வியாழன், 22 பிப்ரவரி, 2024

திராவிட வீராங்கனை பெரியார் பெருந்தொண்டர் தி.ஜெயலெட்சுமி அவர்களுடன் ஒரு நேர்காணல்

 



வி.சி.வில்வம்

பெயரை எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டபோது, சமஸ்கிருத ‘ஜெ’ பயன்படுத்தக் கூடாது என்றும், தமிழில் தான் கையொப்பம் இட வேண்டும் என்றும் பெரியார் சாக்ரடீசு சொல்லியுள்ளார் எனத் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் காரைக்குடி
தி.ஜெயலெட்சுமி அவர்கள்! நான்கு தலைமுறையாக ஒரே இயக்கம், ஒரே கொள்கை என்பது பெரும் சாதனை தான்!
“எந்த ஒரு செயலுக்கும் தொடக்கம் முக்கியமல்ல; தொடர்ச்சி தான் முக்கியம்” என்பார்கள். அந்த வகையில் காரைக்குடி என்.ஆர்.சாமி குடும்பத்தின் மருமகளாக 55 ஆண்டுகள் இருந்து வரும் நிலையில், குடும்பம் வேறு; இயக்கம் வேறு என்றில்லாமல், மிகச் சிறந்த பெரியார் தொண்டராக இயங்கி வருபவர் தி.ஜெயலெட்சுமி அவர்கள்! இவர் காரைக்குடி சாமி.திராவிடமணி அவர்களின் வாழ்விணையர் ஆவார்!
விடுதலை ஞாயிறு மலருக்காக அவரைச் சந்தித்தோம்.

வணக்கம்! தங்களைக் குறித்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
நான் பிறந்தது காரைக்குடி தான். எனது பெற்றோர் கும.ராம.நா.இராமநாதன் – லெட்சுமி அம்மாள். நகரத்தார் குடும்பம் என்று அழைப்பார்கள். எனது தந்தையார் சிவபக்தர். கட்டுப்பாடான குடும்பம். நான் காரைக்குடி எஸ்.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, அதே பள்ளியில் படித்த சாமி.திராவிடமணி அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. பிறகு 1968 ஆம் ஆண்டு பெரியார் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

நீங்கள் நகரத்தார் குடும்பம் என்கிறீர்கள், அவர்கள் கடுமையான பெரியாரியல் குடும்பம். திருமணத்திற்கு எதிர்ப்பு அதிகம் இருந்திருக்குமே?
ஆமாம்! எங்கள் வீட்டில் கடும் எதிர்ப்பு. சமாளிக்க முடியாது என்கிற சூழலில், சிவகங்கையில் சாமி.திராவிடமணி அவர்களின் சகோதரி தமிழரசி – ஜெயராமன் இல்லத்திற்குச் சென்று விட்டோம். அங்கு 15 நாட்கள் இருந்தோம். அப்போது பொட்டு வைக்க வேண்டும் என நான் சொன்ன போது, நாங்கள் பொட்டு வைப்பதில்லை எனத் தமிழரசி கூறினார்கள். அப்போது தான் இவர்கள் அனைவரும் பெரியார் கொள்கையில் இருப்பதையே அறிந்தேன்.
பிறகு திருச்சி சென்று பெரியாரை சந்திக்கலாம் என, சிவகங்கையில் இருந்து தொடர்வண்டியில் பயணம் செய்தோம். காரைக்குடி இரயில் நிலையத்தில் இவர்களின் அண்ணன் சாமி.சமதர்மம் அவர்கள் எங்களைச் சந்தித்தார்கள். பெரியாருக்குச் சிபாரிசு கடிதமும், கொஞ்சம் பணமும் கொடுத்தார்கள்.
முதன் முதலாக நான் திருச்சி பெரியார் மாளிகைக்குச் செல்கிறேன். அப்போது என் வயது 18, திராவிடமணி அய்யாவுக்கு 20. கருப்புச் சட்டை அணிந்த தோழர்கள் ஏராளம் நின்றனர். இரண்டு கருப்பு நாய்களும் அங்கே இருந்தன. எனக்குப் புது அனுபவம். எனது உணர்வுகளைப் புரிந்து கொண்ட பெரியார், அருகில் வர சொல்லி அமர வைத்தார்.
“இந்தத் திருமணத்தில் உங்களுக்கு சம்மதமா? நகரத்தாரிடம் கடுமையான எதிர்ப்பு இருக்கும். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?”, என்று பலமுறை கேட்டுக் கொண்டார். அன்றைய தினம் திருச்சி டவுன் ஹாலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெரியார், மணியம்மையார், புலவர் இமயவரம்பன், மகாலிங்கம் ஆகியோருடன் எங்களையும் வேனில் ஏற்றிக் கொண்டனர். மேடையில் தனக்குப் பக்கத்தில் எங்கள் இருவரையும் அமர வைத்து, “இந்தப் பெண் நகரத்தார் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார். குறைந்தது ரூ.5 இலட்சம் இல்லாமல் திருமணம் செய்ய மாட்டார்கள். பையன் வணிகம் செய்பவர். இருவரும் இரண்டு மாலைகளுடன் வந்துள்ளார்கள். மிக எளிமையான திருமணம்”, எனக் கூறி ஒப்பந்த உறுதிமொழியைக் கூறினார் பெரியார்! கூட்டம் முடியும் வரை அங்கேயே இருந்தோம்.

திருமணத்திற்குப் பிறகு உங்கள் பெற்றோரை சந்தித்தீர்களா?
திருமணத்திற்குப் பிறகு நாங்கள் காரைக்குடிக்கே வரவில்லை. சிவகங்கையில் 6 மாதமும், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 4 மாதமும் இருந்தோம். அதன் பிறகே காரைக்குடி வந்தோம். சுமார் 25 ஆண்டுகள் கழித்தே பெற்றோரைச் சந்தித்தேன்.

திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை எப்படி போனது?
குடும்பம் புதிது; கொள்கையும் புதிது! இந்நிலையில், “உங்கள் வீட்டில் எப்படி இருப்பீர்களோ, அப்படியே இங்கும் இருக்கலாம்”, என மாமா என்.ஆர்.சாமி அவர்கள் கூறினார்கள். என்னை அவர்கள் பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. “சாக்ரடீஸ் அம்மா” என்று தான் அழைப்பார்கள். பின்னாளில் நானும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் போகத் தொடங்கினேன்.
குடும்பமே இயக்கம் என்கிற அளவில்தான் இருந்தது. என்.ஆர்.சாமி அவர்களின் குடும்பத்தில் மட்டும் இதுவரை 19 சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 3 திருமணங்களைப் பெரியார் நடத்தி வைத்துள்ளார். 16 திருமணங்களைத் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்கள் தான் நடத்தி வைத்தார். இதில் தன் விருப்பத் திருமணம் (காதல்) மட்டும் 13.

பெரியாரைப் பிறகு எப்போது சந்தித்தீர்கள்?
1968ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாளன்று, திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள மனமகிழ் மன்றத்தில், “பெரியார் சுயமரியாதைக் குடும்பங்கள் விருந்து” என்கிற சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் நாங்களும் கலந்து கொண்டோம். தந்தை பெரியார், ஆசிரியர் போன்றோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர்.
1968இல் திருமண வாழ்க்கைத் தொடங்கியதில் இருந்து, இன்று வரை அனைத்து நிகழ்ச்சிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள் எல்லாவற்றிலும் பங்கேற்று வருகிறேன். சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்தி மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு நான் தான் தலைமை வகித்தேன். முதல் நாள் முழுக்க உடல்நிலைச் சரியில்லாத சூழலிலும் ஊர்வலத்தில் கலந்து கொண்டேன். திடீரென மயக்கம் ஏற்பட்டு சாலையிலே விழுந்து விட்டேன். உடனே மதுரை அன்னத்தாயம்மாள் உள்ளிட்ட தோழர்கள் தூக்கிச் சென்றனர்.

இயக்க நிகழ்வுகளில் பங்கேற்ற மறக்க முடியாத அனுபவங்கள் என்ன?
நிறைய இருக்கிறது! தஞ்சை மாவட்டம் குடவாசலில் நடைபெற்ற மாவட்ட மகளிரணி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஏராளமான மாநாடுகளில் தீர்மானங்கள் வாசித்திருக்கிறேன். தஞ்சை திலகர் திடலில் சுயமரியாதை இயக்கப் பொன்விழா மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது.
சேலம் அண்ணாமலை, இறையன், திருவாரூர் சுப்புலெட்சுமிபதி, ஆம்பூர் மீரா ஜெகதீசன், குயில்தாசன், சென்னை ஹேமலதா தேவி, தங்கமணி, குணசேகரன் போன்றோர் குடும்பமாகப் பங்கேற்று அங்கேயே தங்கிக் கொள்வோம். தனியாக வந்தவர்கள் வீட்டிற்குச் சென்று வருவார்கள்.
ஒருமுறை காரைக்குடி கூட்டத்திற்குப் பெரியார் வந்திருந்தார். அப்போது நான் செல்லவில்லை. ஜெயலட்சுமி எங்கே எனப் பெரியார் கேட்டதும், உடனே காரை எடுத்துக் கொண்டு திராவிடமணி அய்யா வீட்டிற்கு வந்துவிட்டார்கள். நான் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கிறேன்.
பெரியார் கேட்கிறார், உடனே வா என அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள். கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது, பெரியார் பேசிக் கொண்டிருக்கிறார். நான் மேடை ஏறியதும், என்னைப் பார்த்த பெரியார், “இந்த நோஞ்சானுக்கு ரெண்டாவது டெலிவரியா?” என ஒலிபெருக்கியிலே கேட்க, கூட்டத்தில் அனைவரும் சிரித்துவிட்டனர்.
பொதுவாக என்னைப் பார்த்தால், “எப்படி ஆச்சி இருக்கீங்க?” என்றுதான் பெரியார் கேட்பார். “பெற்றோர் பேச வில்லை என்று வருத்தப்பட வேண்டாம். மணி (திராவிடமணி) நன்றாகப் பார்த்துக் கொள்வார். ஏதாவது குறை என்றால், என்னைத் தந்தையாக நினைத்து என்னிடம் கூறவும்” எனப் பெரியார் கூறுவார்.
மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோயிலில், கருவறை நுழைவுப் போராட்டத்தை 1973 இல் பெரியார் அறிவித்தார். இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கலாம், போராட்டத்தில் பங்கேற்போர் பெயர் கொடுக்கவும் என ‘விடுதலை’யில் அறிவிப்பு வந்தது. “எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பரவாயில்லை” என நாங்களும் பெயர் கொடுத்தோம். அப்படி பெயர் கொடுத்த பட்டியலில் எங்கள் வரிசை எண் 1073, 1074.

மணியம்மையார் அவர்களின் நட்பு குறித்துக் கூறுங்கள்?
கூட்டங்களில் பெரியாருடன் நிறைய முறை பார்த்துள்ளேன். பெரியார் மறைவுக்குப் பிறகு, சரியாக ஒரு மாதம் கழித்து, 24.01.1974 அன்று காரைக்குடி வருகிறார்கள். ஆசிரியரும் வருகை தந்தார்கள். உறுதிமொழி ஏற்பு நாள் பொதுக் கூட்டம் அப்போது நடைபெற்றது. எங்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார்கள். தோழர்கள் அனைவரையும் சந்திக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் பெரியார் வேனில், மணியம்மையாரும், ஆசிரியர் அவர்களும் பயணம் செய்தார்கள். எங்கள் வீட்டில் இருந்த போது, எனது அத்தை பேராண்டாள் அவர்களிடம் அடுப்படிக்குச் சென்று சில சமையல் முறைகளை மணியம்மையார் அவர்கள் கேட்பார்கள். பெரியாருக்கு எலும்புக் குழம்பு (எலும்பு சூப்) மிகவும் பிடிக்கும்.

தேவகோட்டை, காரைக்குடி தோழர்கள் குறித்து சொல்லுங்கள்?
திராவிடர் கழக மாநில மாநாடு, சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு ஆகியவை 1973ஆம் ஆண்டு, ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்தது. இதுதான் பெரியார் நடத்திய கடைசி மாநாடு. அந்த மாநாட்டில் நாங்கள் நாடகம் நடத்தினோம். பார்ப்பன எதிர்ப்பை மய்யமாக வைத்து “தீ பரவட்டும்” எனும் ஒரு நாடகம். இது பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பெ.ஜெகதீசன் எழுதியது. மூடநம்பிக்கையை மய்யமாக வைத்து “சந்தனதேவி” என்றொரு நாடகம். இது காரைக்குடி தங்கராசு எழுதியது.
அந்த மாநாட்டிற்கு காரைக்குடி, தேவகோட்டையில் இருந்து இரண்டு பேருந்துகளில் சென்றோம். இறையன், செம்பியன், இளங்கீரன், டாக்டர் சுப்பிரமணியன். ஆசிரியர் மு.முருகன், பெருவழுதி, கமலம் செல்லத்துரை, தேவ.சீனி.அருணன், பள்ளத்தூர் சிவ.சுப்பிரமணியன் போன்றோர் குடும்பமாகச் சென்றோம்.

கழக மகளிருக்கு அப்போது சீருடை இருந்ததா?
பெண்களுக்குச் சட்டை மட்டும் கருப்பு நிறம் இருந்தது. பிறகு கருப்பு நிற சேலை, சிவப்பு நிற சட்டை என மணியம்மையார் அறிவித்தார்கள். நான்கு நாளில் அது வெள்ளை நிற சட்டை என மாறியது. ஆக கருப்பு சேலை, வெள்ளை சட்டை என்பது இன்று வரை தொடர்கிறது. பெண்களை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வர வேண்டும் என ஆசிரியர் அடிக்கடி வலியுறுத்துவார்கள். தஞ்சாவூரில் நடைபெற்ற மகளிரணி மாநாட்டிற்கு, வீட்டில் பெண்களை அழைத்து வரவில்லை என்றால், 5 ரூபாய் அபராதம் என்று கூட ஆசிரியர் அறிவித்தார்கள்.

நகரத்தார் சமூகத்தில் இருந்து, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, இந்த இயக்கக் குடும்பத்திற்கு வந்த நிலையில், உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன?
குடும்பத்தினருடன் இணைய பல காலங்கள் பிடித்தது. அதுவும் 1968இல் காதல் திருமணம் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சில பொருளாதார சிரமங்கள் இருந்தது. ஆனால் நாளடைவில் அது மாறியது. ஒருவேளை பெற்றோர் விரும்பியவாறு திருமணம் நடந்திருந்தால், சமூக உணர்வுகள் இன்றி, சராசரியாக வாழ்க்கை போயிருக்கும். பெரியார் சந்திப்பு, அதுவும் பொதுக் கூட்டத்தில் திருமணம், இயக்க உறவுகள், குறிப்பாக நமது ஆசிரியரின் பேரன்பு போன்றவை நிகழ்ந்தே இருக்காது. என்னை நேர்காணல் செய்வதற்கும் இந்த வாய்ப்பு அமைந்திருக்காது!
அப்போது மாவட்டப் பொருளாளராக இருந்தவர் மரக்கடை சுப்பிரமணியன் அவர்கள். எல்லா வகையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். பெரியார் சாக்ரடீசை, “வாடா மணி மகனே” (மணி என்பது திராவிடமணி) என்றுதான் அழைப்பார். அந்த நினைவில் தான் உண்மை இதழில் “மணிமகன்” என்கிற புனைப் பெயரில் பெரியார் சாக்ரடீசு எழுதினார்.
ஒருமுறை நான் இறந்துவிட்டதாகக் காரைக்குடியில் சிலர் வதந்தியைப் பரப்பிவிட்டார்கள். உடனே மரக்கடை சுப்பிரமணியம் அவர்கள் காரைக்குடி முழுவதும் என்னை ஊர்வலமாக வர ஏற்பாடு செய்து, அவர்கள் வீட்டில் எங்கள் அனைவருக்கும் விருந்து வைத்தார்கள்.
இயக்க நிகழ்வுகளைப் பேசப் பேச அது மலரும் நினைவுகளாய், வரலாறாய் செல்கிறது” என தி.செயலெட்சுமி கூறினார்!

‘உயிரினங்களின் தோற்றம்’ – வீ.குமரேசன்

 

‘உயிரினங்களின் தோற்றம்’ – வீ.குமரேசன்

விடுதலைநாளேடு

‘உயிரினங்களின் தோற்றம்’
உலகில் நிலவிவந்த தவறான நம்பிக்கையைப் புரட்டிப்
போட்ட உண்மை அறிவியலாளர் – சார்லஸ் டார்வின்
இன்று (12.2.2024) டார்வினின் 224ஆம் ஆண்டு பிறந்த நாள்

திராவிடர் இயக்க வரலாற்றின் குறிப்புகளை மிகுதியாகக் கொண்டது செப்டம்பர் மாதம் எனலாம். பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் அந்த மாதத்தில் தான் நடைபெற்றுள்ளன – தொடங்கியும் உள்ளன. அது போலவே அறிவியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த தமது கண்டுபிடிப்புகளை மானுட பயன் பாட்டிற்கு – மேம்பாட்டிற்கு வழங்கிச் சென்றுள்ள அறிவியலாளர் பலர் – சிந்தனையாளர் சிலரின் பிறந்த நாள் கள் – மறைந்த நாள்கள் – பிப்ரவரி மாதத்தில் உள்ளன.

“எதனையும் சிந்தித்து செயலாற்று; அவர் சொன்னர், இவர் சொன்னார் எனக் கருதி நம்பி முடிவு செய்திடாதே” என்று ஏதென்ஸ் நகர் மக்களிடம் பகுத்தறிவுப் பயன் பாட்டை எடுத்துரைத்த தத்துவ அறிஞர் சாக்ரடீஸ் தண்டனையாக விஷம் குடிக்க வைத்து கொல்லப்பட்ட நாள் ‘பிப்ரவரி 15′ (பொ.ஆ.மு. 533).

‘பூமியைச் சுற்றித்தான் பிற கோள்கள், சூரியன் உள்பட வலம் வருகின்றன’ என்றிருந்த கருத்தினை தலைகீழாக்கி, உண்மையில் ‘சூரியன்தான் மய்யம். பிற கோள்கள்தான் பூமி உள்பட, சூரியனை சுற்றி வரு கின்றன’ எனும் உண்மையினை வெளிப்படுத்தியதற்கு, அரசின் கொடுமைகளுக்கு ஆளாகி ‘கொல்லப்பட்ட’ நிக்கலஸ் கோபர்நிகஸ் பிறந்த நாள் பிப்ரவரி 19 (பொ.ஆ.1473).

‘அண்டம் (universe) எல்லையற்றது; அதற்கு மய்யம் இருக்க முடியாது. சூரியன் ஒரு நட்சத்திரம்’ எனும் அறிவியல் உண்மையைச் சொல்லி மதபோத னைப் புத்தகத்தில் சொல்லப்பட்டவைக்கு எதிராக பேசியதற்காக, தீயிலே போட்டு துன்புறுத்தப்பட்டு ஜியார்டானோ புருனோ கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 17 (பொ.ஆ.1540).

கோபர் நிக்கஸின் கோட்பாடுகள் சரி என வலிந்துரைத்து டெலஸ்கோப் அமைப்பை விரிவாக்கி, வானவியல் உண்மைகள் பலவற்றை வெளிக் கொணர்ந்து, அறிவியல் வழிமுறைகள் பற்றி கூறியதால் சிறைத் தண்டனைகள், கொடுமைகளுக்கு ஆளான கலிலியோ கலீலி பிறந்த நாள் பிப்ரவரி 15 (பொ.ஆ. 1642).

‘உயிரினங்கள் படிப்படியாக நடைபெற்ற மாற்றங் களால் தோன்றியவையே. (இன்றைக்கு இருக்கும் வடிவமைப்பிலேயே திடீரென உருவாகவில்லை). இன்றைக்கு உள்ள உயிரினங்கள் ஆண்டாண்டு கால மாக தங்களை தக்க வைத்துக் கொள்ள போராடிய வைகளின் தொடர்ச்சிதான். இதில் கால வெள்ளத்தில் தங்களுக்கான தெரிவை தேர்ந்தெடுக்காத உயிரினங் கள் பல அழிந்து விட்டன’ என தனது பல்லாண்டு கால ஆராய்ச்சியில் பரிணாமக் கொள்கையை நிறுவிய சார்லஸ் டார்வின் பிறந்தது பிப்ரவரி 12 (பொ.ஆ. 1809).
பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் தற்காலிகமானவைதான். இதில் ஒன்றும் புனிதம் கிடையாது – ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவுபடுத்தி அந்த அறிவியலாளர்கள் உலக மக்களுக்கு வழங்கிய பங்களிப்பிற்கு நன்றி பாராட்டி, பயன்படுத்திட வழி கோலும் ஒரு முறை. அவ்வளவே!

சார்லஸ் டார்வின்

சார்லஸ் டார்வின், இயல்பாகவே புழு, பூச்சி, விலங் குகள், சுற்றுப்புற சூழல் ஆகியவற்றை உன்னிப்பாகக் கவனித்து வளர்ந்தவர். அவரது தந்தையார், தாத்தா ஆகியோர் மருத்துவர்கள் என்ற நிலையில், டார்வினும் மருத்துவராக வரவேண்டும் என குடும்பத்தார் விரும் பினர். அதில் நாட்டம் இல்லாத நிலையில் ‘இறையியல்’ கல்லூரியில் சேர்ந்து படித்திடுவதற்கு பணித்த நிலையில் அப்படியே செய்தார். இறையியல் படிப்பை முடித்ததும் திருச்சபையில் சேர்ந்து ஊழியம் செய்திட டார்வின் விரும்பவில்லை. திருச்சபையின் நம்பிக் கைக்கு மாறாக பின்னாளில் அறிவியல் கோட்பாட்டை நிறுவிட இருந்த டார்வினுக்கு, திருச்சபையில் சேர்ந்து பணியாற்றிட, எப்படி விருப்பம் இருந்திருக்க முடியும்?
தான் கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் பழக்கத்தில் இருந்த தாவரவியல் ஆசிரியர் கென்ஸ்லோ (Henslow) வுடான தொடர்பைத் தவிர. உயிரியல் குறித்து முறையாக படிப்பு படிக்காத ஒரு இயற்கை அறிவியலாளர் – டார்வின். 22 வயதில் உலகைச் சுற்றிப் பார்த்து உயிரினங்கள் பற்றித் தெரிந்து கொள்ள கடல் பயணம் மேற்கொள்கிறார். அய்ந்து ஆண்டுகள் பயணம் செய்கிறார்.

பல நாடுகளில் வாழும் விலங்கினங்களின் – பறவையினங்களின் உடலமைப்பு, நடவடிக்கைகள் குறித்து நேரடியாக பார்த்தும், இறந்த பிறகு உடல் எச்சங் களில் மிச்சம் இருக்கும் உறுப்புகளைச் சேகரித்தும் திரும்புகிறார். ‘ஒரே விதமான பறவை பல நாடுகளில் தோற்றங்களில் ஏன் மாறுபடுகின்றது?’ என பல கேள்விகளை தன்னுள் டார்வின் கேட்டுக் கொள்கிறார். பயணம் முடிந்து நாடு திரும்பியதும், உடன் பழகிய அறிவியலாளர்களின் வற்புறுத்தலில்தான் ‘உயிரினங் களின் தோற்றம்’ (Henslow) எனும் நூலினை தனது 40ஆம் வயதில் (1859) வெளியிடுகிறார். இதில் மனித இனம் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. பின்னா ளில் தான் நிறுவிய ‘பரிணாமக் கொள்கை’க்கான சுருக் கம்தான் ‘உயிரினங்களின் தோற்றம்’ என்பதை டார்வின் கூறுகிறார். தான் ஆய்வு செய்து நிறுவிய பரிணாமக் கொள்கை குறித்து அறிவியல் உலகம் பரவலாக அறிந்து வந்த நிலையில் 1871ஆம் ஆண்டில் தனது 62 வயதில்

‘பாரம்பரிய மாற்றத்தால் வந்த மனிதன்’ (The Descent of Man)எனும் ஆய்வு நூலை வெளியிடுகிறார்.
மதபீடங்கள் காட்டிய எதிர்ப்பு

மனித இனத்தை குறித்து ஆய்வு வெளிவந்த நிலையில் மத பீடங்களிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது. மத குருமார்கள் டார்வினை கடுமையாக எதிர்த்தனர். பொதுவெளியில் டார்வின் கேலி, கிண்டல் செய்யப் பட்டார். இன்றைய மனிதன் முந்தைய குரங்கினத்திலிருந்து வந்திருக்க கூடிய வாய்ப்பு உள்ளது என்றார். தனது ஆய்வுக் குறிப்புகளில் கடவுளைக் குறித்து டார்வின் எங்குமே குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும் அன்று நிலவிய – இன்றும் நிலவி வரும், ‘கடவுள்தான் மனிதனைப் படைத்தார்’ என்கின்ற எந்த ஆதாரமும் இல்லாத ஒன்றை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற மக்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் கடவுளுக்கு – கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் டார்வின் என சித்தரிக் கப்படுகிறார். ஆனால் இறுதிவரை தான் கண்டறிந்த அறிவியல் உண்மை நிலையிலிருந்து டார்வின் பின் வாங்கவில்லை.

டார்வின் கண்டறிந்த பரிணாமக்
கொள்கை என்பது என்ன?

1. மாற்றம் – எல்லா உயிரினங்களிலும் மாற்றம் நடை பெற்றுக் கொண்டுதான் வருகிறது (இந்த மாற்றங்கள் ஒரு மனித வாழ்வு காலத்தில் தொடங்கி முடிவடைவது இல்லை). இன்று உள்ள மனித இனமே மாற்றத்தின் முற்றுப்புள்ளி அல்ல.
2. தலைமுறையாகப் பெருக்கம்: ஒத்த உயிர் வடிவத்தைக் கொண்டுள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் மிக்கது.
3. உயிர் வாழ்வதற்கான போராட்டம்(Struggle for existence): ஒவ்வொரு உயிரினமும் தான் வாழும் குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்றவாறு மாறுதல்களை கணித்து உருவாக்கிக் கொள்ளும்; அதற்கேற்ற முறை யில் இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து மாறுதல் களை ஏற்படுத்திக் கொள்ளும். இந்த ஒட்டுமொத்த மாறுதல்களுக்கு உரிய வகையில் செயல்படாத உயிரினங்கள் கால வெள்ளத்தில் இல்லாமலே போயிருக் கின்றன. இது ஒரு வகையில் ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வரும் போராட்ட மாறுதல் முறையாகும். (இந்த போராட்டத்தில் வெற்றி காணு பவை பிழைத்துக் கொள்ளும்; மற்றவை இல்லாமலே போய்விடும்).
இந்த உண்மையானது அதுவரை நிலவி வந்த கட வுள்தான் அனைத்து உயிரினங்களையும் இன்றைக்கு இருக்கும் வடிவமைப்பிலே படைத்தார் என்பதை இயல்பாகவே மறுத்து விடுகிறது. கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவரல்ல டார்வின். கிறிஸ்தவ தேவாலயத்திற்கு செல்வதை ஒரு காலக்கட்டத்தில் நிறுத்திக் கொள்கிறார். மற்றபடி கடவுளுக்கு எதிரான, மத பீடத்திற்கு எதிரான கருத்துகளை எடுத்துரைக்க வில்லை. பரிணாமக் கொள்கையின் தாக்கத்தால் மதபீடம் ஆட்டம் கண்டது; அதனால் அது டார்வினுக்கு பல்வேறு தடைகளை விதித்தது. அவை பற்றி பொருட் படுத்தாதவராகவே டார்வின் வாழ்ந்து மறைந்தார்.

இன்றைய அறிவியல் வளர்ச்சி, ஆய்வுக் கூட கட்டமைப்பு தொழில்நுட்பப் பெருக்கம். டார்வின் காலத்தில் இல்லை. கண்ணில் பார்த்தவை குறித்து ஆய்வு செய்து அனுமானத்தின் அடிப்படையில் தொடங்கி தக்க ஆதாரங்களோடு தகுந்த கண்டறிதலை உலகிற்கு அளித்தார். டார்வினைப் போலவேதான் அவர் காலத்தில் வாழ்ந்த, முன்னர் வாழ்ந்த அறிவியலாளர்கள் – பலரும் வெளிப்படையாக பார்த்த – ஆனால் புலப்படாத உண்மைகளை அறிவியல் உலகிற்கு வழங்கிச் சென்றார்கள். அன்று அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்தவைகளால் இன்று உயிரினங் களின் மரபணுக்கள் பற்றிய ஆய்வு உரிய கட்டமைப்பு வசதிகளுடன் தொடர்ந்து வரும் வேளையில் மறுக்க முடியாதவைகளாக இருப்பது சிறப்புக்குரியதாகும்.

மாறும் அறிவியல் உண்மைகள்

மத நம்பிக்கைகள் எந்நாளும் மாறாத் தன்மை யானவை. ஆனால் அறிவியல் உண்மைகள் வருங் காலத்திலும் அப்படியே தொடரும் எனச் சொல்லிவிட முடியாது. உரிய ஆதாரங்களுடன் புதிய உண்மைகள் அறியப்படும் நிலையில், இன்று நிலவிடும் உண்மைகள் மாறக்கூடிய நிலை வரலாம்; இதுதான் அறிவியல் உண்மைகளுக்கும் மத நம்பிக்கைகளுக்கும் உள்ள வேறுபாடு. ஆனால் மேற்கத்திய உலகில் செய்த தவறை ஏற்றுக் கொள்வது வெகு காலம் கடந்த நிலை யில் நிகழ்ந்துள்ளது.
“மனிதர்களைச் சிந்தித்து கருத்துகளின் மீது முடி வெடுக்கச் சொன்னதால் – இளைஞர்களின் மனதை கெடுக்கிறார்” என்று அரச நீதிமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு, கொல்லப்பட்டார் சாக்ரடீஸ் – சென்ற நூற்றாண்டில்தான் கிரீஸ் நாட்டு நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை தவறு – குற்றச்சாட்டும் தவறு என வெளிப் படையாக தெரிவித்தது.

சார்லஸ் டார்வினின் உயிரினங்களின் தோற்றம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்க மறுத்த கிறிஸ்தவ மத பீடம், 2009ஆம் ஆண்டில்தான் டார்வி னின் பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொண்டது; தாம் நடத்திடும் கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைத்திடும் நிலையினை உருவாக்கியது.

அறிவியல் வேறு; போலி அறிவியல் வேறு

காலங்கடந்தும் உண்மையை ஏற்றுக் கொள்வதுதான் அறிவு நாணயமிக்க செயல். ஆனால் கடவுளரே அவதாரங்கள் பலவாக எடுத்துப் பிறந்த இந்த ‘புனித மண்ணில்’ அறிவியலுக்கு புறம்பான எதிர்வினையை விட – திரிபுவாத நிலையினை உருவாக்கும் செயல்தான் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பையும் எந்த ஆதாரமுமின்றி வெறும் புராணப் புனைவுகளை மட்டும் சுட்டிக் காட்டி – அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் முன்னரே இந்த மண்ணில் நிலவி வந்தவைகள் என – அறிவு நாணய மற்ற கூற்றுகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. அறிவியல் அல்லாதவற்றை வெறும் வியாக்கியனங்கள் மூலமாக அறிவியலை போன்று சொல்லுவது வாடிக் கையாகப் போய்விட்டது. போலி அறிவியலை மூலதன மாக்கி ஆதிக்க சக்திகள் ஊக்கம் பெற்று வரும் நிலை முறியடிக்கப்பட வேண்டும். அறிவியல் வேறு; போலி அறிவியல் வேறு என இனம் பிரித்து புரிந்து கொள்ளும் நிலை – அதனை பரவலாக எடுத்துச் செல்லும் நிலை சிறிய அளவில்தான் நடைபெற்று வருகிறது. இப்படிப் பட்ட செயல்கள் மேலும் வலுப்பட்டு பெருகிட வேண்டும்.

அறிவியல் மனப்பான்மை பெருகிடுக

சார்லஸ் டார்வினின் 224ஆம் பிறந்த நாளில் அறிவுப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டிய செய்தி இதுவே; பொய்மைக்கு ஆதரவு காட்டிடாத அடக்கு முறைக்கு ஆளாகாத துணிவு பெருகிட வேண்டும். அறிவியல் செய்திகளை பரவலாக்கி, இயல்பாகவே அனைவரும் அறிவியல் மனப்பான்மை கொண்டு எதனையும் அணுகிடும் பாங்கினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சார்லஸ் டார்வினின் அறிவியல் உண்மைகள் வாழ்க! பிற அறிவியல் உண்மைகளும் பல்கிப் பெருகிடுக!

சனி, 17 பிப்ரவரி, 2024

இந்தியாவில் அல்ல – ஆஸ்திரேலியாவில்! இறந்த கணவரின் உயிர் அணுமூலம் குழந்தை பெற பெண்ணுக்கு அனுமதி

 



கான்பெரா, ஜன.5- ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னியில் வசிக்கும் முதிய இணையருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களது மகள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அடுத்த அதிர்ச்சியாக 2019ஆம் ஆண்டில் அவர்களது மகனும் சாலை விபத்தில் பலியானார்.
இதனால் அந்த இணையர் செயற்கை கருத்தரிப்பு முறையில் மற்றொரு குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய் தனர். இந்நிலையில் கடந்த மாதம் (டிசம்பர்) அந்த பெண்ணின் கணவரும் உயிரி ழந்தார். இறந்த இரு நாட்களுக்குள் உயிரணுவை சேகரிக்க வேண்டும் என்பதால் அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுத்ததால் கணவரின் உயிரணு சேமித்து வைக்கப்பட்டது. ஆனால் அதனை பயன்படுத்த தனி நீதிபதியின் உத்தரவு வேண்டும் என்ப தால் தனியே மற்றொரு வழக்கு தொடுத் தார். அந்த வழக்கிலும் நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கியது.

இதன் மூலம் உயிரிழந்த கணவரின் உயிரணுவை பயன்படுத்தி குழந்தை பெறுவதற்கான சட்ட போராட்டத்தில் அந்த 62 வயது பெண் வெற்றி பெற் றுள்ளார்.

சனி, 10 பிப்ரவரி, 2024

லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ் (பிரபஞ்சத்தின் பெரும் அளவிலான அடர்த்தியும், ஆற்றலும் (mass and energy) வெற்றிடத்தில்தான் அடங்கியுள்ளது என்று முதன் முதலாகக் கூறிய இயல்பியலாளர்களில் இவரும் ஒருவர்)



– நீட்சே

இயல்பியல் மற்றும் பிரபஞ்சவியல் அறிவியல் துறைகளில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, பல அறிவியல் கோட்பாடுகளைக் கண்டுபிடித்து வெளியிட்ட   லாரன்ஸ் மேக்ஸ்வெல் கிராஸ்(Lawrence Maxwell Krauss) என்ற அமெரிக்க நாட்டு அறிவியல் பேரறிஞர் 1954 மே 27 அன்று பிறந்தவர் ஆவார்.

பூமி மற்றும் விண்வெளி ஆய்வுப் பயண கல்வி நிறுவனத்தின் நிறுவனப் பேராசிரியராகவும், அரிசோனா மாகாணப் பல்கலைக்கழகத்தின் உயிர்த் தோற்ற ஆய்வு பற்றிய செயல்திட்ட இயக்குநராகவும்  இருந்தவர் அவர். இவர் எழுதி வெளியிட்டுள்ள,  அதிக பிரதிகள் விற்பனையான அறிவியல் நூல்கள் பலவற்றில் நட்சத்திரங்களின் இயக்கம் பற்றிய இயல்பியல்(The  Physics of Star Trek)  மற்றும் வெற்றிடத்திலிருந்து உருவான பிரபஞ்சம் (A Universe from Nothing) என்ற இரு நூல்களும் அறிவியல் உலகில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவையாகும். பொதுமக்கள் அறிவியலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும்,  சோதனைகளால் மெய்ப்பிக்கப்பட்ட உறுதியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பொதுநலக் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதையும், பரவலான ஆழ்ந்த அறிவியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதையும், கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய கருத்து இன்றி அறிவியல் அடிப்படையிலான நம்பிக்கை கொண்டிருப்பதையும் வலியுறுத்திய அவர்,  மதம், கடவுள் பற்றிய  மூடநம்பிக்கைகள் மனித இனத்தின் மீது ஏற்படுத்தும் தீய பாதிப்புகளைக் குறைப்பதற்காக வெகுவாகப் பாடுபட்டார்.

நியூயார்க் நகரில் பிறந்த இவர் தனது இளமைப் பருவத்தை டொரன்டோ, ஒன்டாரியோ, கனடா போன்ற இடங்களில் கழித்தவர். ஒட்டாவா மாகாண கார்லடன் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் இயல்பியல் பாடங்களில் முதல்பிரிவில் தேர்ச்சி பெற்று 1977ஆம் ஆண்டில் இவர் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1982இல் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப அறிவியல் கழகம் இவருக்கு இயல்பியலில் ஆய்வு முனைவர் பட்டம் வழங்கியது.

கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் இயல்பியல் துறைத் தலைவராக  1993 முதல் 2005 வரை இவர் இருந்தார். அப்பல்கலைக்கழகத்தின் தலைவர் எட்வர்ட் எம்.ஹன்ட்ரட் என்பவர் மீதும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்  முதல்வர் ஆண்டர்சன் மீதும்  இவர் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் பெரும் ஆதரவுடன் நிறைவேறின என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவியல் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேசிய ஊடக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்ட இவர், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தலையங்கங்களையும் எழுதியுள்ளார்.  டார்வினின் உயிர்த் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கு எதிரான கடவுளே அறிவான படைப்பாளர் (Intelligent Design) என்ற கோட்பாட்டைப்  பள்ளிகளில் போதிப்பதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த இவர், 2004ஆம் ஆண்டில் ஓஹியோ மாகாண கல்விக் குழுவின் முன் விசாரணைக்குச் சென்றது முதல், இவரது புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கியது.

2008 அமரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு ஆதரவான பிரச்சார இயக்கத்தில் அறிவியல் கொள்கைக் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார். அமெரிக்க அறிவியலாளர் கூட்டமைப்பின் இயக்குநர் குழுவிற்கு இவர் 2010ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பிரபஞ்சவியல், பிரபஞ்சஇயல்பியல் மற்றும் இயல்பியல் ஆய்வுக் கழகத்தின் பகுதிநேரப் பேராசிரியர் பணியை இவர் ஒப்புக் கொண்டார்.

வெற்றிடத்திலிருந்து உருவான பிரபஞ்சம்: ஏதுமில்லாமல் இருப்பதை விட ஏதோ ஒன்று இருக்கிறது என்று கூறப்படுவது ஏன்? (A Universe from Nothing : Why There is Something Rather than Nothing)  என்ற இவரது நூல், புகழ்பெற்ற கடவுள் என்னும் பொய் (God’s Delusion)) என்ற நூலை எழுதிய ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins)  அவர்களின் பின்னுரையுடன்  2012 ஜனவரியில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திலேயே அதிக பிரதிகள் விற்பனையான நூல் என்ற பெருமையைப் பெற்ற  இந்நூல் இதுவரை 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தீவிர நாத்திகரும், புகழ் பெற்ற எழுத்தாளருமான கிறிஸ்டொபர் ஹிச்சன்ஸ் அவர்களின் முன்னுரையுடன் இந்நூல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது: ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்த காரணத்தினால், அந்த உரை எழுதும் பணி முற்றுப் பெறாமல் போனது. 2013ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இந்நூலின் மலிவுப் பதிப்பு புதிய முன்னுரையுடனும், ஹிக்ஸ் பாசன் துகள் பற்றிய இவரது கேள்வி பதில் பகுதியுடனும் வெளியிடப்பட்டுள்ளது.

2012 ஜூலையில் நியூஸ் வீக் இதழில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரபஞ்சப் பெருவெடிப்பு எவ்வாறு ஏற்பட்டு இருக்கக்கூடும் என்பதை ஹிக்ஸ் துகள் கோட்பாட்டினால் விளக்க முடியும் என்று இவர் தெரிவித்துள்ளார். இயல்பியல் அறிவியல் துறையிலேயே அதிகமாகப் பணியாற்றியுள்ள இவர் அத்துறையில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருந்திருக்கிறார். பிரபஞ்சத்தின் பெரும் அளவிலான அடர்த்தியும், ஆற்றலும்  (mass and energy) வெற்றிடத்தில்தான் அடங்கியுள்ளது என்று முதன் முதலாகக் கூறிய இயல்பியலாளர்களில் இவரும் ஒருவர். வெற்றிடத்திலிருந்தே இந்தப் பிரபஞ்சம் தோன்றியிருக்க வேண்டும் என்று தனது வெற்றிடத்திலிருந்து உருவான பிரபஞ்சம்  என்ற நூலில்  குறிப்பிட்டிருந்தது போன்ற  ஒரு மாதிரியை இவர் உருவாக்கினார்.

தீவிர நாத்திகரான இவர் Hamza Tzortzis and William Lane Craig போன்ற மதத் தலைவர்கள், இறையியலாளர்களுடன் பல விவாதங்களை மேற்கொண்டுள்ளார். Tzortzis  உடனான அத்தகைய ஒரு விவாதத்தின்போது, பார்வையாளர்களில் இருந்த ஆண்களையும், பெண்களையும் தனித் தனியாக உட்காரச் செய்திருந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ளாத இவர், அவர்கள் ஒன்றாக உட்கார வைக்கப்படும் வரை விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்ளமாட்டேன் என்று அறிவித்து அதன்படியே இருந்தார். விவாத ஏற்பாட்டாளர்கள் அவரது வேண்டுகோளை ஏற்று ஆண்கள் பெண்களை ஒன்றாக உட்கார வைத்த பிறகே அவர் தனது வாதத்தைத் தொடர்ந்தார்.

நம்பிக்கையற்றவர்கள் (unbelievers)  என்ற ஒரு முழுநீள செய்திப் படம் ஒன்றிலும் இவர் நடித்துள்ளார். இப்படத்தில் இவரும்  பேராசிரியர் ரிச்சர்ட் டாக்கின்சும் ஒன்றாக உலகம் முழுவதும் சுற்றி வந்து அறிவியல் மற்றும் பகுத்தறிவின் முக்கியத்துவத்தைப் பற்றியும்,  மதம் மற்றும் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் வெளிப்படையாக மக்களிடம் பேசி பிரச்சாரம் செய்வது போலவும் Stephen Hawking, Ayaan Hirsi Ali, Sam Hams, Cameron  Diaz போன்ற  பிரபல கடவுள் மறுப்பாளர்கள் மற்றும்  பகுத்தறிவாளர்களை நேர்முகம் காண்பது போலவும் காட்டப்பட்டுள்ளது.

மக்களால் நன்கு அறியப்பட்டுள்ள  நுண்ணறிவாளர் (Public Intellectual) என்று Scientific American பத்திரிகையால் குறிப்பிடப்பட்டுள்ள,  தற்போது உயிருடன் இருக்கும் ஒரு சில இயல்பியலாளர்களில் லாரன்சும் ஒருவராவார். The American Physics Society, The American Association of Physics Teachers and The American Institute of Physics   என்ற அமெரிக்காவின் மூன்று முக்கிய பெரும் இயல்பியல் கல்வி நிறுவனங்களிடமிருந்தும்  விருதுகள் பெற்ற ஒரே இயல்பியலாளர் இவர் மட்டுமே. அமெரிக்கப் பொதுக் கல்வித் துறையில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பெரும் பங்காற்றியதற்காக தேசிய கல்விக் கழக பொதுச் சேவைப் பதக்கம் 2012ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது. 2011 டிசம்பரில் சென்டர் ஃபார் என்குயரி (Centre for Inquiry) அமைப்பின் இயக்குநர்  குழுவிற்கு  வாக்கு அளிக்க இயலாத மதிப்புறு உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார்.

– தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

படைப்புத் தத்துவமா? பரிணாம வளர்ச்சியா?



மார்ச் 01-15

–  மு.பாண்டியன் நெடுஞ்செழியன்

1831 — பிரிட்டனின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து பீகிள் கப்பலில் புறப்பட்டு 5 ஆண்டுகள் காடு, மலை, கடலென பயணம் செய்த சார்லஸ் டார்வின் 1859இல் வெளியிட்ட இயற்கைத் தேர்வு வழிப்பட்ட உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species of Natural Selection) என்ற நூலின் மூலமாக பரிணாம வளர்ச்சி என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு அர்ப்பணித்தார்.

 

1809 பிப்ரவரி 9ஆம் தேதி பிரிட்டனின் ஷரெவ்ஸ்பரி நகரில் பிறந்த சார்லஸ் டார்வின் தன்னுடைய 16ஆவது வயதில் மருத்துவம் படிக்கப் போனார். அது பிடிக்கவில்லை என்பதால், அவரது தந்தை ராபர்ட் டார்வின் மகனை கிறித்தவப் பாதிரியாராக்க முயற்சித்தார். அதற்கு ஏதுவாக கேம்பிரிட்ஜில் 1828இல் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டார்.

பாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது.

பீகிள் கப்பலில் பயணம் செய்த தூரம் 40 ஆயிரம் மைல்கள் _ நிலவழிப் பயணம் 2000 மைல்கள். நில அமைப்பு, தாவரவியல் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள் _ நாட்குறிப்புகள் 800 பக்கங்கள் _ சேகரித்த எலும்புகள், உயிரின மாதிரிகள் எண்ணிக்கை 5000.

பீகிள் பயணத்தின் முடிவில், அதாவது தனது 27 வயதில் டார்வின் சாதித்துக் காட்டியதுதான் இவையெல்லாம்!

தனது 16ஆவது வயதில் உயிரியல் சம்பந்தமாக ஆய்வுக்கட்டுரை எழுதத் தொடங்கிய டார்வின் _ தனது 72ஆவது வயதில் தன்னுடைய கடைசி நூலாக _ மண் புழுக்களைப் பற்றிய ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். அதில் மண்புழுக்கள் பூமியின் கீழிருந்து மேற்பரப்பிற்கு நிலத்தை உயர்த்திக் கொண்டே இருக்கின்றன! இதன் மூலம் 60 ஆண்டுகளில் ஓர் அடி அளவிற்கான நில அடுக்கை (Layer)  ஏற்படுத்த முடியும் என்று கண்டறிந்து வெளியிட்டார். இந்த உண்மையைக் கண்டறிய மண்புழுக்களைப் பற்றி சுமார் 42 ஆண்டுக்காலம் ஆராய்ச்சி செய்திருந்தார் டார்வின்!

1831 முதல் 1836 வரையிலான அவரது பீகிள் கப்பல் பயணம் தொடங்கி _ 1859இல் உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியீடு தொடர்ந்து _ 1882இல் அவர் இறக்கும் வரையிலான 73 ஆண்டுக்கால டார்வினின் வாழ்க்கைப் பயணம் சலிப்பே இல்லாத இடையறாத அறிவியல் ஆய்வுப் பயணம்!

பீகிள் கப்பல் பயணத்தின்போது தென் அமெரிக்காவிற்கு மேற்கே, பசிபிக் பெருங்கடலில் உள்ள கோலேபோகோ தீவுகளில் அவர் பார்த்த கடல் ஆமைகளிடையே புலப்பட்ட வேறுபாடுகள்தான் இயற்கைத் தேர்வு (Natural Selection) குறித்த கோட்பாடுகளை டார்வின் மனதில் உருவகப்படுத்தின! இதன்படி, உயிரினங்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கேற்ப தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றன.  இப்படி சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் (Adaptation) போராட்டங்கள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்ந்து வருகின்றன. இந்தப் போராட்டங்களில் தகுதி யானவை  வாழ்கின்றன _ தகுதியற்றவை சாகின்றன என்று கண்டறிந்தார்.

அதேபோல உயிரினங்களில் சூழ்நிலைக்கேற்ப ஏற்படும் மாறுதல்கள் காரணமாக அவற்றின் சில உறுப்புகள் பயனற்ற நிலையில் காலப்போக்கில் எச்சங்களாகி (Vestiges) விடுகின்றன என்று கண்டறிந்த டார்வின், அதற்கு உதாரணமாக ஆண் உயிரினங்களின் பால் சுரப்பிகள் பயனின்றி எச்சமாகி விட்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

டார்வின் தனது நூலில் உயிரினங்களின் தோற்றம் குறித்த பரிணாம வளர்ச்சி என்பது லட்சக்கணக்கான ஆண்டுகள் நிகழ்ந்தது. உயிரினங்களின் தாழ் நிலையிலிருந்து உயரிய நிலைக்கு இட்டுச் சென்றது. இப்படித்தான் மனிதனின் தோற்றம் (Homosapiens) ஏற்பட்டது! பரிணாம வளர்ச்சியில் மாற்றம் _ தேர்வு _ விருத்தி என்ற படிகள் முக்கியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

பரிணாம வளர்ச்சி என்பது நீண்டகால இடைவெளியில் நிகழ்வது என்ற டார்வினின் கருத்துக்குச் சான்றாக கொரில்லாவையும், சிம்பன்சியையுமே எடுத்துக் கொள்ளலாம்! 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரில்லாவிலிருந்து உயிரியல் ரீதியாக கொஞ்சமே வேறுபடும் சிம்பன்சி இனம் பரிணாம வளர்ச்சியில் தோன்ற காலம் எடுத்துக்கொண்ட இடைவெளி சுமார் 25 லட்சம் ஆண்டுகள்!

460 கோடி ஆண்டுகளுக்கு முன்தோன்றிய பூமியில் _ சுமார் 360 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் உயிரினம் சைனா பைட்டா போன்ற பாசி இனம்தான்! அதற்குப் பின் பல்வேறு தாவர இனங்கள் _ நீர் வாழ் உயிரினங்கள் _ நிலநீர் வாழ்வன _ ஊர்வன _ பறப்பன _ பாலூட்டிகள் என ஒரு பெரும் சங்கிலித் தொடராக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் தோன்றி வளர்ந்தன!

நிலநீர் வாழ்வன _ ஊர்வன உயிரினமாக பரிணாம வளர்ச்சி அடைய இடைப்பட்ட இணைப்பு உயிரினமாக (Conjuction) ஆமை, முதலை போன்றவற்றைக் குறிப்பிடலாம்! அதேபோல ஊர்வன உயிரினம் _ பறப்பனவாக பரிணாம வளர்ச்சி அடைய இடைப்பட்ட இணைப்பு உயிரினமாக பறக்கும் பல்லியைக் (Flying Lizard) குறிப்பிடலாம்! பறப்பன _ பாலூட்டிகளாக பரிணாமம் பெற இடைப்பட்ட உயிரினமாக வவ்வால்களைக் குறிப்பிடலாம்! அவை பறக்கவும் செய்யும் _ பாலூட்டவும் செய்யும்! இவற்றையெல்லாம் சார்லஸ் டார்வின் ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டினார்!

26லு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி 6லு கோடி ஆண்டுகளுக்கு முன் ஒட்டுமொத்தமாக அழிந்துபோன (Mass Extinction) டைனோசர்கள் இந்தப் பூமியில் 20 கோடி ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன! அவை வாழ்ந்த காலத்தில் பறவைகளும், பெரிய பாலூட்டிகளும் அதிக அளவில் தோன்றியிருக்கவில்லை என்பது ஓர் ஆச்சரியமான உண்மை! இவையெல்லாம் டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் அடிப்படையில் அவர் காலத்துக்குப் பின், அண்மையில் கண்டறியப்பட்ட ஆராய்ச்சியின் பாற்பட்ட உண்மைகள்!

சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய வால் குரங்குகள் 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கொரில்லாக்கள் 25 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிம்பன்சிகள் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எபிலிஸ் _ 17லு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ எரக்டஸ் என்ற ஆதிமனிதன் _ அதற்குப் பின்னால் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ சேபியன்ஸ் எனும் மனிதர்களாகிய நாம்! இதுதான் பரிணாம வளர்ச்சியில் உயிரியல் ரீதியாக நம்முடைய வரலாறு!

டார்வின் கண்டறிந்து சொன்ன பரிணாம வளர்ச்சித் தத்துவம் அவர் வாழ்ந்த காலத்தில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை! அவர் வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டு அய்ரோப்பாவில் பாராளுமன்ற ஜனநாயக முறைகள் முகிழ்த்த காலகட்டம் என்பதால் _ உலகம் உருண்டை என்று சொன்னதற்காக உயிரோடு கொளுத்தப்பட்ட அறிஞர் புருனோவுக்கு நேர்ந்த கதி _ இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு கண்கள் குருடாக்கப்பட்ட அறிஞர் கலிலியோவுக்கு நேர்ந்த கதி _ அறிஞர் டார்வினுக்கு ஏற்படவில்லை என்று நாம் ஆறுதல் அடையலாம்! நாம் வாழும் இந்த உலகம் _ மனிதன், தாவர, மிருக ஜீவராசிகள் எல்லாவற்றையும் ஆண்டவன் 6 நாட்களில் படைத்தான் என்று சொன்ன கிறித்துவ மதம் தொடங்கி உலகில் உள்ள எல்லா மதங்களும் போதித்து வரும் படைப்புத் தத்துவத்திற்கு (Creationism) நேர் எதிராக அமைந்த புரட்சிதான் டார்வின் முன்வைத்த பரிணாம வளர்ச்சித் தத்துவம்(Evolution Theory).

துன்பமும் துயரமும் இயற்கைச் சீற்றங்களும் நிறைந்த தனது 5 ஆண்டுகால கடற்பயணத்தின் முடிவில் சார்லஸ் டார்வின் கூறுகிறார், இயற்கை அப்படியொன்றும் எளிமையாகக் கையாளக் கூடியதாக இல்லை! பரந்து கிடக்கும் உயிரினங்கள் (Distribution) தெய்வீகப் படைப்பு என்ற கருத்திற்கு ஏற்றதாக இல்லை என்று! அவர் கண்டறிந்த இயற்கைத் தேர்வு (Natural Selection)கோட்பாடுதான் தெய்வீகப் படைப்பு கோட்பாட்டைவிட சிறந்தது என்பதற்கு உதாரணமாக கடந்த பல தலைமுறைகளாக மக்கள்தொகை எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள படிப்படியான மாற்றத்தைச் சுட்டிக் காட்டினார்.

இரு தோடுடைய சிப்பியின் அழகிய இணைப்பு _ உயிரினங்களின் விதவிதமான பல்வேறு வகைகள் _ இவற்றில் பரிணாம வளர்ச்சியின்றி _ வேறெந்த படைப்பு வடிவமைப்பும் இல்லை என்றே தெளிவாகத் தெரிகிறது என்று தனது அந்திமக்காலத்தில் டார்வின் ஆணித்தரமாக அறிவித்தார்!

உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் கடவுள்தான் படைத்தார் என்று வாதிட்டு _ டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டிற்கு எதிராகக் கிளம்பிய கடவுள் படைப்புவாதிகளில் முன்னோடியாக பிரிட்டனைச் சார்ந்த வில்லியம் பேலீ இருந்தார். அவர் ஒரு கடிகாரத்தில் உள்ளடங்கிய சிக்கலான உள்பாகங்களுக்கு ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் (Intelligent Designer) தேவைப்படுவது போன்றே சிக்கல் நிறைந்த ஒரு முழுமையான உயிரமைப்பு பிரபஞ்சம். இவற்றுக்கு ஒரு கடவுள் நிச்சயம் இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

டார்வினின் சமகாலத்தில் வாழ்ந்த ஸ்காட்லாந்தைச் சார்ந்த டேவிட் ஹியூம் _ பேலீயின் வாதத்திற்குப் பதிலடியாக, மனிதனைப் படைத்த உயர்ந்த வடிவமைப்பாளர் கடவுள் என்றால், அவரைப் படைத்த வடிவமைப்பாளர் யார்? என்ற கேள்வி முடிவுறாது போய்க் கொண்டேயிருக்கும் என்றுரைத்தார்.

டார்வினின் காலத்துக்குப் பின்னாலும் இந்தத் தத்துவப் போர் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது!

கடவுள் படைப்புத் தத்துவத்துக்கு ஆதரவாக டார்வினின் கொள்கையை மறுப்பவர்கள் இன்றும் மிகப் பெரும்பான்மையாகவே இருக்கிறார்கள்!

1989இல் வெளிவந்த “Of Pandas and People” என்ற நூலில் மைக்கேல் பெஹெ என்ற அறிவியலாளர் தன் யூக முடிவாக குறைக்கப்பட முடியாத சிக்கல்களைக் (Irreducible complexities)  கொண்ட உயிரினங்களையும் அவற்றின் உறுப்புகளையும் ஓர் அறிவார்ந்த வடிவமைப்பாளர் – அதாவது கடவுள்தான் படைத்திருக்க முடியும். டார்வின் கண்டுபிடித்த பரிணாம வளர்ச்சி முறையில் உருவாகியிருக்க முடியாது என்று அறிவித்தார்.

எது எப்படியிருந்தாலும் _ விஞ்ஞான உலகத்தில் _ குறிப்பாக உயிரியலில் மகத்தான சாதனையாகவும் _ பெரும் புரட்சியாகவும் விளங்கும் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு நவீன விஞ்ஞானத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது! ஆனால் உலகத்திலுள்ள கடவுள் படைப்பு வாதத்தின் தீவிர ஆதரவாளர்கள், ஆளும் வர்க்க அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் இன்றளவிலும் டார்வினின் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதோடு நில்லாமல் _ அந்த அறிவியல் தத்துவத்தையே குழிதோண்டிப் புதைக்க எத்தனிக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்!

அண்மையில் 2005இல் இது சம்பந்தமாக ஒரு வழக்கு அமெரிக்காவில் நடைபெற்றது! டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்கப்பட்டு _ மதவாத அடிப்படையிலான (Human Intelligent Design) “ அறிவார்ந்த கடவுள் படைப்பு என்ற கோட்பாடே பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும் என்பதுதான் அந்த வழக்கு! அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்கூட, மதவாதிகளுக்கு ஆதரவாகத்தான் அணி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்!

அந்த வழக்கின் முடிவில் நீதிபதி, டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுதான் விஞ்ஞானப்பூர்வமானது _ அதைப் பாடத்தில் இருந்து நீக்க முடியாது! என்று தீர்ப்பளித்தார் என்பது ஆறுதல் அளிக்கும் செய்தி!

டார்வினின் மனைவி எம்மா டார்வின் கிறித்தவ மதத்தில் ஊறிப்போனவர்! திருமணத்திற்குப் பிறகு கணவன்_மனைவி இருவரும் கருத்து வேறுபாடுகளைப் பரிமாற்றம் செய்தே வாழ்க்கை நடத்தினர்! ஆனால், காலப்போக்கில் தமக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களாலும் _ அறிவியல் உண்மைகளின் தாக்கத்தாலும், சார்லஸ் டார்வின் கடவுள் நம்பிக்கையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டார்.

நீண்ட காலம் கணவனோடு நல்லதொரு இல்லறம் நடத்திய எம்மா டார்வின் அவரிடமே சொன்னது இது! _ நீங்கள் நியாய உணர்வுடன் செயல்படுகிறீர்கள்! உண்மையை அறியவும் _ உலகுக்கு அறிவிக்கவும் அக்கறையுடன் ஆர்வம் கொண்டு இருக்கிறீர்கள்! அதற்காக சதாசர்வகாலமும் முயற்சிக்கிறீர்கள்! காரணம், நீங்கள் நேர்மையானவர் _ தவறாக எதையும் செய்ய மாட்டீர்கள்!

தனது கண்டுபிடிப்புகளை யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலாக வெளியிட்ட டார்வினின் நேர்மையும் _ அவர் மனித குலத்துக்கு அர்ப்பணித்த பரிணாம வளர்ச்சித் தத்துவமும் என்றும் வாழும்!

(9.2.2014 – சார்லஸ் டார்வினின் 205ஆவது பிறந்த நாள்.)