செவ்வாய், 5 மார்ச், 2019

பூமிக்கு அடியிலும் மலைத் தொடர்கள் உண்டு!



கடலுக்குள் பெரிய மலைத் தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான். ஆனால், பூமியின் மேற்பரப்பிலிருந்து பல நுறு கிலோமீட்டர் கீழேயும் பெரிய மலைத்தொடர்கள் இருப்பது, அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

சீனாவிலுள்ள புவி அமைப்பு மற்றும் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் மற்றும் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இதுவரை பூமியின் ஆழப் பகுதியில் நிகழ்ந்த பெரும் நில அதிர்வுகளின் பதிவுகளை வைத்து, பல மலைத்தொடர்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

பூமியின் கடினமான மேல் ஓட்டுப் பகுதியிலிருந்து ஆழத்திற்குப் போகப் போக, கடினம் குறைந்து, பூமியின் உள் மய்யப் பகுதி, இன்னும் தீக்குழம்பாகவே இருக்கிறது. எனவே, பூமியின் ஆழப் பகுதியில் பூகம்பம் ஏற்படும்போது, அதன் அதிர்வலைகள், பூமியின் மய்யம் வரை பயணித்து, மறுபக்கம் வரை சென்று, மீண்டும் திரும்பும்.

ஆனால், சில பகுதிகளில் அதிர்வலைகள் பட்டுத் திரும்பாமல் இருப்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

உதாரணமாக, 1994இல் பொலிவியாவில் ரிக்டர் அளவுகோலில், 8.2 அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. அப்போது செய்த பதிவுகளின்படி பூமியின் மேல் பகுதிக்கும், மய்யப் பகுதிக்கும் இடையே சில பகுதிகளில் அதிர்வலைகளின் பதிவு வேறுபட்டு இருந்தது.

இதை வைத்து, பூமிக்கடியிலும் கடினமான மலைப் பகுதிகள் இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 28.2.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக