ஞாயிறு, 11 ஜனவரி, 2015

மோதலில் தோன்றிய நிலா


பூமி உருவான சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் முன்பு நிலவுக்குச் சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் ரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மனி விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.
450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கிரகம் வந்து பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள்தான் பூமியைச் சுற்றி ஒன்று திரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்து வருகிறது. அப்படி மோதியதாகக் கருதப்படும் கிரகத்துக்கு கிரேக்க புராணத்திலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்தி ருந்தார்கள். ஆனால் இந்தக் கோட்பாட்டுக்கு தடயபூர்வ ஆதாரம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது.
தற்போது நிலவுப் பாறைகளில் நவீன ஆய்வுகளை மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் ரசாயனக் கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக்கிரகத் தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமிப் பாறைகளுக்கும் நிலவுப் பாறைகளுக்கும் இடையில் சிறு வித்தியாசம் இருப்பதை தாங்கள் கண்டு பிடித்திருப் பதாகவும், இரண்டு கிரகங்கள் மோதிக்கொண்ட கோட் பாட்டை ஆதரிப்பதாக இந்த கண்டுபிடிப்பு அமைந்துள்ள தென்றும் ஆய்வை வழி நடத்திய டாக்டர் டேனியல் ஹெர்வார்ட்ஸ் கூறினார். பூமிப் பாறைகளில் ஆக்ஸிஜன் அய்சோடோப்களின் கலவை ஒருவிதமாக இருப்பதாகவும், நிலவுப் பாறைகளில் அது வேறுவிதமாக இருப்பதாகவும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது


விடுதலை,25.12.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக