜெயராமன் இல்லத்திற்குச் சென்று விட்டோம். அங்கு 15 நாட்கள் இருந்தோம். அப்போது பொட்டு வைக்க வேண்டும் என நான் சொன்ன போது, நாங்கள் பொட்டு வைப்பதில்லை எனத் தமிழரசி கூறினார்கள். அப்போது தான் இவர்கள் அனைவரும் பெரியார் கொள்கையில் இருப்பதையே அறிந்தேன்.
பிறகு திருச்சி சென்று பெரியாரை சந்திக்கலாம் என, சிவகங்கையில் இருந்து தொடர்வண்டியில் பயணம் செய்தோம். காரைக்குடி இரயில் நிலையத்தில் இவர்களின் அண்ணன் சாமி.சமதர்மம் அவர்கள் எங்களைச் சந்தித்தார்கள். பெரியாருக்குச் சிபாரிசு கடிதமும், கொஞ்சம் பணமும் கொடுத்தார்கள்.
முதன் முதலாக நான் திருச்சி பெரியார் மாளிகைக்குச் செல்கிறேன். அப்போது என் வயது 18, திராவிடமணி அய்யாவுக்கு 20. கருப்புச் சட்டை அணிந்த தோழர்கள் ஏராளம் நின்றனர். இரண்டு கருப்பு நாய்களும் அங்கே இருந்தன. எனக்குப் புது அனுபவம். எனது உணர்வுகளைப் புரிந்து கொண்ட பெரியார், அருகில் வர சொல்லி அமர வைத்தார்.
“இந்தத் திருமணத்தில் உங்களுக்கு சம்மதமா? நகரத்தாரிடம் கடுமையான எதிர்ப்பு இருக்கும். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?”, என்று பலமுறை கேட்டுக் கொண்டார். அன்றைய தினம் திருச்சி டவுன் ஹாலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெரியார், மணியம்மையார், புலவர் இமயவரம்பன், மகாலிங்கம் ஆகியோருடன் எங்களையும் வேனில் ஏற்றிக் கொண்டனர். மேடையில் தனக்குப் பக்கத்தில் எங்கள் இருவரையும் அமர வைத்து, “இந்தப் பெண் நகரத்தார் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார். குறைந்தது ரூ.5 இலட்சம் இல்லாமல் திருமணம் செய்ய மாட்டார்கள். பையன் வணிகம் செய்பவர். இருவரும் இரண்டு மாலைகளுடன் வந்துள்ளார்கள். மிக எளிமையான திருமணம்”, எனக் கூறி ஒப்பந்த உறுதிமொழியைக் கூறினார் பெரியார்! கூட்டம் முடியும் வரை அங்கேயே இருந்தோம்.

திருமணத்திற்குப் பிறகு உங்கள் பெற்றோரை சந்தித்தீர்களா?
திருமணத்திற்குப் பிறகு நாங்கள் காரைக்குடிக்கே வரவில்லை. சிவகங்கையில் 6 மாதமும், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 4 மாதமும் இருந்தோம். அதன் பிறகே காரைக்குடி வந்தோம். சுமார் 25 ஆண்டுகள் கழித்தே பெற்றோரைச் சந்தித்தேன்.

திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை எப்படி போனது?
குடும்பம் புதிது; கொள்கையும் புதிது! இந்நிலையில், “உங்கள் வீட்டில் எப்படி இருப்பீர்களோ, அப்படியே இங்கும் இருக்கலாம்”, என மாமா என்.ஆர்.சாமி அவர்கள் கூறினார்கள். என்னை அவர்கள் பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. “சாக்ரடீஸ் அம்மா” என்று தான் அழைப்பார்கள். பின்னாளில் நானும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் போகத் தொடங்கினேன்.
குடும்பமே இயக்கம் என்கிற அளவில்தான் இருந்தது. என்.ஆர்.சாமி அவர்களின் குடும்பத்தில் மட்டும் இதுவரை 19 சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 3 திருமணங்களைப் பெரியார் நடத்தி வைத்துள்ளார். 16 திருமணங்களைத் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் தான் நடத்தி வைத்தார். இதில் தன் விருப்பத் திருமணம் (காதல்) மட்டும் 13.

பெரியாரைப் பிறகு எப்போது சந்தித்தீர்கள்?
1968ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளன்று, திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள மனமகிழ் மன்றத்தில், “பெரியார் சுயமரியாதைக் குடும்பங்கள் விருந்து” என்கிற சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் நாங்களும் கலந்து கொண்டோம். தந்தை பெரியார், ஆசிரியர் போன்றோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.
1968இல் திருமண வாழ்க்கைத் தொடங்கியதில் இருந்து, இன்று வரை அனைத்து நிகழ்ச்சிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள் எல்லாவற்றிலும் பங்கேற்று வருகிறேன். சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு நான் தான் தலைமை வகித்தேன். முதல் நாள் முழுக்க உடல்நிலைச் சரியில்லாத சூழலிலும் ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். திடீரென மயக்கம் ஏற்பட்டு சாலையிலே விழுந்து விட்டேன். உடனே மதுரை அன்னத்தாயம்மாள் உள்ளிட்ட தோழர்கள் தூக்கிச் சென்றனர்.

இயக்க நிகழ்வுகளில் பங்கேற்ற மறக்க முடியாத அனுபவங்கள் என்ன?
நிறைய இருக்கிறது! தஞ்சை மாவட்டம் குடவாசலில் நடைபெற்ற மாவட்ட மகளிரணி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஏராளமான மாநாடுகளில் தீர்மானங்கள் வாசித்திருக்கிறேன். தஞ்சை திலகர் திடலில் சுயமரியாதை இயக்கப் பொன்விழா மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது.
சேலம் அண்ணாமலை, இறையன், திருவாரூர் சுப்புலெட்சுமிபதி, ஆம்பூர் மீரா ஜெகதீசன், குயில்தாசன், சென்னை ஹேமலதா தேவி, தங்கமணி, குணசேகரன் போன்றோர் குடும்பமாகப் பங்கேற்று அங்கேயே தங்கிக் கொள்வோம். தனியாக வந்தவர்கள் வீட்டிற்குச் சென்று வருவார்கள்.
ஒருமுறை காரைக்குடி கூட்டத்திற்குப் பெரியார் வந்திருந்தார். அப்போது நான் செல்லவில்லை. ஜெயலட்சுமி எங்கே எனப் பெரியார் கேட்டதும், உடனே காரை எடுத்துக் கொண்டு திராவிடமணி அய்யா வீட்டிற்கு வந்துவிட்டார்கள். நான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறேன்.
பெரியார் கேட்கிறார், உடனே வா என அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது, பெரியார் பேசிக் கொண்டிருக்கிறார். நான் மேடை ஏறியதும், என்னைப் பார்த்த பெரியார், “இந்த நோஞ்சானுக்கு ரெண்டாவது டெலிவரியா?” என ஒலிபெருக்கியிலே கேட்க, கூட்டத்தில் அனைவரும் சிரித்துவிட்டனர்.
பொதுவாக என்னைப் பார்த்தால், “எப்படி ஆச்சி இருக்கீங்க?” என்றுதான் பெரியார் கேட்பார். “பெற்றோர் பேச வில்லை என்று வருத்தப்பட வேண்டாம். மணி (திராவிடமணி) நன்றாகப் பார்த்துக் கொள்வார். ஏதாவது குறை என்றால், என்னைத் தந்தையாக நினைத்து என்னிடம் கூறவும்” எனப் பெரியார் கூறுவார்.
மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோயிலில், கருவறை நுழைவுப் போராட்டத்தை 1973 இல் பெரியார் அறிவித்தார். இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம், போராட்டத்தில் பங்கேற்போர் பெயர் கொடுக்கவும் என ‘விடுதலை’யில் அறிவிப்பு வந்தது. “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை” என நாங்களும் பெயர் கொடுத்தோம். அப்படி பெயர் கொடுத்த பட்டியலில் எங்கள் வரிசை எண் 1073, 1074.

மணியம்மையார் அவர்களின் நட்பு குறித்துக் கூறுங்கள்?
கூட்டங்களில் பெரியாருடன் நிறைய முறை பார்த்துள்ளேன். பெரியார் மறைவுக்குப் பிறகு, சரியாக ஒரு மாதம் கழித்து, 24.01.1974 அன்று காரைக்குடி வருகிறார்கள். ஆசிரியரும் வருகை தந்தார்கள். உறுதிமொழி ஏற்பு நாள் பொதுக் கூட்டம் அப்போது நடைபெற்றது. எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார்கள். தோழர்கள் அனைவரையும் சந்திக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் பெரியார் வேனில், மணியம்மையாரும், ஆசிரியர் அவர்களும் பயணம் செய்தார்கள். எங்கள் வீட்டில் இருந்த போது, எனது அத்தை பேராண்டாள் அவர்களிடம் அடுப்படிக்குச் சென்று சில சமையல் முறைகளை மணியம்மையார் அவர்கள் கேட்பார்கள். பெரியாருக்கு எலும்புக் குழம்பு (எலும்பு சூப்) மிகவும் பிடிக்கும்.

தேவகோட்டை, காரைக்குடி தோழர்கள் குறித்து சொல்லுங்கள்?
திராவிடர் கழக மாநில மாநாடு, சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு ஆகியவை 1973ஆம் ஆண்டு, ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்தது. இதுதான் பெரியார் நடத்திய கடைசி மாநாடு. அந்த மாநாட்டில் நாங்கள் நாடகம் நடத்தினோம். பார்ப்பன எதிர்ப்பை மய்யமாக வைத்து “தீ பரவட்டும்” எனும் ஒரு நாடகம். இது பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பெ.ஜெகதீசன் எழுதியது. மூடநம்பிக்கையை மய்யமாக வைத்து “சந்தனதேவி” என்றொரு நாடகம். இது காரைக்குடி தங்கராசு எழுதியது.
அந்த மாநாட்டிற்கு காரைக்குடி, தேவகோட்டையில் இருந்து இரண்டு பேருந்துகளில் சென்றோம். இறையன், செம்பியன், இளங்கீரன், டாக்டர் சுப்பிரமணியன். ஆசிரியர் மு.முருகன், பெருவழுதி, கமலம் செல்லத்துரை, தேவ.சீனி.அருணன், பள்ளத்தூர் சிவ.சுப்பிரமணியன் போன்றோர் குடும்பமாகச் சென்றோம்.

கழக மகளிருக்கு அப்போது சீருடை இருந்ததா?
பெண்களுக்குச் சட்டை மட்டும் கருப்பு நிறம் இருந்தது. பிறகு கருப்பு நிற சேலை, சிவப்பு நிற சட்டை என மணியம்மையார் அறிவித்தார்கள். நான்கு நாளில் அது வெள்ளை நிற சட்டை என மாறியது. ஆக கருப்பு சேலை, வெள்ளை சட்டை என்பது இன்று வரை தொடர்கிறது. பெண்களை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வர வேண்டும் என ஆசிரியர் அடிக்கடி வலியுறுத்துவார்கள். தஞ்சாவூரில் நடைபெற்ற மகளிரணி மாநாட்டிற்கு, வீட்டில் பெண்களை அழைத்து வரவில்லை என்றால், 5 ரூபாய் அபராதம் என்று கூட ஆசிரியர் அறிவித்தார்கள்.

நகரத்தார் சமூகத்தில் இருந்து, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, இந்த இயக்கக் குடும்பத்திற்கு வந்த நிலையில், உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?
குடும்பத்தினருடன் இணைய பல காலங்கள் பிடித்தது. அதுவும் 1968இல் காதல் திருமணம் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சில பொருளாதார சிரமங்கள் இருந்தது. ஆனால் நாளடைவில் அது மாறியது. ஒருவேளை பெற்றோர் விரும்பியவாறு திருமணம் நடந்திருந்தால், சமூக உணர்வுகள் இன்றி, சராசரியாக வாழ்க்கை போயிருக்கும். பெரியார் சந்திப்பு, அதுவும் பொதுக் கூட்டத்தில் திருமணம், இயக்க உறவுகள், குறிப்பாக நமது ஆசிரியரின் பேரன்பு போன்றவை நிகழ்ந்தே இருக்காது. என்னை நேர்காணல் செய்வதற்கும் இந்த வாய்ப்பு அமைந்திருக்காது!
அப்போது மாவட்டப் பொருளாளராக இருந்தவர் மரக்கடை சுப்பிரமணியன் அவர்கள். எல்லா வகையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். பெரியார் சாக்ரடீசை, “வாடா மணி மகனே” (மணி என்பது திராவிடமணி) என்றுதான் அழைப்பார். அந்த நினைவில் தான் உண்மை இதழில் “மணிமகன்” என்கிற புனைப் பெயரில் பெரியார் சாக்ரடீசு எழுதினார்.
ஒருமுறை நான் இறந்துவிட்டதாகக் காரைக்குடியில் சிலர் வதந்தியைப் பரப்பிவிட்டார்கள். உடனே மரக்கடை சுப்பிரமணியம் அவர்கள் காரைக்குடி முழுவதும் என்னை ஊர்வலமாக வர ஏற்பாடு செய்து, அவர்கள் வீட்டில் எங்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார்கள்.
இயக்க நிகழ்வுகளைப் பேசப் பேச அது மலரும் நினைவுகளாய், வரலாறாய் செல்கிறது” என தி.செயலெட்சுமி கூறினார்!

‘உயிரினங்களின் தோற்றம்’ – வீ.குமரேசன்

 

‘உயிரினங்களின் தோற்றம்’ – வீ.குமரேசன்

விடுதலைநாளேடு

‘உயிரினங்களின் தோற்றம்’
உலகில் நிலவிவந்த தவறான நம்பிக்கையைப் புரட்டிப்
போட்ட உண்மை அறிவியலாளர் – சார்லஸ் டார்வின்
இன்று (12.2.2024) டார்வினின் 224ஆம் ஆண்டு பிறந்த நாள்

திராவிடர் இயக்க வரலாற்றின் குறிப்புகளை மிகுதியாகக் கொண்டது செப்டம்பர் மாதம் எனலாம். பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் அந்த மாதத்தில் தான் நடைபெற்றுள்ளன – தொடங்கியும் உள்ளன. அது போலவே அறிவியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த தமது கண்டுபிடிப்புகளை மானுட பயன் பாட்டிற்கு – மேம்பாட்டிற்கு வழங்கிச் சென்றுள்ள அறிவியலாளர் பலர் – சிந்தனையாளர் சிலரின் பிறந்த நாள் கள் – மறைந்த நாள்கள் – பிப்ரவரி மாதத்தில் உள்ளன.

“எதனையும் சிந்தித்து செயலாற்று; அவர் சொன்னர், இவர் சொன்னார் எனக் கருதி நம்பி முடிவு செய்திடாதே” என்று ஏதென்ஸ் நகர் மக்களிடம் பகுத்தறிவுப் பயன் பாட்டை எடுத்துரைத்த தத்துவ அறிஞர் சாக்ரடீஸ் தண்டனையாக விஷம் குடிக்க வைத்து கொல்லப்பட்ட நாள் ‘பிப்ரவரி 15′ (பொ.ஆ.மு. 533).

‘பூமியைச் சுற்றித்தான் பிற கோள்கள், சூரியன் உள்பட வலம் வருகின்றன’ என்றிருந்த கருத்தினை தலைகீழாக்கி, உண்மையில் ‘சூரியன்தான் மய்யம். பிற கோள்கள்தான் பூமி உள்பட, சூரியனை சுற்றி வரு கின்றன’ எனும் உண்மையினை வெளிப்படுத்தியதற்கு, அரசின் கொடுமைகளுக்கு ஆளாகி ‘கொல்லப்பட்ட’ நிக்கலஸ் கோபர்நிகஸ் பிறந்த நாள் பிப்ரவரி 19 (பொ.ஆ.1473).

‘அண்டம் (universe) எல்லையற்றது; அதற்கு மய்யம் இருக்க முடியாது. சூரியன் ஒரு நட்சத்திரம்’ எனும் அறிவியல் உண்மையைச் சொல்லி மதபோத னைப் புத்தகத்தில் சொல்லப்பட்டவைக்கு எதிராக பேசியதற்காக, தீயிலே போட்டு துன்புறுத்தப்பட்டு ஜியார்டானோ புருனோ கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 17 (பொ.ஆ.1540).

கோபர் நிக்கஸின் கோட்பாடுகள் சரி என வலிந்துரைத்து டெலஸ்கோப் அமைப்பை விரிவாக்கி, வானவியல் உண்மைகள் பலவற்றை வெளிக் கொணர்ந்து, அறிவியல் வழிமுறைகள் பற்றி கூறியதால் சிறைத் தண்டனைகள், கொடுமைகளுக்கு ஆளான கலிலியோ கலீலி பிறந்த நாள் பிப்ரவரி 15 (பொ.ஆ. 1642).

‘உயிரினங்கள் படிப்படியாக நடைபெற்ற மாற்றங் களால் தோன்றியவையே. (இன்றைக்கு இருக்கும் வடிவமைப்பிலேயே திடீரென உருவாகவில்லை). இன்றைக்கு உள்ள உயிரினங்கள் ஆண்டாண்டு கால மாக தங்களை தக்க வைத்துக் கொள்ள போராடிய வைகளின் தொடர்ச்சிதான். இதில் கால வெள்ளத்தில் தங்களுக்கான தெரிவை தேர்ந்தெடுக்காத உயிரினங் கள் பல அழிந்து விட்டன’ என தனது பல்லாண்டு கால ஆராய்ச்சியில் பரிணாமக் கொள்கையை நிறுவிய சார்லஸ் டார்வின் பிறந்தது பிப்ரவரி 12 (பொ.ஆ. 1809).
பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் தற்காலிகமானவைதான். இதில் ஒன்றும் புனிதம் கிடையாது – ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவுபடுத்தி அந்த அறிவியலாளர்கள் உலக மக்களுக்கு வழங்கிய பங்களிப்பிற்கு நன்றி பாராட்டி, பயன்படுத்திட வழி கோலும் ஒரு முறை. அவ்வளவே!

சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வின், இயல்பாகவே புழு, பூச்சி, விலங் குகள், சுற்றுப்புற சூழல் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து வளர்ந்தவர். அவரது தந்தையார், தாத்தா ஆகியோர் மருத்துவர்கள் என்ற நிலையில், டார்வினும் மருத்துவராக வரவேண்டும் என குடும்பத்தார் விரும் பினர். அதில் நாட்டம் இல்லாத நிலையில் ‘இறையியல்’ கல்லூரியில் சேர்ந்து படித்திடுவதற்கு பணித்த நிலையில் அப்படியே செய்தார். இறையியல் படிப்பை முடித்ததும் திருச்சபையில் சேர்ந்து ஊழியம் செய்திட டார்வின் விரும்பவில்லை. திருச்சபையின் நம்பிக் கைக்கு மாறாக பின்னாளில் அறிவியல் கோட்பாட்டை நிறுவிட இருந்த டார்வினுக்கு, திருச்சபையில் சேர்ந்து பணியாற்றிட, எப்படி விருப்பம் இருந்திருக்க முடியும்?
தான் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் பழக்கத்தில் இருந்த தாவரவியல் ஆசிரியர் கென்ஸ்லோ (Henslow) வுடான தொடர்பைத் தவிர. உயிரியல் குறித்து முறையாக படிப்பு படிக்காத ஒரு இயற்கை அறிவியலாளர் – டார்வின். 22 வயதில் உலகைச் சுற்றிப் பார்த்து உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்ள கடல் பயணம் மேற்கொள்கிறார். அய்ந்து ஆண்டுகள் பயணம் செய்கிறார்.

பல நாடுகளில் வாழும் விலங்கினங்களின் – பறவையினங்களின் உடலமைப்பு, நடவடிக்கைகள் குறித்து நேரடியாக பார்த்தும், இறந்த பிறகு உடல் எச்சங் களில் மிச்சம் இருக்கும் உறுப்புகளைச் சேகரித்தும் திரும்புகிறார். ‘ஒரே விதமான பறவை பல நாடுகளில் தோற்றங்களில் ஏன் மாறுபடுகின்றது?’ என பல கேள்விகளை தன்னுள் டார்வின் கேட்டுக் கொள்கிறார். பயணம் முடிந்து நாடு திரும்பியதும், உடன் பழகிய அறிவியலாளர்களின் வற்புறுத்தலில்தான் ‘உயிரினங் களின் தோற்றம்’ (Henslow) எனும் நூலினை தனது 40ஆம் வயதில் (1859) வெளியிடுகிறார். இதில் மனித இனம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. பின்னா ளில் தான் நிறுவிய ‘பரிணாமக் கொள்கை’க்கான சுருக் கம்தான் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்பதை டார்வின் கூறுகிறார். தான் ஆய்வு செய்து நிறுவிய பரிணாமக் கொள்கை குறித்து அறிவியல் உலகம் பரவலாக அறிந்து வந்த நிலையில் 1871ஆம் ஆண்டில் தனது 62 வயதில்

‘பாரம்பரிய மாற்றத்தால் வந்த மனிதன்’ (The Descent of Man)எனும் ஆய்வு நூலை வெளியிடுகிறார்.
மதபீடங்கள் காட்டிய எதிர்ப்பு

மனித இனத்தை குறித்து ஆய்வு வெளிவந்த நிலையில் மத பீடங்களிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. மத குருமார்கள் டார்வினை கடுமையாக எதிர்த்தனர். பொதுவெளியில் டார்வின் கேலி, கிண்டல் செய்யப் பட்டார். இன்றைய மனிதன் முந்தைய குரங்கினத்திலிருந்து வந்திருக்க கூடிய வாய்ப்பு உள்ளது என்றார். தனது ஆய்வுக் குறிப்புகளில் கடவுளைக் குறித்து டார்வின் எங்குமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும் அன்று நிலவிய – இன்றும் நிலவி வரும், ‘கடவுள்தான் மனிதனைப் படைத்தார்’ என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாத ஒன்றை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற மக்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் கடவுளுக்கு – கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் டார்வின் என சித்தரிக் கப்படுகிறார். ஆனால் இறுதிவரை தான் கண்டறிந்த அறிவியல் உண்மை நிலையிலிருந்து டார்வின் பின் வாங்கவில்லை.

டார்வின் கண்டறிந்த பரிணாமக்
கொள்கை என்பது என்ன?

1. மாற்றம் – எல்லா உயிரினங்களிலும் மாற்றம் நடை பெற்றுக் கொண்டுதான் வருகிறது (இந்த மாற்றங்கள் ஒரு மனித வாழ்வு காலத்தில் தொடங்கி முடிவடைவது இல்லை). இன்று உள்ள மனித இனமே மாற்றத்தின் முற்றுப்புள்ளி அல்ல.
2. தலைமுறையாகப் பெருக்கம்: ஒத்த உயிர் வடிவத்தைக் கொண்டுள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்கது.
3. உயிர் வாழ்வதற்கான போராட்டம்(Struggle for existence): ஒவ்வொரு உயிரினமும் தான் வாழும் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல்களை கணித்து உருவாக்கிக் கொள்ளும்; அதற்கேற்ற முறை யில் இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து மாறுதல் களை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த ஒட்டுமொத்த மாறுதல்களுக்கு உரிய வகையில் செயல்படாத உயிரினங்கள் கால வெள்ளத்தில் இல்லாமலே போயிருக் கின்றன. இது ஒரு வகையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வரும் போராட்ட மாறுதல் முறையாகும். (இந்த போராட்டத்தில் வெற்றி காணு பவை பிழைத்துக் கொள்ளும்; மற்றவை இல்லாமலே போய்விடும்).
இந்த உண்மையானது அதுவரை நிலவி வந்த கட வுள்தான் அனைத்து உயிரினங்களையும் இன்றைக்கு இருக்கும் வடிவமைப்பிலே படைத்தார் என்பதை இயல்பாகவே மறுத்து விடுகிறது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவரல்ல டார்வின். கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதை ஒரு காலக்கட்டத்தில் நிறுத்திக் கொள்கிறார். மற்றபடி கடவுளுக்கு எதிரான, மத பீடத்திற்கு எதிரான கருத்துகளை எடுத்துரைக்க வில்லை. பரிணாமக் கொள்கையின் தாக்கத்தால் மதபீடம் ஆட்டம் கண்டது; அதனால் அது டார்வினுக்கு பல்வேறு தடைகளை விதித்தது. அவை பற்றி பொருட் படுத்தாதவராகவே டார்வின் வாழ்ந்து மறைந்தார்.

இன்றைய அறிவியல் வளர்ச்சி, ஆய்வுக் கூட கட்டமைப்பு தொழில்நுட்பப் பெருக்கம். டார்வின் காலத்தில் இல்லை. கண்ணில் பார்த்தவை குறித்து ஆய்வு செய்து அனுமானத்தின் அடிப்படையில் தொடங்கி தக்க ஆதாரங்களோடு தகுந்த கண்டறிதலை உலகிற்கு அளித்தார். டார்வினைப் போலவேதான் அவர் காலத்தில் வாழ்ந்த, முன்னர் வாழ்ந்த அறிவியலாளர்கள் – பலரும் வெளிப்படையாக பார்த்த – ஆனால் புலப்படாத உண்மைகளை அறிவியல் உலகிற்கு வழங்கிச் சென்றார்கள். அன்று அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்தவைகளால் இன்று உயிரினங் களின் மரபணுக்கள் பற்றிய ஆய்வு உரிய கட்டமைப்பு வசதிகளுடன் தொடர்ந்து வரும் வேளையில் மறுக்க முடியாதவைகளாக இருப்பது சிறப்புக்குரியதாகும்.

