வியாழன், 27 நவம்பர், 2014

கோள்கள் உண்டாவது எப்படி?



மேலே உள்ள படத்தில் நட்ட நடுவே இருப்பது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம்.அதைச் சுற்றிலும் பல சுழல்கள். இவை வாயுக்கள், அண்டவெளித் தூசு அடங்கியவை.
பல மிலியன் ஆண்டுகளில் ஒவ்வொரு சுழலிலும் உள்ள வாயுக்களும், தூசும் ஒன்று திரள ஆரம்பித்து மணல் துணுக்குகளாகி கற்களாகி, பாறைகளாகிப் பின்னர் ஈர்ப்பு சக்தியின் விளைவாக மொத்தையாகி இறுதியில் கோள்களாக வடிவெடுக்கும்.
கோள்கள் இவ்விதமாகத் தான் உருவாகின்றன. இதுவரை இது ஏட்டளவில் அறியப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. இப்போது இதை நாம் கண்கூடாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்றும் கூறலாம்.
தென் அமெரிக்காவில் சிலி நாட்டில்  என்று சுருக்க மாகக் குறிப்பிடப்படும் அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம்  உள்ளது. இது வானில் ரிஷப என்னும் பகுதியில் ஒரு நட்சத்திரத்தைப் படம் எடுத்தது.  படத்தில் காணப்படுவது ஓர் இளம் நட்சத்திரம். அதன் வயது பத்து லட்சம் ஆண்டுகள்.  இப்போது அந்த நட்சத்திரத்தைச் சுற்றி வெறும் சுழல்கள் - வளையங்கள்  மட்டுமே உள்ளன.
இன்னும் பல கோடி ஆண்டுகளில் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி கோள்கள் உருவாகி விடும்.  அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம் விசேஷ வகையிலானது. வழக்கமான வான் ஆராய்ச்சிகூடங்களில் லென்ஸ் அல்லது பிரதிபலிப்புத் தகடு இருக்கும். இவை நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியை ஆராய்பவை, அத்துடன் படம் எடுப்பவை.
நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவது ஒளி அலைகள் மட்டுமே அல்ல. மின்காந்த அலைக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு அலைகளும் வெளிப்படுகின்றன. ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் முதலியவை இவற்றில் அடங்கும்.
மைக்ரோ வேவ் என்று வருணிக்கப்படுகின்ற அலைகளும்  நட்சத்திரங்களிலிருந்து வருகின்றன. இவற்றை மில்லி மீட்டர் மற்றும் சப் மில்லி மீட்டர் அலைகள் என்றே குறிப்பிடுகின்றனர். சிலி வான் ஆராய்ச்சிக்கூடம் நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற இந்த வகை அலைகளை கிரகித்து ஆராய்பவை.
இந்த வகை வான் ஆராய்ச்சிக்கூடத்தில் டெலஸ் கோப்புக்குப் பதில் இந்த வகை அலைகளைத் திரட்டு வதற்கென அகன்ற ஆண்டெனாக்கள் பயன்படுத்தப்படு கின்றன. பொதுவில் பல ஆண்டென்னாக்கள் இருக்கும்.
பல கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஆண் டென்னாவை நிறுவுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆகவே பல ஆண்டெனாக்களை குறிப்பிட்ட தூரத்துக்கு ஒன்றாக  நிறுவினால் இவை அனைத்தும் சேர்ந்து மிகப்பெரிய ஓரு ஆண்டெனாவுக்குச் சமம். சிலி வான் ஆராய்ச்சிக்கூடத்தில் இப்படியாக நிறைய ஆண்டெ னாக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே நட்சத்திரத்தை இவை அனைத்தும் சேர்ந்து ஆராயும் போது மிகத் துல்லியமான படம் கிடைக்கும். அவ்விதமாகத் தான் மேற்படி நட்சத்திரம் படமாக்கப்பட்டுள்ளது.
நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற மில்லி மீட்டர், சப்-மில்லி மீட்டர் அலைகளைக் காற்றில் உள்ள ஈரப்பதம் சிதறடித்து விடும். ஆகவே காற்றில் ஈர்ப்பசை இல்லாத பாலைவனப் பகுதியில் அதுவும் மிக உயரமான இடத்தில் தான் இந்த வகை ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவ முடியும். வான் ஆராய்ச்சிக்கூடத்தின் ஆண்டெனாக்கள்
ஆகவே தான் சிலி நாட்டில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு பாலைவனப் பகுதியில் மேற்படி வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 66 பெரிய ஆண்டென்னாக்கள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும்12 மீட்டர் குறுக்களவு கொண் டவை. இவற்றைத் தவிர, 7 மீட்டர் குறுக்களவு கொண்ட மேலும் 12 ஆண்டெனாக்கள் உள்ளன.
ஒரே ஆண்டெனா போல செயல்படுவதற்காக இவற்றை சில கிலோ மீட்டர் இடைவெளியில் நிறுத்துவார்கள். ஆண்டென்னா ஒவ்வொன்றையும் இவ்விதம் விருப்பப்படி நகர்த்த ஏற்பாடு உள்ளது.
இந்த வான் ஆராய்ச்சிக்கூடம் அமைந்துள்ள இடம் கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே வான் ஆராய்ச்சிக்கூடத்தை இயக்கும் தலைமையிடத்தில் 2900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அமெரிக்கா, கனடா, அய்ரோப்பிய நாடுகள், ஜப்பான், தைவான் முதலான நாடுகள் சேர்ந்து பெரும் செலவில் இந்த வான் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியுள்ளன.
இந்த வான் ஆராய்ச்சிக்கூடம் சுருக்கமாக  ALMA (Atacama Large Millimeter/submillimeter Array) என்று குறிப்பிடப்படுகிறது. அடகாமா என்பது சிலி நாட்டில் உள்ள கடும் குளிர் வீசுகின்ற   பாலைவனத்தின் பெயராகும்.
இந்தியாவிலும் லடாக் பகுதியில்  சிறிய அளவிலான வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.
விடுதலை,வியாழன், 27 நவம்பர் 2014 

உயிர் உருவாவதற்கான அடிப்படை



பிலே விண்கலம் தரையிறங்கிய வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் கரிமச் சோம மூலகங்கள் இருப்பதாக அந்த விண்கலம் கண்டறிந்துள்ளது. கார்பனைக் கொண்டுள்ள இந்த கரிமச் சோமங்கள்தான் பூமியில் உயிர்கள் தோன்றியதற்கான அடிப்படையாகும்.
ஆகவே நமது பூமிக்கு இதுபோன்ற வால் நட்சத்திரங்களில் இருந்து முன்னர் கிடைத்திருக்கக் கூடிய இரசாயன பொருட்கள் பற்றிய விவரங்களையும் இது தரக்கூடும்.
அந்த வால் நட்சத்திரத்தின் மெல்லிய சூழலை உணரக் கூடிய வகையில், ஜெர்மனியால், நிர்மாணிக்கப்பட்டிருந்த ஒர் கருவியால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னுமொரு ஆய்வின்படி வால் நட்சத்திரத்தின் பெரும்பான்மையான மேற்பரப்பு நீரினாலான பனி படலத்தால் மூடப்பட்டுள்ளது என்றும், சிறிய அளவில் மேற்பரப்பில் ஒரு தூசியும் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
''வால் நட்சத்திரம் 67 பி'' என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த பறக்கும் பாறையில், அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யத்தின் விண்கலம் 10 ஆண்டு பயணத்தின் பின்னர் நவம்பர் 12 ஆம் தேதி தரையிறங்கியது.
கரிமச் சோம மூலகங்கள் பற்றிய தகவலைக் கண்டுபிடித்த ''கொசக்'' கருவியை ஆராய்ந்த டாக்டர் ஃபிரட் கோஸ்மான் அவர்கள், பிபிசியிடம் பேசுகையில், தமது முடிவு குறித்து மேலும் விளக்கத்தை கண்டறிய தாம் முயன்று வருவதாகக் கூறியுள்ளார். குறிப்பாக என்ன மூலக்கூறு கண்டுபிடிக்கப் பட்டது என்றோ அல்லது அது எவ்வளவு சிக்கலானது என்றோ அந்தக் கருவி கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால், இந்த முடிவுகளின் மூலம் இப்படியான வால் நட்சத்திரங்களில் இருந்து பூமிக்கு கிடைத்திருக்கக்கூடிய இரசாயன திண்மங்கள் எவ்வாறு புவியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்திருக்கும் என்ற சூட்சுமத்தை கண்டறிய முடியும் என்றும் அவர் நம்புகிறார்.
பிலே தரையிறங்கிய பிறகு வால் நட்சத்திரத்தில் ஒரு சுத்தியலை பிரயோகிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த ''முபுஸ்'' என்னும் கருவியின் ஆரம்ப கட்ட தகவல்களின்படி, அங்கு 10 முதல் 25 செண்டிமீட்டர் அடர்ந்த தூசிப்படலமும் அதற்கு கீழே நீரினால் ஆன பனிக்கட்டியும் இறுக்கமாக படர்ந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தின் வெளிவட்டப் பாதையில் இருக்கக்கூடிய வெப்ப நிலை காரணமாக இந்த பனி நன்றாக இறுகி இருப்பதாகவும், அது மணற்கற்களின் அளவுக்கு திண்மமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆயினும் மேலும் இதுகுறித்த ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விடுதலை,வியாழன், 27 நவம்பர் 2014


திங்கள், 24 நவம்பர், 2014

மொழியறிவால் மூளை கூர்மையாகும்

 

ஒரு மொழியை மட்டுமே பேசுபவர் களைக் காட்டிலும் இரு மொழிகளைப் பேசுபவர்களின் தகவல்பரிமாற்றம் திறனுள்ளதாக இருப்பதாக அண்மையில் வெளியான ஆய்வுத்தகவல் கூறுகிறது.
நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஹோஸ்டன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் ஒரு மொழி பேசுபவர்களைவிட இரண்டு மொழி பேசுபவர்களுக்கு புரிதல் திறன் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஒரு மொழிக்கும் மேலாக பேசுபவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, தேவை யற்ற சொற்களைத் தவிர்த்து பேசுவதையும், அவர்களின் மூளை அதே பணியை முடிக்க  கூடுதலாக பணிசெய்வதாகவும் செயல் பாட்டு காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (functional magnetic resonance imaging -FMRI) முறையில் ஆய்வை மேற் கொண்டு கண்டறிந்துள்ளனர்.
உலகின் மாபெரும் மருத்துவம் மற்றும் அறிவியல் நூல்களுக்கான பதிப்பகமாக உள்ள எல்வெவியர் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரக்கூடிய  மொழிக்கான நரம்பு உயிரியல் இதழான மூளை மற்றும் மொழி இதழ் (The journal Brain and Language) இந்த ஆய்வுத்தகவலை வெளியிட்டுள்ளது.
மூளையின் இருவேறு செயல்களான செயல்படுதலும், செயல்பாட்டைத் தடுத் தலும் ஆகிய இருவகை செயல்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கேட்கும்போதுசரியானதை தேர்வு செய்து கேட்கச் செய்கிறது.
ஆய்வாளர்கள் இரண்டு மொழிகளை (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ்) பேசக் கூடியவர்களான  17பேரையும், ஒரே மொழியை மட்டுமே அறிந்து பேசக்கூடிய 18 பேரையும் தேர்வு செய்து ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வில் இரு மொழியில் ஆற்றல் உள்ளவர்களின் மூளை தேவையற்ற சொற்களை தாமாகவே நீக்கிக்கொள்வதையும் கண்டறிந்தனர்.
உதாரணத்துக்கு கிளவுட் என்கிற சொல்லை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களைக் கேட்கச்செய்தபோது, உடனடியாக திரையில் மூளையின் செயல்களைக் காட்டும் நான்கு படங்கள் தோன்றின. அதேபோன்று அதே ஒலி அமைப்புடன் உள்ள கிளவுன் எனும் சொல்லைக் கேட் கும்படி செய்யப்பட்டது. இதன் நோக்கம் என்னவெனில், சரியான சொல்லுடன் மூளை எவ்வளவு விரைவாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது என்று கண் காணிப்பதே ஆகும். இந்த ஆய்வின்போது, இரு மொழி அறிந்தவர்கள் விரைவாக சரியாக செயல்பட்டார்கள்.
முடிவானது கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதுபோல்  தோன்றுகிறது. இரண்டு மொழியில் திறன் உள்ளவர்கள் இரண்டு மொழிகளிலும் திறனுள்ளவர்களாக இருப்பதால் சரியானவகையில் பணிகளை முடிப்பதில் வல்லவர்களாக அல்லது மற்ற வர்களைவிட அதிக புரிதல் அறிவுடன் பல மொழிகளைக் கற்றவர்களாக  இருப்பதால் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருக் கிறார்களா? என்றால், இரண்டும் சேர்ந்த கலவையாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆய்வாளர்கள் ஆய்விலிருந்து கண்ட றிந்துள்ளது என்னவெனில், மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்க வேண்டும் எனும்போது, சுடோகு போன்ற குழப்பத்தி லிருந்து  (Puzzle)
விடுவிப்பதற்குப் பதிலாக, புதிதாக ஒரு மொழியை ஏன் அளிக்கக் கூடாது? மூளைக்கு சவாலாக அதைத் தவிர வேறு உண்டா? என்று ஆய்வாளர்கள் கேட்கிறார்கள்.
விடுதலை,சனி, 22 நவம்பர் 2014


வியாழன், 13 நவம்பர், 2014

அணுசக்தி - புள்ளி விவரங்கள்

அணுசக்தி இன்று வரை - புள்ளி விவரங்கள்

லகின் அசுரத்தனமான மின்சாரப்பசிக்கு அணுசக்தியே மிகச் சிறந்த மாற்றாக இருக்கும் என்பது அறிவியல் உலகின் நம்பிக்கை. ஆனால் அணு உலை ஆபத்து என்கிற முழக்க மும் எழத் தவறவில்லை. அணுசக்தி அன்று முதல் சமீபம் வரை எப்படி இருக்கிறது என்பதை சொல்லும் புள்ளி விவரங்கள் உங்களுக்காக...
* ஆட்டம் எனும் ஆங்கிலச் சொல் கிரேக்கச் சொல்லான அட்டோமாஸ் என்பதிலிருந்து வந்தது. இதற்கு 'பிளக்க முடியாது' எனப் பொருளாகும்.
* எல்லாப் பொருளுக்கும் ஆதாரமாயிருப்பது கண்ணுக்கு புலப்படாத அணுக்களே என்று முதலில் விவரித்தவர் கிரேக்க தத்துவஞானி டெமாகிரிட்டஸ் (கி.மு.460-கி.மு.370) ஆவார்.
* ஒவ்வொரு தனிமமும் மேற்கொண்டு உடைக்க முடியாத மிகச் சிறிய துகள்களால் ஆனது என்றும் அவற்றை அணுக்கள் என்றும் வரையறுத்தவர் பிரிட்டிஷ் வேதியியலாளர் ஜான் டால்டன் (1766-1844) ஆவார்.
* சர் ஜான் ஜோசப் தாம்சன் (1856-1940) என்ற ஆங்கிலேய இயற்பியல் அறிஞர் எதிர்மின் கதிர்கள் மிக விரைவாகச் செல்லும் துகள்கள் என்பதைக் கண்டறிந்தார். இக்கதிர் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலக்க மடைவதையும் இந்தத் துகள் அணுத்துகளை விட 2000 மடங்கு குறைந்த நிறை உடையது என்பதையும் கண்ட றிந்தார். இந்தத் துகளே பின்னர் மின்னணு எனப்பட்டது. இவர் ஒளியின் தொடர்ச்சியின்மைக் கொள்கையை வெளியிட்டார். அணுவைப் பற்றிய இவரது இந்த கண்டு பிடிப்பு அணுசக்தி வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
* அய்ன்ஸ்டீன் வகுத்த நிறை மற்றும் ஆற்றல் தொடர்பான சிறப்பு சார்பியல் கொள்கை (1905), பொதுச் சார்பியல் கொள்கை (1915) ஆகியவை அணுசக்திக்கு அடிப்படையாக அமைந்தன.
* அணுவிலுள்ள அணுக் கருவை ஆல்ஃபா கதிர்களைக் கொண்டு பிளவுபடுத்த முடியும் என்று 1919இல் எர்னஸ்ட் ரூதர் ஃபோர்ட் என்ற இங்கிலாந்து இயற்பியலாளர் கண்டுபிடித்தார்.
* சாதாரண ஹைட்ரஜன் தவிர மற்ற ஒவ்வொரு அணுக் கருவிலும் காணப்படும் ஒரு முக்கியத் துகள் 'நியூட்ரான்' ஆகும். இதை 1932இல் ஜேம்ஸ் சாட்விக் (1891-1974) கண்டுபிடித்தார். இது அணுசக்தி மற்றும் அணுகுண்டு வளர்ச்சிக்கு வழி வகுத்தது.
* 1930களின் ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் அணு எலக்ட்ரான்களோடு புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான் துகள்களைக் கொண்டது என்பதைக் கண்டு பிடித்தார்கள்.
* 1942இல் என்ரிக்கோ ஃபெர்மி என்ற அமெரிக்க இயற்பியலாளர் நியூட்ரான்களால் தூண்டப்பட்ட கதிரியக் கத்தைக் கண்டுபிடித்தார்.
* யுரேனியத்தில் உள்ள கதிரியக்கத்தை ஏ.ஹெச். பெக்கரல் என்பவர் கண்டுபிடித்தார். அணுசக்தி உற்பத்திக்கு யுரேனியம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 50,000 டன் யுரேனியம் மூலம் 25 டன் அணு உலை எரிபொருள் கிடைக்கும். இது 1000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அணுமின் நிலையத்தின் ஓராண்டு தேவையாகும்.
* விரல் நுனியளவுள்ள யுரேனியம் 481.38 கனமீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு சக்தியையும் 807.4 கிலோ நிலக்கரி அல்லது 564 லிட்டர் எண்ணெயின் சக்தியையும் கொண்டது.
* 1789இல் ஒரு தனிமமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட யுரேனியத்திற்கு அப்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட (1781) யுரேனஸ் என்ற கோளின் ஒபயர் சூட்டப்பட்டது.
* அணுக்கருப் பிளவு முறையை ராணுவம் பயன் படுத்துவது பற்றி ஆராய்ந்த அமெரிக்க அரசின் மன் ஹாட்டன் திட்டத்தின்படி முதல் அணுகுண்டு தெற்கு மெக்ஸிகோவின் ராணுவ விமான தளத்தில் 1945 ஜூலை 16இல் சோதனை செய்து வெடிக்கப்பட்டது.
* இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்களில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஜப்பானில் உள்ள ஹிரோ ஷிமா நகரின் மீது 'லிட்டில் பாய்' என்று பெயரிடப்பட்ட அணு குண்டு அமெரிக்காவால் போடப்பட்டது. இதுவே உலகில் அணுகுண்டு தாக்குதலுக்கு உள்ளான முதல் நகரம்.
* 1945 ஆகஸ்ட் 9இல் 'ஃபேட் மேன்' என்று பெயரிடப்பட்ட மற்றொரு அணுகுண்டு ஜப்பானின் நாகசாகி நகரின் மீது போடப்பட்டது.
* இன்று உலகில் இரண்டு டஜன் நாடுகள் அணுசக்தியை உபயோகிக்கின்றன. இதில் ஒன்பது நாடுகளில் மட்டும் அணு ஆயுதங்கள் உள்ளன. இவை அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் மட்டுமே 95 சதவீத அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுதங் களை உற்பத்தி செய்த முதல் நாடு அமெரிக்காவாகும். அணு ஆயுதத்தை போரில் பயன்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா.
* 2013 நிலவரப்படி 17,300 அணு ஆயுதங்கள் உலகத்தில் உள்ளன. ரஷ்யா 8500, அமெரிக்கா 7700, பிரான்ஸ் 300, சீனா 250, பிரிட்டன் 225, இந்தியா 100, பாகிஸ்தான் 100, இஸ்ரேல் 80, வடகொரியா சுமார் 10 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன.
* பிரிட்டனில்   அணு மின் நிலையம் எலிசபெத் ராணியால் 1956 அக்டோபர் 17 ல் துவக்கி வைக்கப்பட்டு 24 கி.மீ தொலைவில் உள்ள வெகிங்டன் என்ற நகருக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதுவே உலகில் அணுசக்தி மின்சாரம் பெற்ற முதல் நகராகும்.
* 1996லிருந்து 2009 வரை உலகில் 49 புதிய அணு உலைகள் துவக்கப்பட்டன. 43 பழைய உலைகள் மூடப்பட்டன.

அதிவேக கார்


உலகின் முதலாவது அதிவேக கார், 500mph (804km/h)-50 சதவீதம் வேகம் கொண்ட ப்ளூட்ஹண்ட் அதிவேக காராக தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. ப்ளூட்ஹண்ட் காரின் திட்டம் கடந்த வாரத்தில் இருந்து 12 மாதத்திற்கான கவுண்டவுன் தொடங்கியது மற்றும் தென் ஆப்ரிக்காவில் உள்ள Hakskeen பானில் அதிவேக தகவல்தொடர்பு சோதனையின் போது, ஜாகுவார் புதிய கண்டுபிடிப்பு பங்காளியாக இந்த திட்டத்தில் சேர்ந்தனர்.
39 ஜெட் விமானம், பல நிலைகளில் தரைஇறங்கி பறந்து செல்வதுபோல, ப்ளூட்ஹண்ட் கார் பாலைவன பாதையிலும் செல்வதற்காக சிறப்பாக தயாரிக்கப்படுகிறது. திட்ட இயக்குநர் ரிச்சர்ட் நோபல் மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் சலூன் இணைந்து, புதிய ஆல் வீல் டிரைவ் (AWD) ஜாகுவார் எஃப் டைப் ஆர் கூபே கொண்டு ஒருங்கிணைத்து காரின் வேகத்தை 500mph இயக்க திட்டமிட்டுள்ளனர்.
ப்ளூட்ஹண்ட் அதிவேக காரில் இருந்து ஸ்ட்ரீம் டேடா, குரல் மற்றும் நேரடி படங்கள் போன்ற உபகரணங்களை கொண்டு 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டில் சோதனை ஓட்டங்களும் மற்றும் ரெகார்டு முயற்சிகளும் மேற் கொள்ளப்படும்.
ப்ளூட்ஹண்ட் எஸ்எஸ்சி என்ற காக்பிட் - விண்வெளி, ஏரோநாட்டிகள் மற்றும் ஃபார்முலா 1 போன்ற மிகவும் முன்னேறிய அணு இணைப்பு கொண்டு பொறியியலில் முன்னெப்போதும் முயல முயற்சி என்று பிரிஸ்டலில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது ஒரு மணி நேரத்திற்கு 1000 மைல்கள் (1,609/) வரை இயங்க வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளனர்.

விடுதலை,13.11.14

ஞாயிறு, 9 நவம்பர், 2014

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) உண்டாக்கினர்



உயிர்களைப் படைத்தவன்




 

பிர்மாவா?

உயிர்த் துளியை (க்ரோமோசோம்) உண்டாக்கி கடவுள் நம்பிக்கையை நொறுக்கினர் விஞ்ஞானிகள்.
கலிபோர்னியா மாகாணம் சாண்டி யாகோவில் இருக்கும் ஜேகிரேய்க் வெண்டர் இன்ஸ்டிட்டிட்டில் மைக்ரோ பிளாஸ்மா லேபரேட்டோரியம் எனும் உலகின் மனிதன் படைத்த முதல் செயற்கை உயிர் என்று கருதப்படும் க்ரோமோசோமை கிரேய்க்வென் டரும் அவரது குழுவினரும் உருவாக்கி உள்ளனர். ஆராய்ச்சியின் அதிகார பூர்வ முடிவை இன்னும் சில நாட்களில் அறிவிக்க உள்ளார் கிரேய்க்.
அவரது கண்டுபிடிப்பினைப்பற்றி கிரேய்க் வென்டர் கூறியது:
ஓர் உயிரை அப்படியே அச்சு அசலாகப் பிரதி எடுக்கும் க்ளோனிங் தொழில் நுட்பத்தைவிட உன்னத மானது இது! எந்த இயற்கையான பொருளின் உதவியும் இல்லாமல், பரிசோதனைக்கூட அமிலங்களின் துணை கொண்டே, க்ரோமோசோம் ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இந்த உயிர்த் துளியை அடிப்படையாக வைத்து, நாம் விரும்பும் எந்தவிதமான உயிர் வடிவத்தையும் படைத்துக் கொள்ளலாம். இனி உயிர்களைப் படைப்பது கடவுளிடம் மட்டுமே உள்ள உரிமை அல்ல.
நாங்கள் கண்டுபிடித்த இந்தச் செயற்கை க்ரோமோசோம் ஓர் அஸ்திவாரம் போன்றது. இந்த அஸ்தி வாரத்தின் மேல் நாம் எந்தவிதமான உயிர் அமைப்பையும் உருவாக்கலாம். இந்தச் செயற்கை க்ரோமோசோமை ஒரு செல்லில் புகுத்தினால், அதன் செயல்பாடுகளை கண்ட்ரோல் செய்து, உயிர் கொடுக்க நடவடிக்கைகளைத் தூண்டிவிட்டு, அந்த செல்லின் இயல்பான வளர்ச்சியை வேகப்படுத்தி, முழு உயிரினமான மாற்றி விடும். இதில் இன்னும் அதிநவீனத் தொழில் நுட்ப எல்லைகளைத் தொடும்போது தக்காளி முதல் டைனோசர் வரை நம்மால் படைக்க முடியும்!
கார்பன்டை ஆக்சைடை உட் கொண்டு அழிக்கும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், குளோபல் வார்மிங், ஒரு கட்டுப்பாட்டுக்கு வரும். கரும்புச் சக்கைகளை நொதிக்கச் செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்கினால், பியூட்டேன் அல்லது ப்ரோபேன் எரிவாயுக்களை உருவாக்கலாம். இப்படி எங்களது இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்துக்கு ஆக்கபூர்வமான விஷயங்களுக்குப் பயன்படும் என்று பெருமையாகக் கூறுகிறார் கிரேய்க் வென்டர்.
(ஆனந்தவிகடன் 17.10.2007 இதழில் வந்த 


கட்டுரையை ஆதாரமாகக் கொண்டது).
விடுதலை,25.10.14

வெள்ளி, 7 நவம்பர், 2014

மாற்று கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்


மாற்று கர்ப்பப்பை மூலம் குழந்தை பெற்ற பெண்
மாற்றுகர்ப்பப்பை பொருத்திய சுவீடனைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இச்சிகிச்சை வழியாகப் பிறந்துள்ள உலகின் முதல் குழந்தை இதுதான்.
பரிசோதனை முயற்சியாக இப்பெண் ணுக்கு கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. கடந்த மாதம் அந்த ஆண் குழந்தை சற்றுக் குறை மாதத்தில் பிறந்திருந்தாலும் தாயும் சேயும் நலமாக இருக்கின்றனர். ஆய்வுப் பரிசோ தனையாக கர்ப்பப்பை மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட 9 பெண்களில் இந்தப் பெண்ணும் ஒருவர். சிகிச்சைக்குப் பின் இவரைத் தவிர வேறு இரண்டு பெண் களும் கருத்தரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய நுண்ணோக்கி





இந்த ஆண்டு இரசாயனவியலுக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்ட விஞ்ஞானிகளில் 
ஒருவரான டாக்டர் எரிக் பெட்ஸிக் தலைமையிலான குழு ஒன்று அதிநவீன நுண்ணோக்கி 
ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நுண்ணோக்கியைப் பயன்படுத்தி 
உயிரணுக்களின் செயற்பாடுகளை வீடியோ போல படமெடுக்க முடியுமாம்.
வழமையான நுண்ணோக்கிகளைப் போல வெளிச்சத்தை மேலிருந்து பாய்ச்சாமல், 
பக்கவாட்டிலிருந்து மிக நுண்ணிய தட்டையாக பாய்ச்சி நுண்ணோக்கியால் பார்க்கும் 
தொழில்நுட்பமான சூப்பர் ரிசால்வ்ட் ஃப்ளூரசென்ஸ் மைக்ரோஸ்கோப்பி 
என்ற கண்டுபிடிப்புக்காக டாக்டர் எரிக்குக்கு நோபல் பரிசு கிடைத்தது.

இந்த வகையில் நுண்ணோக்கியால் பார்க்கும்போது இதுவரை தெரியாமல் இருந்த மிக 
நுண்ணிய பொருட்களும் மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தன. ஆனால், அந்தக் கண்டுபிடிப்பால் 
மட்டும் திருப்தி அடைந்துவிடாமல் தான், ஏற்கெனவே உருவாக்கி யிருந்த பக்கவாட்டில் ஒளி 
பாய்ச்சுகின்ற தொழில்நுட்பத்திற்கு டாக்டர் எரிக் மேலும் மெருகூட்டினார் .  
உயிரணுவின் குறிப்பிட்ட ஒரு பாகத்தில் பக்கவாட்டிலிருந்து தட்டையாக பாய்ச்சப்படுகின்ற 
ஒளியை மேலும் கீழும் வேகமாக நகர்த்துவதற்கான கருவி ஒன்றை அவரும் அவருடைய 
நண்பர்களும் உருவாக்கினர்.

"அவ்வாறாக ஒளித் தட்டையை நகர்த்தி நுண்ணோக்கி வழியாக உயிரணுவைப் 
பார்க்கும்போது, அந்த கருவியின் வேகம், நுண்ணோக்கியின் வேகம் எல்லாம் அதிகமாக 
இருக்கும் என்றால், அந்த உயிரணுவின் செயற்பாடுகள் எல்லாம் ஒரு 
வீடியோ படம் போல தெளிவாகத் தெரி கின்றன என அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள 
ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ கழகத்தின் ஜெனீலியா ஆராய்ச்சிக் மய்யத்தைச் சேர்ந்த 
டாக்டர் எரிக் பிபிசியிடம் கூறியிருந்தார். உயிரோடுள்ள செல்களை எவ்வகையிலும் 
சேதப்படுத்தாமல் அதன் இயக்கத்தை துல்லியமாக படம்பிடிக்க இந்த தொழில்நுட்பம் 
உதவுகிறது.

கருமுட்டை ஒன்று எப்படி வளர்கிறது, நரம்புகளுக்கும் மூளைகளுக்கும் இடையில் தகவல் 
எப்படிப் பரிமாறப்படுகிறது என்பது போன்ற உயிரணு செயற்பாடுகளை நாம் கண்கூடாகப் 
பார்க்க இந்தக் கண்டுபிடிப்பு வகைசெய்துள்ளது.

ஒரு உயிரணுவின் செயல்பாட்டை இப்படி நுணுக்கமாகப் பார்க்கும்போது, நம் கண்ணில் 
விரியும் காட்சிகள் பற்றி விளக்குகையில், ஒரு சின்ன உயிரணுவுக்குள் பைத்தியம் பிடிக்கிற 
அளவுக்கு பரபரப்பான இயக்கம் இருப்பதை உங்களால் பார்க்க முடியும் என ஜெனீலியா 
ஆராய்ச்சி மய்யத்தின் டாக்டர் எரிக் பெட்ஸிக் தெரிவித்தார்.



Read more: http://www.viduthalai.in/home/viduthalai/science/90662-the-new-microscope-will-capture-the-movement-of-cells.html#ixzz3IS4mgliZ