வெள்ளி, 31 அக்டோபர், 2025

அறிவியலின் அடுத்த கட்டம்: தோலின் செல்லிலிருந்து கருவை உருவாக்கிய விஞ்ஞானிகள்

அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர்.

இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது உதவும். மேலும், தன்பாலின இணையர்களும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந் தையைப் பெற வாய்ப்பு உருவாகலாம்.

ஆனால், இந்த முறையை கருத்தரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மேம்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இதை ஒரு முக்கிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும், இதுபோன்ற அறிவியல் முயற்சிகள் குறித்து பொதுமக்களுடன் வெளிப் படையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். பொதுவாக குழந்தை பெறுவது எளிதான ஒன்று. ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையைச் சந்தித்து, கரு உருவாகி, ஒன்பது மாதங்களில் குழந்தை பிறந்துவிடும்.

இப்போது விஞ்ஞானிகள் இந்த விதிகளை மாற்றுகின்றனர். இந்தப் புதிய முயற்சி மனித தோலில் இருந்து தொடங்குகிறது. ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள், உடலை உருவாக்கத் தேவையான முழு மரபணு (டிஎன்ஏ) இருக்கும் தோல் செல்லின் நியூக்ளியஸை (nucleus) எடுக்கின்றனர். பின்னர், அதை மரபணு தகவல்கள் நீக்கப்பட்ட ஒரு கருமுட்டையில் வைக்கின்றனர். 1996இல் உலகில் குளோனிங் முறை யில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி ஆட்டை உரு வாக்கிய முறையைப் போன்றது இது.

“மைட்டோமியோசிஸ்”

ஆனால், விந்தணுவால் இந்த கருமுட்டையை கருத்தரிக்க முடியவில்லை. ஏனெனில் ெகாடையாக பெறப்பட்ட இந்த கருமுட்டைக்குள் ஏற்கெனவே முழு குரோமோசோம்களும் உள்ளன. ஒரு குழந்தை உருவாக, தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் தலா 23 குரோமோசோம்கள் (மொத்தம் 46) தேவை. ஆனால், இந்த முட்டையில் ஏற்கெனவே 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. அதனால், கருமுட்டை தனது குரோமோசோம்களில் பாதியை வெளியேற்ற வேண்டும். அதன் பின் தான் கருமுட்டையால் விந்தணுவுடன் சேர முடியும். இந்தச் செயல்முறையை ஆராய்ச்சியாளர்கள் “மைட்டோமியோசிஸ்” என்று அழைக் கின்றனர். (இது “மைட்டோசிஸ்” மற்றும் “மியோசிஸ்” என்ற செல்கள் பிரியும் இரண்டு முறைகளின் கலவை).

எதிர்காலத்தில் சாத்தியமாகும்

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு, 82 செயல்படும் கருமுட்டைகள் உருவாக்கப்பட்டதாக கூறுகிறது. அவை விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்டன. சில கருமுட்டைகள் கருவின் ஆரம்ப கட்டத்துக்கு வளர்ந்தன. ஆனால், ஆறு நாட்களுக்கு மேல் எதுவும் வளரவில்லை. “சாத்தியமற்றது என்று நினைக்கப்பட்ட ஒன்றை நாங்கள் செய்துவிட்டோம்,” என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கரு உயிரணு மற்றும் மரபணு சிகிச்சை மய்ய இயக்குநர் பேராசிரியர் சவுக்ரத் மிட்டாலிபோவ். ஆனால், இந்த செயல்முறை இன்னும் முழுமை யாகவில்லை. கருமுட்டை எந்த குரோமோசோம்களை வெளி யேற்றுவது என்பதை தற்செயலாகத் தேர்ந்தெடுக்கிறது. நோய் வராமல் இருக்க, 23 வகைகளில் ஒவ்வொரு வகையிலிருந்தும் ஒரு குரோமோசோம் இருக்க வேண்டும். ஆனால், சில வகைகள் இரண்டாகவும், சில வகைகள் எதுவும் இல்லாமலும் இருக்கின்றன.

மேலும், இந்த முறையின் வெற்றி விகிதம் 9% மட்டுமே. குரோமோசோம்கள் ‘கிராசிங் ஓவர்’ என்ற முக்கியமான டிஎன்ஏ மறுசீரமைப்பு செயல்முறையையும் தவறவிடுகின்றன.

“இந்த முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும்,” என்கிறார் உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் மிட்டாலிபோவ். “எதிர்காலத்தில் இது முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் குழந்தை பெற முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது.”

இந்தப் புதிய தொழில்நுட்பம், ‘இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ்’ எனப்படும் ஒரு வளர்ந்து வரும் துறையின் பகுதி. இதில், உடலுக்கு வெளியே விந்தணுவும் முட்டைகளும் உருவாக்கப்படுகின்றன.  இது இன் னும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎஃப்) மூலம் குழந்தை பெற முடியாத இணையர்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாக உள்ளது.

வயதான பெண்கள், விந்தணு குறைவாக உற்பத்தி செய்யும் ஆண்கள், அல்லது புற்றுநோய் சிகிச்சையால் மலட்டுத்தன்மை அடைந்தவர்களுக்கு இந்த முறை நம்பிக்கை தரும். இந்தத் தொழில்நுட்பம் பெற்றோராவதற்கான பாரம்பரிய விதிகளை மாற்றுகிறது. இதற்கு பெண்ணின் தோல் செல்கள் மட்டுமல்ல, ஆணின் தோல் செல்களையும் பயன்படுத்தலாம்.

இதனால், தன்பாலின தம்பதிகள் இருவரும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற முடியும். உதாரணமாக, ஆண் இணையர்களில் ஒருவரின் தோல் செல்களால் கருமுட்டை உருவாக்கி, மற்றவர் விந்தணுவால் கருத்தரிக்கலாம்.

“போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் குழந்தை பெற முடியாத கோடிக்கணக்கான மக்களுக்கு இது நம்பிக்கை தருவதோடு, தன்பாலின தம்பதிகளுக்கு இருவருடனும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெறும் வாய்ப்பையும் கொடுக்கும்,” என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பவுலா அமடோ.

பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்

ஹல் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியர் ரோஜர் ஸ்டர்மி, இந்த அறிவியல் முயற்சி “முக்கியமானது” மற்றும் “சிறப்பானது” என்று தெரிவித்தார்.

“இதுபோன்ற ஆராய்ச்சிகள், இனப்பெருக்கத்தில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மக்களுடன் திறந்த உரையாடல் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றன,” என்று அவர் கூறினார். “மக்களின் நம்பிக்கையை வளர்க்கவும், பொறுப்பை உறுதி செய்யவும் வலுவான நிர்வாகம் தேவை என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.”

எடின்பரோ பல்கலைக்கழகத்தின் எம்ஆர்சி இனப்பெருக்க சுகாதார மய்யத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் ரிச்சர்ட் ஆண்டர்சன், புதிய கருமுட்டைகளை உருவாக்கும் இந்தத் திறன் “பெரிய கண்டுபிடிப்பு” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாதுகாப்பு குறித்து சில கவலைகள் இருக்கலாம். ஆனால், இந்த ஆய்வு பல பெண்கள் தங்கள் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தைகளைப் பெற உதவும் ஒரு முக்கிய படியாக இருக்கும்,”என்றார்.

- விடுதலை நாளேடு,02.10.25

மருத்துவத்தில் ஒரு மைல் கல் இதயம், கல்லீரல் உள்ளிட்ட மனித உறுப்புகளை செயற்கையாக உருவாக்கினர் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

 


வாசிங்டன், அக்.3 அமெரிக்க காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வறிக்கை முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப் பதாவது: ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை இதயத்தை உருவாக்கும் ஆராய்ச் சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறோம்.

இதன்படி 16 நாட்களில் எங்களது ஆய்வில் செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்கிறது. இதேபோல செயற்கை கல்லீரலையும் உரு வாக்கி உள்ளோம். மேலும் செயற்கை ரத்த நாளங்களையும் உருவாக்கி இருக்கிறோம். எங்கள் ஆராய்ச்சியின் மூலம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 03.10.25

செவ்வாய், 28 அக்டோபர், 2025

மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு!

 



அய்ரோப்பிய நாடான ஸ்வீட னைச் சேர்ந்த வேதியியலாளரும், தொழிலதிபருமான ஆல்பிரட் நோபல் பெயரில், ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

மனித குலத்துக்குப் பல னளிக்கும் வகையில் செயல்படு வோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது உலகின் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுகிறது.

இயற்பியல், வேதியியல், மருத்து வம், இலக்கியம், அமைதி, பொரு ளாதாரம்  என ஆறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகிறது.

இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப் பதக்கம், பட்டயம், பணப்பரிசு உள்ளிட்டவை வழங்கப்படும். இவ்விருது ஆல்பிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10 ஆம் தேதி வழங்கப்படும்.

அந்த வகையில், நடப்பாண்டுக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர்கள் அறிவிப்பு நேற்று (6.10.2025) துவங்கியது. இதில் முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு உரியோர்  பெயர் அறிவிக்கப்பட்டது.

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி, ‘டி செல்’ எனப்படும் சொந்த செல்களைத் தாக்காமல் தடுக்கும் முறை குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரன்கோவ் மற்றும் பிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், இந்தாண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு பெற உள்ளனர்.

-விடுதலை நாளேடு,07.10.25

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு



 ஸ்டாக்ஹோம், அக்.8   அமெரிக்​கா, பிரிட்​டன், பிரான்ஸை சேர்ந்த 3 விஞ்​ஞானிகளுக்கு இயற்​பியலுக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவ நோபல் பரிசு நேற்று முன்​தினம்  (6.10.2025) அறிவிக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​களை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்​சஸ் அமைப்பு சுவீடன் தலைநகர் ஸ்டாக்​ஹோமில் நேற்று (7.10.2025) வெளி​யிட்​டது.

அமெரிக்​காவை சேர்ந்த ஜான் எம். மார்​டினிஸ், பிரிட்​டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்​கேல் டெவோரெட் ஆகியோர் இந்த ஆண்டு இயற்​பியல் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மூன்று விஞ்​ஞானிகளும் தற்​போது அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி வரு​கின்​றனர். குவாண்​டம் ஊடுரு​வல் குறித்த ஆய்​வுக்​காக அவர்​களுக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு இருக்​கிறது.

ஒரு பந்தை சுவரில் எறிந்​தால், அந்த பந்து திரும்பி வரும். இது அனை​வரும் அறிந்த இயற்​பியல் நிகழ்வு ஆகும். ஆனால் சில நுண்​ணியத் துகள்​கள் சுவரை துளைத்து மறு​பக்​கம் செல்​கின்​றன. இதுவே குவாண்​டம் ஊடுரு​வல் என்று அழைக்​கப்​படு​கிறது. கடந்த 1984, 1985-ஆம் ஆண்​டு​களில் குவாண்​டம் ஊடுரு​வலை 3 விஞ்​ஞானிகளும் அறி​வியல்​பூர்​வ​மாக நிரூபித்​தனர். இந்த சாதனைக்​காக அவர்​கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளனர். மருத்​து​வம், விண்​வெளி, பாது​காப்பு தொழில்​நுட்​பங்​கள், சூப்​பர் கணினி தயாரிப்பு உட்பட பல்​வேறு துறை​களில் குவாண்​டம் ஊடுரு​வல் தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படுகிறது.

-விடுதலை நாளேடு,08.10.25

வேதியியலில் புதிய கண்டுபிடிப்புகள் 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிப்பு

 


ஸ்டாக்ஹோம்,அக்.9- உலோக-கரிம கட்ட மைப்பை உருவாக்கிய ஜப்பான், ஆஸி. மற்றும் அமெரிக்க ஆராய்ச்சி யாளர்கள் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் அறி விக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக் கப்பட்டுள்ளது. ஜப்பா னின் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் சுசுமு கிடாகவா, மெல் போர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன் மற்றும் கலி போர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் உமர் எம். யாகி ஆகியோர் உலோக – கரிம கட்ட மைப்பை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். இவர்கள் உருவாக்கிய கட்டமைப்பில் உள்ள பள்ளங்களில் மூலக் கூறுகள் உள்வந்து வெளியே செல்லும். பாலைவனப் பகுதி காற்றிலிருந்து தண்ணீரை எடுக்கவும், தண்ணீரில் உள்ள மாசுக்களை அகற்றவும், கார்பன் டை ஆக்சைடை ஈர்க்கவும், ஹைட்ரஜனை சேமிக்கவும், இந்த உலோக -கரிம கட்டமைப்பை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர்.

வேதியியல் ஆராய்ச்சி யாளர்கள் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வு காண உலோக – கரிம கட்டமைப்பு புதிய வாய்ப்புகளை அளித்துள்ளதால், இந்த கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானி களுக்கும் வேதியிய லுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக ‘தி ராயல் ஸ்வீடன் அறிவியல் அகாடமி’ அறிவித்துள்ளது.

-விடுதலை,09.10.25

சனி, 25 அக்டோபர், 2025

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

 

காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி



காலக்கணக்கின் அளவை மாற்ற வேண்டுமா?– செ.ர.பார்த்தசாரதி

விடுதலை ஞாயிறு மலர்

காலக்கணக்கை, அதாவது உலகம் தோன்றியது, ஞாயிறு (சூரிய) மண்டலம் தோன்றியது, போன்றவற்றின் கணக்கை, புவியின் சுற்றுக்கணக்கை அடிப்படையாக வைத்து கணிக்கிறார்கள். ‘புவியே தோன்றியிராத காலத்தில் நடந்தவற்றை எப்படி பூமியின் சுற்றுக்கணக்கைக் கொண்டு கணிக்க முடியும்?’’. ஆகையால் கணிப்பதில் மாற்றம் வேண்டும்’ என்று சிலர் கூறிவருகிறார்கள்.

எதை கணிப்பதாக இருந்தாலும் ஒரு எல்லை, ஒரு தொடக்கம், ஒரு முடிவு அல்லது ஒரு பொருள் தேவை. எடையை கணிக்க ‘நீர்’ அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளது.

நீரின் ‘லிட்டர்’ அளவும், ‘கிலோ’ அளவும் ஒன்று தான். 1 ஒரு லிட்டர் அளவுள்ள நீர், ஒரு கிலோ எடை இருக்கும். இதை அடிப்படையாக வைத்து;  மற்ற பொருள்களின் எடையை, அதாவது அடர்த்தியை வைத்து கணிக்கிறார்கள்.

வெப்ப நிலையை கணிக்க, செல்சியஸ் அளவு பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியின் உருக தொடங்கும் நிலையை அடிப்படையாக வைத்து, அதிலிருந்து வெப்பநிலையை கணிக்கிறார்கள். அதாவது பனிக்கட்டி உருகத்தொடங்கும் வெப்பநிலை சுழியம் டிகிரி செல்சியஸ் (0°c) ஆகும். நீள, அகலங்களை அளக்க சாண், அடி, முழம் என மனித உறுப்புகளை மய்யமாக வைத்து அளக்கப்பட்டது. கணக்கு போட எண்களை அமைக்க மனிதனின் கைகளில் உள்ள பத்து விரல்களை மய்யமாக வைத்து கணிக்கப்பட்டது. இதற்கு ‘10 அடி மானம்’ என்று பெயர். கணினி ஆன் / ஆப் (இயங்கு நிலை / இயங்கா நிலை) என்ற முறையில் இயங்குவதால், இரண்டடி மானத்தில் இயங்குகிறது.

ஆண்டு கணக்கு பொதுவாக தற்போது கிறிஸ்து பிறப்பை (கிறிஸ்து வாழ்ந்தாரா? இல்லையா? என்பது வேறு செய்தி) மய்யமாக வைத்து கி.மு./ கி.பி. என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.

தமிழர்களின் ஆண்டு ‘சுறவம்’ (தை) மாதத்தில் முதல் நாள் தொடங்குகிறது. அதாவது சூரியன் தென் திசை பக்கமாக இருந்து வடதிசை பக்கமாக செல்லும் நிலையை மய்யமாக வைத்து ஆண்டு தொடங்குகிறது.

அப்போது ஆடு போன்ற ஒத்த வடிவம் உடைய விண்மீன் கூட்டம், வானில் தெரிய தொடங்குவதால் யாரு – ஆடு – ஆண்டு என்ற பெயரும் வந்தது. இந்த குறிகளை மய்யமாக வைத்து, தமிழ் ஆண்டு கணிக்கப்பட்டது.

இயந்திரங்களில், மோட்டார் இயங்கு திறனை, குதிரையின் இழு திறனை மய்யமாக வைத்து, ஒரு குதிரை திறன்; இரு குதிரை திறன்  (Horsepower) என்று கணிக்கப்பட்டது. இதே போல் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். தற்போது இந்த அளவுகள் சிலவற்றில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. வெப்பநிலையை கணிக்க செல்சியஸுக்கு (°c)  பதிலாக, பாரன் ஈட் (°F) முறை பயன்படுத்தப்படுகிறது. அடிக்கு பதிலாக மீட்டர். லிட்டருக்கு பதிலாக கிலோ. ஏ.எம்./ பி. எம். முறைக்கு பதிலாக கிரீன் விச் நேரம் ( GMT ). மயில் என்பதற்கு பதிலாக கிலோமீட்டர். குதிரை திறனுக்கு(HP) பதிலாக கிலோ வாட்சு (KW) என்று பலவற்றை குறிப்பிடலாம். கி.மு./ கி.பி. என்பதற்கு பதிலாக பொ.மு./ பொ.பி. என மாற்றப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த மாறுதல் அனைத்துமே நமது பயன்பாட்டு முறைக்கு எளிதாகவும், ஏற்றால் போல் இருப்பதற்காகவும், மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

செல்சியசில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், பாரன் ஈட்டில் வெப்பநிலையை கணக்கிட்டாலும், வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது; ஒரே விடை தான் வரும். அளக்கும் முறையில் தான் வேறுபாடு, கிறிஸ்தவர்கள் கணித்துள்ள கி.மு. / கி.பி. ஆண்டு கணக்குப்படி (கிரிகோரியன் ஆண்டு) தந்தை பெரியார் பிறந்தது கி.பி. 1879 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஆகும். தமிழ் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டு கணக்குப்படி, தந்தை பெரியார் பிறந்தது தி.பி 1910, புரட்டாசி மாதம். இறந்தது கி.பி. 1973 டிசம்பர், தி.பி. 2004 மார்கழி என்று வரும்.

கிரிகோரியன் ஆண்டு படி கணக்கிட்டாலும் திருவள்ளுவர் ஆண்டு படி கணக்கிட்டாலும் தந்தை பெரியார் வாழ்ந்த ஆண்டுகள் 95 என்று தான் வரும். புத்தர், திருவள்ளுவருக்கு முன்னால் பிறந்திருந்தாலும்; திருவள்ளுவர் ஆண்டின்படி, புத்தர் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார் என்பதை கண்டுபிடித்து விடலாம்.

அதே போல் தான், புவியின் சுழற்சியை கொண்டு, ஞாயிற்று (சூரிய) குடும்பத்தின் வயதை  கணக்கிடும் முறையும் ஆகும். அதாவது ‘ஒளி ஆண்டு’ என்கின்ற அளவை வைத்து கணக்கிடுகின்றனர். புவி  ஞாயிற்றை ({சூரியன்) சுற்றி வரும் காலம், ஓர் ஆண்டு ஆகும். இந்த ஓர் ஆண்டில், ஒளி எவ்வளவு தொலைவு பயணிக்கிறதோ, அது ஓர் ‘ஒளி ஆண்டு தொலைவு’ ஆகும். இந்த பயணத் தொலைவு ஏறக்குறைய 9.46 டிரில்லியன் கிலோமீட்டர் (5.88 டிரில்லியன் மைல்) ஆகும்.

புவியின் சுழற்சி வேகம் மாறுபட்டால் ஒழிய, கணக்கில் பிசகு வராது. அப்பொழுதும் கணக்கில் மாற்றம் செய்து கணக்கை சரிப்படுத்தி விடலாம்.

காலத்தையும் அளவையும் நமக்காகத்தான் பயன்படுத்துகிறோம்! வேற்றுக் கோளில் உள்ளவர்களுக்குமா பயன்படுத்துகிறோம்! அப்படியே பார்த்தாலும் ஈடுகட்டிவிடலாம்,

நிலவின் ஈர்ப்பு விசை, புவியின் ஈர்ப்பு விசையை விட 6 மடங்கு குறைவு. ஒரு மனிதனின் எடை புவியில் 60 கிலோகிராம் என்றால், நிலவில் அவரின் எடை 60/6 = 10 கிலோகிராம் இருக்கும்.

இந்த வகையில் அனைத்தையும் கணித்து விடலாம். இருக்கும் அளவுகளே போதுமானவை தான்.

அறிவியலை ஏமாற்றும் கட்டுக்கதைகள் ‘‘நெருப்பும், அக்னி பகவான் பெற்ற சாபமும்’’-செ.ர.பார்த்தசாரதி



தீ(சுடர்) உண்டாக வேண்டும் என்றால் மூன்று  பொருட்கள் தேவை.

அவை

  1. எரிபொருள்
  2. வெப்பம்
  3. உயிர்வளி (ஆக்சிஜன்) என்பன.

இந்த மூன்று பொருள்கள் ஒன்று சேர்ந்தால் தான் தீ உண்டாகும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

எரிந்து கொண்டிருக்கும் பொருளை அணைக்க வேண்டுமானால். எரியும் பொருளின் வெப்பத்தை குறைக்க வேண்டும். அதற்காக தண்ணீர் அல்லது தண்ணீரால் நனைக்கப்பட்ட பொருள் கொண்டு அணைக்கலாம். (குளிர்விக்கும் முறை)

அடுத்தது உயிர்வளி எனப்படும் ஆக்சிஜன் கிடைப்பதை தடை செய்ய வேண்டும். தீயை மூட வேண்டும் அல்லது கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) எனப்படும் கரியமில வளியினை படரவிட்டு அணைக்க வேண்டும். (போர்வை முறை)

பெரிய அளவில் எரிந்து கொண்டிருக்கும் போது; தீ மேலும் பரவாமல் இருக்க, பக்கத்தில் உள்ள எரிபொருளை அப்புறப்படுத்த வேண்டும். (‘தீ’க்கு பட்டினி போடும் முறை)

  பூமியில் மட்டுமே தீ

நமது புவியில் மட்டுமே எளிதில் தீ உண்டாகும். மற்ற கோள்களிலோ விண்மீன்களிலோ, பால்வெளி மண்டலங் களிலோ (கேலக்சி) கூட தீ உண்டாகாது. நம் புவியில் மட்டுமே உயிர்வளி (ஆக்சிஜன் )உள்ளது. அதனால் இங்கு எளிதில் தீ உண்டாகின்றது

அதோடு மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் (காற்றில்) ஒரு குறிப்பிட்ட அளவில் உயிர்வளி இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தீ உண்டாகும். நமது வளிமண்டலத்தில் 20.95% உயிர்வளி உள்ளது. இது தீ உண்டாக போதுமான அளவு ஆகும்.

கட்டுரை, ஞாயிறு மலர்

தற்போது உள்ள இந்த விழுக்காட்டிற்கு, அதாவது 25%க்கு மேல் உயிர் வளி இருந்தால்  தற்போதுள்ள சாதாரண வெப்பநிலையிலேயே தானாகவே தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டுவிடும். 15%க்கு கீழ் உயிர்வளி குறைந்தால் தீ அணைந்து விடும். தீயை உண்டாக்க முடியாது.

வெப்பம் எப்படி உண்டாகிறது?

வெப்பம் உண்டாக உராய்வு மட்டுமே போதும். இரண்டு பொருள்கள் உராயும்போது வெப்பம் உண்டாகிறது. அதேபோல் பொருள்கள் வினை புரியும்போதும் உராய்வு ஏற்பட்டு வெப்பம் உண்டா கிறது.

கட்டுரை, ஞாயிறு மலர்

மின் விளக்கு எரிகிறது என்று சொல்கிறோம் ஆனால் உண்மையில் மின்விளக்கு எரிவதில்லை. வெப்பத்தையும் ஒளியையும் உமிழ்கிறது.

மெழுகுவர்த்தி, எண்ணெய் விளக்கு போன்றவற்றை எரிய விட்டுக் கொண்டு இருந்த நாம், பழக்கத்தின் பேரில் மின் விளக்கையும் எரிகிறது என்கிறோம். ஒளிர்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 ‘அக்னி பகவான்’
பெற்ற சாபமாம்

சிவபெருமான் இமய மலையின் உச்சியில், தன் மனைவி பார்வதியுடன் 100 தேவ ஆண்டுகள் உல்லாசமாக இருந்து, உடலுறவு இன்பத்தில் ஈடுபட்டு வந்தானாம்; இதனிடையே அக்னி பகவான் ‘புறா’ உருவம் கொண்டு அந்த இடத்திற்கு சென்று சிவபெருமானின் லீலைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் சிவனின் விந்து நழுவி வீணானதாம். அதனால் பார்வதிதேவி தனக்கு குழந்தை பிறக்க விடாமல் செய்த அக்னி பகவானை “அக்னி(தீ)க்கு சயரோகம் (எலும்புருக்கி நோய்) பிடித்தது போல் உடன் புகையும் ஒரு பகுதியாக சேர்ந்து வரும்.”என்று சபித்து விட்டாளாம். அதனால் தான் தீ எரியும் போது புகையும் சேர்ந்து வருகிறதாம்.  காளிதாசர் இயற்றிய ‘’குமாரசம்பவம்’’ சருக்கம் – 10இல் இந்த கதை கூறப்பட்டுள்ளது.

உண்மையில் புகை எதனால் ஏற்படுகிறது

நீரை சூடு படுத்தும் போது நீரிலிருந்து நீராவி வெளி வருகிறது. இதுவும் ஒரு வகை புகை தான். நீரில் இருந்து வெளி வருவதால் அதை நாம் வேறுபடுத்தி நீராவி என்று சொல்கிறோம்.

 ஒகேனக்கல்

தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்று ஒரு சுற்றுலா இடம் உள்ளது. ஒகேனக்கல் என்பது கன்னட மொழி பெயர். ‘ஒகனே’ என்றால் புகை. அதாவது ‘புகையும் கல்’ என்று பொருள். கல்லின் மீது நீர் மோதி சூடாகி, புகை போன்ற ஒரு நீர்த்துளிகளை உண்டாக்குகிறது. இதைத்தான் புகை என்கின்றனர்.

நாம் நடைமுறையில் புகை என்று சொல்வதைப் பற்றி பார்ப்போம்.

பொருட்கள் எரியும் போது தொடர்வினை ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து எரிகிறது. இதனால் இந்த பொருளில் உள்ள கரி, நீர் ஆகியவை ஆவி வடிவில் வெளியேறுகின்றன. அதாவது கரித்துகள், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் நீராவி கலந்த ஒரு பொருள் வெளியேறுகிறது இவைதான் கருநிற புகையாக தெரிகிறது.

பொருள் முழுமையாக எரிக்கப்பட்டால் புகை வருவதே தெரியாது. அரைகுறையாக எரிக்கப்படும் போது தான் புகை வருகிறது.

இந்த அறிவியல் உண்மை தெரியாத காலத்தில் மதத்தின் பெயரால் முட்டாள்தனமாக கருத்துகளை பரப்பியுள்ளனர். இதுபோன்ற கருத்துகளை மதவெறியர்கள் எப்படியாவது பாட புத்தகங்களில் சேர்த்துவிடலாம் என்று முயன்று வருகின்றனர்.

-விடுதலை ஞாயிறு மலர், 25.10.2025