வியாழன், 15 மே, 2025

கனிமங்கள் உருவானது எப்போது?


அறிவியல் அரங்கம்

'நாசா'வின் மூத்த ஆய்வாளரான டாக்டர் பாவ்னா லால், பல கோடி ஆண்டுகள் பழமையான மர்மம் ஒன்றை விடுவிக்க உதவியுள்ளார்.

அதாவது, பேரண்டம் உருவான போதே, தங்கம் தோன்றிவிட்டது. ஒரு புதிய ஆய்வில், அவரும் அவரது சகாக்களும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற கனமான தனிமங்கள், பூமி உருவாகும் முன்பே நிகழ்ந்த பண்டைய நிகழ்வுகள் நியூட்ரான் நட்சத்திரங்களின், கொடூரமாக மோதி இணைந்த போதே உருவானதைக் கண்டறிந்துள்ளனர்.

ஈர்ப்பு அலை ஆய்வகங்கள் மற்றும் விண்வெளி தொலைநோக்கிகளில் இருந்து கிடைத்த தரவுகளைப் பயன்படுத்தி 'லால் குழுவினர்' ஆய்வு செய்தனர். பேரண்டத்தில் நிகழ்ந்த கொடூர மோதல்கள், எப்படி தங்கம் போன்ற உலோகங்களை, விண்மீன் திரள் முழுவதும் சிதறடித்தன என்ற லாலின் குழு மறுசித்திரிப்பு செய்து காட்டியுள்ளது.

பல யுகங்களாக, இந்த நட்சத்திர குப்பைகள், வாயு மேகங்களுடன் கலந்து, இறுதியில் கோளாக இறுகின. அதன் பின், அரிய உலோகங்கள் நகைகள், மின்னணுவியல் பொருட்கள் மற்றும் நாணயங்களாக உருமாறியுள்ளன.

செவ்வாய், 13 மே, 2025

பறவைகள் (நிறத்தை) பகுத்துப் பார்க்கும்!


விடுதலை நாளேடு
அறிவியல் அரங்கம்

 தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தன. சுவீடனைச் சேர்ந்த லண்ட் பல்கலைக்கழகம் அதற்கான விடைகளைக் கண்டுபிடித்துள்ளது.

லாண்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் டான் எரிக் நில்சன், “மனிதர்களின் பார்வை சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களை கொண்டது. பறவைகளுக்கு இவற்றோடு கூடுதலாக புறஊதா நிறங்களையும் காண முடியும். உதாரணத்திற்கு, அடர்த்தியான வனத்தில் நம்மால் பச்சை நிறத்தில் மட்டுமே இலைகளை மட்டுமே காண முடியும். ஆனால் பறவைகளால், இலைகளின் மேற்புறம் மங்கலான பச்சையையும், கீழ்புறம் அடர்த்தியான பச்சையையும் வேறுபடுத்திக் காண முடியும். இதன் மூலம் தன் உணவுகளைச் சேகரிப்பதில் தொடங்கி, லாகவமாகப் பறப்பது வரை தன்னைக் கட்டமைத்துக் கொள்கின்றன. இப்படி வேறுபட்ட வண்ணங்களில் பறவைகளால் பார்க்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை” என்றார்.

இந்த ஆராய்ச்சிக்காகவே பிரத்யேக கேமராவை லண்ட் விஷன் குரூப் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம், பறவைகள் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த விலங்குகளின் திறனையும் கண்டறிய முடியுமா. நமது கற்பனைக்கும் எட்டாத நிறங்களில் விலங்குகள் உலகைக் காண்கின்றன என்று லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வியக்கிறார்கள்.

ஞாயிறு, 23 மார்ச், 2025

ஒரு குழந்தை திருநங்கையாக எப்படி பிறக்கிறது?

 


விடுதலை நாளேடு
கட்டுரை, ஞாயிறு மலர்

திருநங்கைகளை (Transgender) நமது சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை ஒன்று அவர்களை வெறுக்கிறோம் இல்லை ஒதுக்கி வைக்கிறோம்,இதற்கு காரணம் அவர்களைப்பற்றிய புரிதல் நம்மிடையே இல்லாததே, ஒரு ஆணோ இல்லை பெண்ணோ இவ்வுலகில் வாழ எந்த அளவு உரிமையுள்ளதோ அதேயளவு உரிமை திருநகைகளுக்கும் உண்டு. இயற்கையான முறையில் ஒரு குழந்தை பிறக்க ஆணும் பெண்ணும் தாம்பத்ய உறவு கொள்ள வேண்டும் இதனால் கரு உருவாகி சிறிது சிறிதாக வளர்ந்து பத்து மாதத்தில் குழந்தை பிறக்கிறது.

ஆனால், மூன்றாம் பாலினத்தவர் பிறப்பு என்பது நாம், நினைப்பது போன்று இது கடினமான விடயம் இல்லை, பொதுவான விடயம்தான். பிறக்கும்போது ஆணாக இருக்கும், சிலர் பிற்காலத்தில் ஆணாகவே இருப்பதில்லை. அதேபோல பிறக்கும் போது பெண்ணாக இருக்கும் சிலரும் பெண்ணாகவே தொடருவதும் இல்லை. அவர்கள் திருநங்கை அல்லது திருநம்பி என்று அறியப்படுகின்றனர். இதை மருத்துவத்தில் AFAB மற்றும் AMAB என்ற குறிப்பிடப்படுகிறது. அதாவது “assigned female/male at birth” என்பதே விரிவாக்கம்.

மனித உடலில் ஒவ்வொரு செல்களிலும் 46 குரோமோசோம்கள் இருக்கும். குரோமோசோம் என்பது மனித உடலை பற்றிய தகவல் அடங்கிய மூலக்கூறு. இந்த 46 குரோமோசோம்களும் 23 ஜோடிகளாவே இருக்கின்றன. இதில் முதலில் இருக்கும் 22 ஜோடி குரோமோசோம்களை ஆட்டோ சோம் என்று குறிப்பிடுகின்றனர். இது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். 23ஆவது ஜோடி குரோமோ சோமானது பாலியலை முடிவு செய்யும் குரோமோசோமாக. 23ஆவது குரோமோசோம் ஆணாக இருந்தால் XY என்றும், பெண்ணாக இருந்தால் XX என்றும் இடம்பெறுகிறது.

பெண்ணின் கருமுட்டையில் XX குரோமோசோம் மட்டும் இடம்பெற்றிருக்கும். அதுவே ஆண்ணின் விந்தணுவில் XY குரோமோசோம்கள் இருக்கும். அதில் எந்த குரோமோசோம் கருமுட்டையுடன் இணையுமோ, அதுவே குழந்தையின் பாலினமாக அமைகிறது.
ஒரு கரு உருவாகி 7ஆவது வாரத் திலிருந்து, 12-ஆவது வாரத்துக்குள் அது ஆணா இல்லை பெண்ணா என்பது முடிவாகிறது. உடலில் இருக்கும் proto gonads என்ற சதை அமைப்பு, பெண்ணுறுப் பாகவோ வளர்ச்சியடையும். XY குரோமோ சோம் கொண்ட சில குழந்தைகளில் Y குரோமோசோம் 7 வாரங்கள் கடந்தும் பாலின உறுப்பு வளர்ச்சியடையாமல் அப்படியே இருக்கும். அப்படி இருந்தால், அது பெண்ணுறுப்பு வளரத்தொடங்கும். அந்த குழந்தை பிறக்கும் போது நமக்கும், பெண் குழந்தையாகவே தெரியும். அந்த குழந்தைகள் வளர வளர ஆண்களின் குணம் வெளிப்படும். அவர்களே திருநம்பியாக மாறுகின்றனர்.

ஒரு பெண்ணின் x குரோமோசோம் ஆணின் x குரோமோசோமை சந்திக்கும் போது, ​​பெண் கரு உருவாகிறது. அதேசமயம் ஒரு பெண்ணின் x குரோமோசோமும் ஆணின் y குரோமோசோமும் சந்திக்கும் போது ஆண் கரு உருவாகிறது. அதேசமயம் குரோமோசோம்களில் கோளாறு ஏற்படும் போது, ​​மூன்றாம் பாலின கரு உருவாகிறது.

அறிவியலின்படி, கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில், ஆண் மற்றும் பெண் கருவின் பிறப்புறுப்புகள் ஒரே திசுக்களில் இருந்து உருவாகின்றன. இதில், ஆண்களின் இனப்பெருக்க திசுக்களில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் முக்கிய மானது. ஆண்குறி அதன் அளவு அதிகமாக இருக்கும்போது மட்டுமே உருவாகிறது.

அதேசமயம் ஸ்க்ரோட்டம் மற்றும் ஆண்குறி சிறுநீர்ப்பை ஆகியவை கருவை பெண்ணாக ஆக்குகின்றன. ஆனால் இவை திருநங்கைகளின் கருவில் தொந்தரவு அடைகின்றன. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் குறைபாடுதான் திருநங்கை களின் பிறப்புக்குக் காரணம். ஆண் இனப் பெருக்க உறுப்பு ஆரம்பத்தில் முழுமையாக வளர்ச்சியடையாததால் இது நிகழ்கிறது. ஆண் குழந்தை சிறிய ஆணுறுப்புடனும் டெஸ்டிஸுடனும் பிறப்பதற்கு இதுவே காரணம்.

மாற்றுத்திறனாளி குழந்தை பிறந்ததற்கான காரணம் வளர்சிதை மாற்றக் கோளாறு. இது பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளாசியா எனப்படும் அசாதாரண குரோமோசோம்களால் நிகழ்கிறது. குரோமோசோம் கோளாறுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மரபணு கோளாறுகள் காரணமாக இது நிகழலாம்.

புதன், 19 மார்ச், 2025

பூமிக்கு அருகே இன்னொரு பூமி ‘சூப்பர் எர்த்’

அறிவியல் அதிசயம்! பூமிக்கு அருகே இன்னொரு பூமி ‘சூப்பர் எர்த்’

விடுதலை நாளேடு
அறிவியல் அரங்கம்

 பூமிக்கு அருகே ‘மற்றொரு உலகத்தை’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது 647 நாள்களில் நட்சத்திரத்தை சுற்றி வருவதாக சொல்லப்படுகிறது.

பூமியில் வாழும் உயிரினங்களுக்கு வாழ்க்கை சூழலை வழங்கக்கூடிய ஒரு கோளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியை போன்று உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த கோள் பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் மட்டுமே உள்ளது. இது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. இந்தக் கோள் நம் பூமியை போன்றே ஒரு வளிமண்டலத்தை கொண்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இது சூப்பர்-எர்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது HD 20794 d என பெயரிடப்பட்டுள்ளது.

சூரியனை விட சிறியது

இது அதன் நட்சத்திரத்தைச் சுற்றி 647 நாள்களில் ஒரு சுற்றுப்பாதையை முடிக்கிறது. இதில் தண்ணீர் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. இந்த கண்டுபிடிப்பை இன்ஸ்டிடியூட்டோ டி ஆஸ்ட்ரோஃபிசிகா டி கனாரியாஸ் (IAC) மற்றும் யுனிவர்சிடாட் டி லா லகுனா (ULL) உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த சூப்பர்-எர்த் அதன் நட்சத்திரமான HD 20794 இன் வாழக்கூடிய மண்டலத்தில் சுற்றி வருகிறது. இது HD 20794-அய் சுற்றி வரும் முதல் கோள் அல்ல. நமது சூரியனை விட சற்று சிறியதாக இருக்கும் இந்த நட்சத்திரம், பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை தூண்டி வருகிறது. அவர்கள் ஏற்கெனவே அதைச் சுற்றி வரும் இரண்டு கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவை சூப்பர்-எர்த்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன.

20 ஆண்டுகளுக்கு பிறகு…

இந்த வெளிப்பாடு 20 ஆண்டு அவதானிப்புகளுக்குப் பிறகு வந்துள்ளது. மேலும் இது பூமி போன்ற கோள்களின் வளிமண்டலத்தை இன்னும் விரிவாக ஆய்வு செய்வதற்கான கதவுகளைத் திறந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு சமீபத்தில் வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் வெளியிடப்பட்டது. பூமிக்கு வெளியே உயிர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடலின் அடிப்படையானது சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் வாழக்கூடிய மண்டலங்களில் அமைந்துள்ள கோள்களைக் கண்டுபிடிப்பதாகும். பூமியில் உயிர்கள் பிறப்பதற்கு உதவும் ஒத்த நிலைமைகள் பற்றியும் விஞ்ஞானிகள் அறிந்து கொள்ளலாம்.

புதிய சூப்பர்-எர்த் பற்றி HD 20794 d புதிய சூப்பர்-எர்த் பூமியை விட ஆறு மடங்கு நிறை கொண்டது. இது 647 நாட்களில் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையை முடிக்கிறது. இது சூரியனைச் சுற்றியுள்ள செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையை விட 40 நாட்கள் மட்டுமே குறைவாக இருப்பதால், இது வாழக்கூடிய மண்டலத்தில் வைக்கிறது. இந்த மண்டலத்தில் அமைந்துள்ள கோள்கள் அவற்றின் நட்சத்திரத்திலிருந்து ஒரு சிறந்த தொலைவில் உள்ளன. இது நீர் இருப்புக்கு சாதகமான சூழ்நிலைகளை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது.

திங்கள், 18 நவம்பர், 2024

மனித உடலிலுள்ள ஒரு உயிரணுவின் ஆயுள் காலம் எத்தனை நாட்கள்?

மனித உடலிலுள்ள வெவ்வேறு உடல்பாகங்களின் செல்கள் வெவ்வேறு ஆயுட்காலங்களை கொண்டிருக்கின்றன. என்ன உடல் பாகம் அவற்றின் ஆயுள் எவ்வளவு என்பதற்கான அட்டவணை கீழே!

சில செல்களைத் தவிர்த்து, மற்ற அனைத்துமே ஆயுட்காலத்தில் புதிதாய் மாற்றப்பட்டு விடுகின்றன. உங்கள் மூளையைத் தவிர, கண்களின் செல்களைத்தவிர, நீங்கள் இறக்கும் போது நீங்கள் பிறக்கும்போது இருந்தவரில்லை.

-மகிழ்நலன் மாணிக்கம் , வேதியலில் இளமஅறிவியல், இலயோலா கல்லூரி, தமிழ்நாடு

சனி, 26 அக்டோபர், 2024

பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களும் இனி உலகைப் பார்க்கலாம்

 by சரவணா இராஜேந்திரன்

அறிவியல் சாதனை: பிறவியிலேயே பார்வை இல்லாதவர்களும் இனி உலகைப் பார்க்கலாம்

7

மனித உடலின் அனைத்து இயக்கங்களும் நரம்புகளைச் சார்ந்தே இருக்கின்றன. சிரிப்பு, வலி, அழுகை, பார்ப்பது, கேட்பது, பேசுவது, உணர்வது என அனைத்துமே.
கேட்டல் எப்படி நடக்கிறது என்றால், ஓலி காதை வந்து அடைகிறது. காதின் உள்ளே உள்ள மிகச் சிறிய சுத்தியல் எலும்பில் பட்டு அதிர்வடையச் செய்கிறது. அந்த அதிர்வலையை அங்கு உள்ள திரவத்திற்கு அனுப்புகிறது அந்தத் திரவத்திலுள்ள நரம்பு செல்கள் அந்த அதிர்வுகளை மூளைக்கு அனுப்பும். மூளை அந்த ஒலிக்கான பொருளை நமக்கு உணர்த்தும்.

எடுத்துகாட்டாக ஆசிரியர் பாடம் நடத்துகிறார் என்றால், அவரது பேச்சு நம் காதை அடைந்த பிறகு அந்த ஓசை நரம்புமண்டலம் வழியாக மூளைக்குச் சென்று, பிறகு நமக்கு அந்தப் பாடங்கள் இன்னது என்று தெரியவருகிறது. இவை எல்லாம் அவ்வளவு விரைவாக நடக்கின்றன.
காது கேளாதவர்களுக்கான கருவிகளை நாம் பார்த்திருக்கிறோம். நொடிப் பொழுதுக்குள் இப்போது பிறவியிலேயே காதுகேளாதவர்கள் கூட கேட்கும் திறனைப் பெற முடியும். எப்படி என்றால், சிலருக்குப் பிறவியிலேயே மேலே கூறிய சுத்தியல் எலும்பு, திரவம், நரம்புக்கற்றை போன்றவை சரியான வளர்ச்சி அடையாமல் இருக்கும் அல்லது அவை இல்லாமல் கூட இருக்கும்
அந்தப் பணியைச் செயற்கைக் கருவி செய்து காதுப் பகுதியில் உள்ள நரம்புகள் வழியாக மூளைக்குக் கொண்டு செல்கிறது.

அதானால்தான் கடந்த 20 ஆண்டுகளாக செவித்திறன் இழந்தோர் அனைவருமே கேட்கும் ஆற்றலைச் செயற்கையாகப் பெறுகின்றனர்.
கிட்டத்தட்ட கண் பார்வைக்குள்ள தொழில் நுட்பமும் இதே போன்றுதான்.
மனிதனின் கண் சுமார் 2.5 செ.மீ. விட்டம் கொண்ட ஒரு விழிக்கோளமாகும். இந்த விழிக் கோளமானது வெளி, மய்ய, உள் என மூன்று அடுக்குகளால் ஆனது. வெளி அடுக்கில் ஒளி ஊடுருவக்கூடிய விழி வெண் படலமும், ஒளி ஊடுருவாத விழி வெளிப் படலமும் உள்ளன.
மய்ய அடுக்கில் விழியடி கரும்படலம், சிலியாத் தசைகள், அய்ரிஸ், கண் பாவை, விழி லென்ஸ் ஆகியவை உள்ளன. உள் அடுக்கில் உணர் செல்களையுடைய விழித்திரை உள்ளது. விழி லென்ஸுக்கும் விழி வெண் படலத்துக்கும் இடையே முன் கண் ரசம், விழி லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையே பின் கண் ரசம் ஆகிய திரவங்கள் உள்ளன.

பொருள்களிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் கண் பாவை வழியே சென்று விழி லென்ஸின் மீது பட்டு விலகலடைந்து தலைகீழான சிறிய மெய்ப் பிம்பத்தை விழித் திரையில் விழச் செய்கின்றன. இப்பிம்பத்தினை ஒளி உணர்வுச் செல்கள் பார்வை நரம்புகள் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்கின்றன. மூளை நாம் காணும் காட்சியை உள்ளது உள்ளவாறே நமக்கு நோக்கிக் காட்டுகிறது.
இதுதான் நமது கண்ணின் செயல்பாட்டுத் தொழில் நுட்பம். இங்கு கண் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உணர் கருவி, இந்தக் கண் பாதிக்கப்பட்டாலோ, அல்லது பார்வைத் திறன் இல்லாமல் போனாலோ எதையுமே காண முடியாது.
காது மற்றும் கண் இரண்டுக்குமே அந்த அந்த நரம்புகள் தான் மூளைக்குக் கொண்டுசெல்லும்
இந்த நிலையில் பிறவியிலேயே விழி இல்லாமல் பிறப்பவர்கள், விழி இருந்தும் பார்வை இல்லாமல் பிறப்பவர்கள், விபத்து மற்றும் சில நோய்களால் பாதிக்கப்பட்டு பார்வைத்திறனை இழந்தவர்கள் ஆகிய எல்லோருக்கும் தற்போது பார்வைத்திறனைக் கொண்டுவரும் தொழில் நுட்பம் வந்துவிட்டது.
நியூராலிங்க் நிறுவனத்தின் ‘பிளைன்ட்சைட்’ கருவி மூலம் இரண்டு கண்களையும், ஆப்டிக் நரம்புகளையும் இழந்தவர்களும் கூட பார்க்க முடியும்.

இந்த அறிவியல் நுண்ணுணர்வுக் கருவி பொதுவாக நாம் இயல்பாகப் பார்ப்பதை விட அதிகத் திறன் கொண்டது. பொருளைப் பெரிது படுத்திப் பார்க்கலாம். பார்ப்பதைச் சேமித்து வைக்கலாம். மனதில் கற்பனையாக நினைக்கும் ஒன்றை இந்தக் கருவி மூலம் கண்ணெதிரில் கொண்டுவரலாம். அதை (Printer) அச்சுப்பதிவுக் கருவியோடு இணைத்து அச்சு எடுத்து; பிறருக்கும் கொடுக்கலாம்.
இது பற்றி இந்த நிறுவனம் கூறும் போது, இயற்கையாக இருக்கும் பார்வைத் திறனை விட சிறப்பாக இதன் தொழில்நுட்பம் இருக்கும் என்றும், இந்தக் கருவில் பல்வேறு நவீன வசதிகளுடன் மின்கலத்தால் இயங்கும் வசதிகொண்டது என்றும், பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள் இதை அணிந்துகொண்டால் நம்மை விட அவர்கள் மிகத் தெளிவாக உலகைப் பார்ப்பார்கள் என்றும் விளக்கியுள்ளது.
பார்வைத்திறன் இழந்தவர்களுக்குக் கைகளில் லென்ஸ் கருவியைப் பொருத்தி அவர்கள் பொருட்களைப் பார்க்கும் தொழில் நுட்பத்தையும் உருவாக்கி உள்ளனர். இதைக் கொண்டு பிறவிப் பார்வையற்ற சிலர் ஆல்ப்ஸ் மலைமீது ஏறிச் சாதனை படைத்துள்ளனர். தற்போது வந்துள்ள கருவி நவீன வடிவமைப்பில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அணியக்கூடிய மூக்குக்கண்ணாடி வடிவில் வந்துவிட்டது, இதன் மூலம் இனி எதிர்காலத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகள் என்கிற ஒரு குறைபாடு முற்றிலும் இல்லாமல் போய்விடும்
தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கு உலகமயமாதலை அறிவியல் உணர்த்துகிறது அல்லவா?

  •  
  •  
  •  
  •  

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

பூமியைச் சற்றியுள்ள மூன்றாவது புலம்!

 விடுதலைஞாயிறு மலர்

பூமியில் அனைத்தையும் ஆட்டுவிக்கும் ‘மூன்றாவது சக்தி’ கண்டுபிடிப்பு

பூமியைச் சுற்றியுள்ள மூன்றாவது புலத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இக்கண்டுபிடிப்பு பூமி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்க கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
விஞ்ஞானிகள் மூன்றாவது புலத்தை “குழப்பங்களின் முகவர்” என்று விவரிக்கின்றனர்.
இது பூமியைச் சுற்றியுள்ள “இருமுனை புலம்” (ambipolar field). நாசாவின் எண்டூரன்ஸ் ஆய்வுத் திட்டத்தின் மூலம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூமி எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்க இந்த தொலைதூர புலம் இன்றியமையாத அங்கம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது அதனை முதல் முறையாக அளவிட்டுள்ளனர்.
இதுவரை, நமது பூமிக்கோள் இரண்டு தனித்துவமான ஆற்றல் புலங்களை உருவாக்குவதாக அறியப்பட்டு வந்தது. முதலாவது புவி ஈர்ப்பு புலம் (gravitational field). இது நமது வளிமண்டலத்தை பூமியுடன் கெட்டியாக பிடித்து வைத்துள்ளது. போதுமான புவியீர்ப்பு விசை இல்லை என்றால், வளிமண்டலம் பூமியை விட்டு வெளியேறிவிடும்.
இரண்டாவது புலம் காந்தப் புலம் (magnetic field). இது நமது பூமிக் கோளை சூரியக் காற்றிலிருந்து பாதுகாக்கும் கவசமாக செயல்படுகிறது.

தற்போது, ஆராய்ச்சியின் பலனாக, மூன்றாவது புலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை `ஆம்பிபோலார்’ என்கின்றனர்.
ஆம்பிபோலார் புலம், புவியீர்ப்பு விசைக்கு எதிர் செயல்பாட்டைக் கொண்டிருப்பதால், துகள்களை விண்வெளியை நோக்கி தள்ளுகிறது. இது புவி ஈர்ப்பு மற்றும் காந்தப் புலங்களைப் போலவே இன்றியமையாதது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பழைய அனுமானம்
ஒரு ஆம்பிபோலார் மின்சார புலத்தின் இருப்பு பற்றிய கற்பனை முதன் முதலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.
இந்த புலம் நமது பூமிக் கோளின் வளிமண்டலத்தை பூமியின் வடக்கு மற்றும் தென் துருவங்களுக்கு மேலே உள்ள விண்வெளிக்குள் நுழையச் செய்யும் என்று நம்பப்பட்டது.
“ஒவ்வொரு முறையும் ஒரு விண்கலம் பூமியின் துருவங்களுக்கு மேல் பறக்கும்போது, துருவக் காற்று (polar wind) எனப்படும் இந்த சூப்பர்சோனிக் காற்று, விண்வெளியில் பாய்வதை நீங்கள் உணர்வீர்கள்” என்று நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மய்யத்தில் என்ட்யூரன்ஸ் ராக்கெட் பயணத்தின் முதன்மை ஆய்வாளர் க்ளின் கொலின்சன் கூறினார்.
“இந்த சூப்பர்சோனிக் காற்று விண்வெளியை நோக்கி பாய்வதற்கு காரணமான ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி அங்கே இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. ஆனால் எங்களிடம் தொழில்நுட்பம் இல்லாததால் இதற்கு முன்னர் அதை அளவிட முடியவில்லை”என்று நேச்சர் இதழில் இந்த கண்டுபிடிப்பு குறித்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் கொலின்சன் கூறுகிறார்.

இந்த கண்ணுக்குத் தெரியாத சக்தி எதைப் பற்றியது என்பதை பகுப்பாய்வு செய்ய, ஆராய்ச்சியாளர்கள் குழு என்டூரன்ஸ் ஆய்வுத்திட்டத்தை உருவாக்கியது. மே 2022 இல் அவர்கள் அதை நார்வேயின் வடக்கே உள்ள சிறிய தீவான ஸ்வால்பார்டில் (Svalbard) இருந்து ராக்கெட்டை செலுத்தினார்கள்.
“துருவக் காற்றின் வழியாகப் பறந்து நமக்குத் தேவையான அளவீடுகளைச் செய்யக்கூடிய உலகின் ஒரே ராக்கெட் தளம் ஸ்வால்பார்ட்” என்று பிரிட்டனில் உள்ள லெய்செஸ்டர் பல்கலைக் கழகத்தின் விண்வெளி இயற்பியலாளரும் ஆய்வின் இணை ஆசிரியருமான சுசி இம்பர் கூறினார்.

எண்டூரன்ஸ் 768 கிலோமீட்டர் உயரத்தை அடைந்து 19 நிமிடங்களுக்குப் பிறகு கிரீன்லாந்து கடலில் விழுந்தது.
பதினைந்து நிமிட சப்ஆர்பிட்டல் பயணத்தின் போது, என்டூரன்ஸ் வெறும் 0.55 வோல்ட் என்ற அளவில் மின்சாரத் திறனில் ஏற்பட்ட மாற்றத்தை பதிவு செய்தது.
“அரை வோல்ட் என்பது மிகச் சிறிய அளவு. அதாவது கைக்கடிகாரங்களின் சிறிய பேட்டரிகளில் இருக்கும் அதே சக்தியின் அளவு தான்” என்று கொலின்சன் விளக்குகிறார்.
“ஆனால், துருவக் காற்று வெளியேறுவதை விளக்குவதற்கு இதுவே போதுமான அளவு” என்று அவர் மேலும் விவரித்தார்.

ஈர்ப்பு விசைக்கு எதிரான செயல்பாடு
துருவக் காற்றில் மிகவும் பரவலாக காணப்படும் துகள்களான ஹைட்ரஜன் அயனிகள், புவியீர்ப்பு விசையை விட 10.6 மடங்கு வலிமையான வெளிப்புற விசையை இந்த ஆம்பிபோலார் புலத்திலிருந்து எதிர்கொள்கின்றன.
புவியீர்ப்பு விசைக்கு எதிராக செயல்பட அந்த ஹைட்ரஜன் துகள்கள் போதுமானது என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகிறார்கள். சூப்பர்சோனிக் வேகத்தில் அந்த துகள்களை விண்வெளியில் செலுத்த இது போதுமானது என்று கருதுகின்றனர்.
அடிப்படையில், ஆம்பிபோலார் புலம், மேல் வளி மண்டலத்தின் ஒரு அடுக்கான அயனோஸ்பியரை வடிவமைக்கிறது.
“இது ஒரு கன்வேயர் பெல்ட் போன்றது, இது இந்த வளிமண்டலத்தை விண்வெளியை நோக்கி தள்ளுகிறது” என்று கொலின்சன் விளக்குகிறார்.

இந்த புலம் “அம்பிபோலார்” (இருமுனைப் புலம்), ஏனெனில் அது இரு திசைகளிலும் செயல்படுகிறது. அயனிகள் எலக்ட்ரான்களை கீழ் நோக்கித் தள்ளி புவி ஈர்ப்பு விசைக்கு உட்படுத்துகின்றன. அதேநேரத்தில், விண்வெளியை நோக்கிச் செல்ல முயற்சிக்கும் எலக்ட்ரான்கள், அயனிகளை மேல் நோக்கி தள்ளுகின்றன.
கூடுதலாக, இது நமது மேல் வளிமண்டலத்தில் உள்ள சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை அவற்றின் இயல்பை விட அதிக உயரத்திற்கு தள்ளுகிறது.

இது நமது பூமிக் கோளின் உருவாக்கம் பற்றி இன்னும் கண்டுபிடிக்கப்படாத விஷயங்களுக்கு துவக்கப் புள்ளியாக அமையலாம்.
என்டூரன்ஸின் இந்த கண்டுபிடிப்பு, பல கேள்விகளை எழுப்புகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, இந்த புலத்தின் சரியான செயல்பாடு என்ன? அது நமது பூமிக் கோளை எவ்வாறு வடிவமைத்துள்ளது? போன்ற கேள்விகள் எழுகின்றன.

க்ளின் க்ளிலின்சனின் கூற்றுப்படி, ஆம்பிபோலார் புலம் வளிமண்டலத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் மற்றும் ஒருவேளை கடல் நீரோட்டங்களையும் பாதித்திருக்கலாம் என்கிறார்.
இன்னும் பல விடை தெரியாத கேள்விகள் இருந்தாலும், பூமியின் இந்த மூன்றாவது ஆற்றல் புலம் முதன்முறையாக அளவிடப்பட்டது என்பது ஆய்வுக்கு பல புதிய வழிகளைத் திறக்கிறது.
“வளிமண்டலத்தைக் கொண்ட எந்தக் கோளும் இருமுனைப் புலத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்று கொலின்சன் கூறுகிறார்.
“இப்போது நாம் இறுதியாக அதை அளந்துவிட்டோம், காலப்போக்கில் அது நமது கோளையும் பிற செயல்பாடுகளையும் எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை அறிய முற்படுவோம்” என்று அவர் விவரித்து முடித்தார்.