மாறும் அறிவியல் உண்மைகள்

மத நம்பிக்கைகள் எந்நாளும் மாறாத் தன்மை யானவை. ஆனால் அறிவியல் உண்மைகள் வருங் காலத்திலும் அப்படியே தொடரும் எனச் சொல்லிவிட முடியாது. உரிய ஆதாரங்களுடன் புதிய உண்மைகள் அறியப்படும் நிலையில், இன்று நிலவிடும் உண்மைகள் மாறக்கூடிய நிலை வரலாம்; இதுதான் அறிவியல் உண்மைகளுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் உள்ள வேறுபாடு. ஆனால் மேற்கத்திய உலகில் செய்த தவறை ஏற்றுக் கொள்வது வெகு காலம் கடந்த நிலை யில் நிகழ்ந்துள்ளது.
“மனிதர்களைச் சிந்தித்து கருத்துகளின் மீது முடி வெடுக்கச் சொன்னதால் – இளைஞர்களின் மனதை கெடுக்கிறார்” என்று அரச நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, கொல்லப்பட்டார் சாக்ரடீஸ் – சென்ற நூற்றாண்டில்தான் கிரீஸ் நாட்டு நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தவறு – குற்றச்சாட்டும் தவறு என வெளிப் படையாக தெரிவித்தது.

சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்த கிறிஸ்தவ மத பீடம், 2009ஆம் ஆண்டில்தான் டார்வி னின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டது; தாம் நடத்திடும் கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திடும் நிலையினை உருவாக்கியது.

அறிவியல் வேறு; போலி அறிவியல் வேறு

காலங்கடந்தும் உண்மையை ஏற்றுக் கொள்வதுதான் அறிவு நாணயமிக்க செயல். ஆனால் கடவுளரே அவதாரங்கள் பலவாக எடுத்துப் பிறந்த இந்த ‘புனித மண்ணில்’ அறிவியலுக்கு புறம்பான எதிர்வினையை விட – திரிபுவாத நிலையினை உருவாக்கும் செயல்தான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையும் எந்த ஆதாரமுமின்றி வெறும் புராணப் புனைவுகளை மட்டும் சுட்டிக் காட்டி – அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் முன்னரே இந்த மண்ணில் நிலவி வந்தவைகள் என – அறிவு நாணய மற்ற கூற்றுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. அறிவியல் அல்லாதவற்றை வெறும் வியாக்கியனங்கள் மூலமாக அறிவியலை போன்று சொல்லுவது வாடிக் கையாகப் போய்விட்டது. போலி அறிவியலை மூலதன மாக்கி ஆதிக்க சக்திகள் ஊக்கம் பெற்று வரும் நிலை முறியடிக்கப்பட வேண்டும். அறிவியல் வேறு; போலி அறிவியல் வேறு என இனம் பிரித்து புரிந்து கொள்ளும் நிலை – அதனை பரவலாக எடுத்துச் செல்லும் நிலை சிறிய அளவில்தான் நடைபெற்று வருகிறது. இப்படிப் பட்ட செயல்கள் மேலும் வலுப்பட்டு பெருகிட வேண்டும்.

அறிவியல் மனப்பான்மை பெருகிடுக

சார்லஸ் டார்வினின் 224ஆம் பிறந்த நாளில் அறிவுப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டிய செய்தி இதுவே; பொய்மைக்கு ஆதரவு காட்டிடாத அடக்கு முறைக்கு ஆளாகாத துணிவு பெருகிட வேண்டும். அறிவியல் செய்திகளை பரவலாக்கி, இயல்பாகவே அனைவரும் அறிவியல் மனப்பான்மை கொண்டு எதனையும் அணுகிடும் பாங்கினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சார்லஸ் டார்வினின் அறிவியல் உண்மைகள் வாழ்க! பிற அறிவியல் உண்மைகளும் பல்கிப் பெருகிடுக!