திங்கள், 30 மே, 2016

பனி வீடுகள் கரையாமல் எப்படி அப்படியே நீடிக்கின்றன?



சூரியனின் கதிர்கள் பூமியின் மத்திய பகுதியை எட்டும்போது வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், சூரியக் கதிர்கள் சாய்வான கோணத்தில் துருவப் பகுதிகளை எட்டும்போது வெப்பம் இருப்பதில்லை.
இதனால் தான் இரு துருவங்களும் உறை பனிப் பிரதேசங்களாகவே இருக்கின்றன. ஆனால், துருவத்தை எட்டும் சூரியக் கதிர்களின் பிரகாசத்திற்கு குறைச்சல் இல்லை.
எங்கும் வெண் பனியாக இருக்கும் போது, அங்கு படும் சூரிய ஒளியின், ‘பளீர்’ பிரதிபலிப்பு கண்களை கூச வைக்கும். கறுப்புக் கண்ணாடி அணியாமல் எதையும் பார்க்க முடியாத நிலைகூட வருவதுண்டு.
பனி வீடுகளை, ‘இக்ளூ’ என்று எஸ்கிமோக்கள் அழைக்கின்றனர். பனியை செங்கல் போல இறுக்கமாக வார்த்து எடுத்து, அடுக்கி, இக்ளூவை உருவாக்குகின்றனர். அரைக் கோளம் போல இருக்கும் இக்ளூவின் கூரை, கடும் பனிப் புயலையும் தாங்கும் தன்மை கொண்டது. அந்த வடிவத்திற்கு அத்தனை சக்தி உண்டு.
இக்ளூவின் சுவர்கள் பனிக்கட்டியால் ஆனது என்றாலும், அது திடமாக இருப்பதால் வெளியே உள்ள குளிர், உள்ளே வராமல் தடுத்துவிடும். உள்ளே மனிதர்கள் இருக்கும்போது அவர்களது உடலின் உஷ்ணமும் வெளியே போகாது. இதனால், எப்போதும் இக்ளூவுக்குள், 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தக்கவைக்க முடியும்.
தொடர்ந்து பல நாட்கள் பனிப்புயல் வீசும்போது, இக்ளூவுக்குள் போதிய உணவு இருந்தால், எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பிக்கலாம்.
புயல் நின்றதும் வெளியே வந்து, சூரியனுக்கு, ‘ஹாய்’ சொல்ல எஸ்கிமோக்களால் முடியும். இக்ளூக்களுக்கு யாரும் பட்டா கேட்பதில்லை; ஏனெனில் அவை தற்காலிக வசிப் பிடங்களே. தவிர, வேட்டைத் தொழில் புரியும் எஸ்கிமோக்களில் பெரும்பாலானோர் நாடோடிகளே.
-விடுதலை,11.2.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக